Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 12

இடைவெளி 12 (நிறைவு)

தேனிலவு தித்திப்பாய் முடிய, விமான நிலையத்தில் வந்திறங்கிய ராமையும் சாதனாவையும் அழைக்க மாதவன் வந்துவிட்டான்.

“என்னடா ஜொலிக்கிற?” என்று ராமின் இடுப்பில் கிள்ளியபடி உற்சாகம் பொங்க கேட்டான் மாதவன். இருவரையும் ஜோடியாகப் பார்க்க அவனுக்கு மிகுந்த நிம்மதியானது.

“சொன்னா புரியாது மச்சான்” என்று மாதவனை ராம் வெறுப்பேற்றினான்.

“ஓஹ், போன் செஞ்சா எடுக்கல?” என்று அடுத்துக் கேட்க

“நான் ரொம்ப பிஸீ” என்றான்.

ராமை சட்டென கட்டிக்கொண்ட மாதவன், “உன்னைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இரண்டு மாசமா அழுக்கு மூஞ்சியா கிடந்த மாமா இன்னிக்கு அழகு மூஞ்சியா இருக்கான்” என்று சிரித்தவன்

“வாயைக் காட்டு” என்று கேட்க, ராம் புன்னகத்தான்.

“ஒஹ், எல்லா பல்லும் இருக்கா? இரண்டு மாசமா இதெல்லாம் அடகு வைச்சிருந்தியோ? படவா! இப்ப பல்லைக் காட்டுறான் பாரு, தயிர்சாதம்!” என்று மாதவன் செல்லமாக ராம் வயிற்றில் குத்தினான்.

மாதவன் பேச்சில் ராம், சது இருவருக்கும் இனிய நினைவுகள்.

ஒரு வாரம் ஓடிப்போனது. ராமும் சாதனாவும் வீடு, அலுவலகம் என்று மிகவும் பிசி. சாதனாவும் ராமும் இடையில் அவன் வீட்டுக்கும் சென்று வந்தனர். எப்போதும் போல் இந்து நன்றாகவே கவனித்தார்.

சாதனாவைத் தனியே அழைத்து, “இங்க பாரு உனக்கு புத்தி சொல்ல வீட்ல லேடீஸ் இல்லை, அதனால  நான் சொல்றேன். ஆபிஸ் வேலை இருந்தா இனிமே உன் தம்பிங்களைப் பார்க்க  சொல்லு, இரண்டு மாசம் நீ இல்லாம அவன் கஷ்டப்பட்டான், ஏற்கனவே ஆபிஸ் தூரம்னு தனியா இருக்கான். நீயும் பார்க்கலைன்னா எப்படி மா?” என்று அவளிடம் இந்து கேட்க

சாதனா எதிர்த்தெல்லாம் பேசவில்லை.

“இனிமே எங்க போனாலும் உங்க பையனைக் கூடவே அழைச்சிட்டுப் போறேன் அத்த” என்று சொல்லி இந்துவைப் புன்னகைக்க வைத்தாள். ஜீவாதான் அண்ணனிடம் பேசவில்லை.

“ஏண்டா அமைதியா இருக்க?” என்று தம்பியிடம் கேட்க

“பேசாதண்ணா, உனக்கு என்ன இருந்தாலும் அண்ணியோட தம்பிங்கதான் முக்கியம். என்னை என்னைக்காச்சும் வெளியே அழைச்சிட்டுப் போயிருக்கியா? அவங்களோட மட்டும் ஹிமாச்சல் போயிருக்க?” என்று கோபத்துடன் கேட்டான் ஜீவா.

இப்போது சாதனாவிடம் பேசிய பின் ராமின் மனம் லேசாகியிருக்க, அவன் சுய வடுக்கள் எல்லாம் இப்போது வலி தரவில்லை. தம்பியிடம் இயல்பாகப் பேச முடிந்தது. நல்ல அண்ணனாக நடக்க நினைத்தான்.

“டேய்! அவனுங்க என் பர்த்டேக்கு சர்ப்பரைஸ் பண்ண வந்தாங்க டா. எனக்கே தெரியாது ஜீவா” என்று ராம் சமாதானம் சொல்ல,

“நீ ஊருக்குப் போகும்போது உன்னை ஏர்ப்போர்ட்ல விட்டாங்களே, அது கூட உனக்குத் தெரியாதா?” ஜீவாவுக்கு நிறைய கோபம் வரும். அதுவும் மாதவன், செல்வா, உதய்யுடன் அண்ணன் இருக்கும்போது தன்னுடன் இல்லையே என்ற ஏக்கமெல்லாம் வெளிப்பட்டது.

ராமுக்கு அவனை என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல் தவிக்க, சாதனா ராமைப் பார்த்து என்னவென்று கேட்க,

“இவன் கோவமா இருக்கான்” என்று மெல்ல சொல்ல,

“என்னாச்சு ஜீவா?” என்று சாதனா கேட்க, அண்ணனை முறைத்த தம்பி,

“ஒன்னுமில்ல அண்ணி” என்று நகரப்போனான்.

“சொல்லு ஜீவா, நான் கேட்குறேன்ல” என்று சாதனா பேச்சால் அவனை நிறுத்த,

‘உங்க தம்பிங்க கூட என் அண்ணா பழகுறது பிடிக்கல’ என்று எப்படி சொல்லுவான். அமைதியாக அண்ணனைப் பார்க்க,

“சாரி” என்றான் ராம்.

“இட்ஸ் ஒகேண்ணா” என்று ஜீவா அண்ணியின் முன் அண்ணனை விட்டுக்கொடுக்காது அமைதியாக நகர்ந்துவிட்டான். ராம் அவன் சென்றதும் சாதனாவிடம்

“இவனுக்கு நான் நல்ல அண்ணனா நடக்கவே இல்லை சது.” என்று குற்றவுணர்ச்சியுடன் சொன்னான்.

“ராம், அவன் புரிஞ்சிப்பான். இனிமே அவனோட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அவ்வளவுதான் சிம்பிள்!” என்று கணவனைத் தேற்றினாள்.  ராமின் அப்பா கூட நன்றாகவே பேசினார்.

சது கூட, “இவங்க கூடவே நம்ம இருக்கலாமே ராம்” என்று கேட்க

“வேண்டாம் சது, தனியா இருக்கலாம்” என்று மறுத்துவிட்டான். அவனின் விருப்பத்துக்கே விட்டுவிட்டாள்.

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ராமை அக்கறை எடுத்து கவனித்தாள் சாதனா. அன்பின் அருகாமையாய் அவள் வடிவில் அனுதினமும் அனுராகமாய் அவனை உணரவைத்தாள்.

அன்று ராம் அவனின் வார்ட் ரோபை சுத்தம் செய்துகொண்டிருந்தான். அப்போது தட்டுப்பட்டது விவாகரத்துப் பத்திரம். அதை காணும்போது அன்றுணர்ந்த அதே பரபரப்பு, பரிதவிப்பு அவனிடம். அப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் ராமால் அதனைக் கடந்திருக்கவே முடியாது.

அந்த நினைவுகளில் தாக்கத்தில் நிஜம் மறந்து அப்படியே மெத்தையில் சோர்வாய் உட்கார்ந்துவிட்டான்.

சாதனா கணவனைத் தேடி வந்தவள் அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அருகே வர, அந்த அரவத்தில் விழித்தவன் சட்டென்று சாதனாவை இறுக அணைத்தான்.

“எப்பவும் என்னை விட்டுட்டுப் போயிடாத சது! அப்படி போறதுன்னா என்னைக் கூட்டிட்டுப் போ இல்லை கொன்னுட்டு போ” என்றான் கலங்கிய குரலில். சாதனாவுக்கு அவன் பேச்சில் பதறியது.

“ராம்! என்னாச்சு தீடீர்னு?” என்று அவள் பதறிப்போய் கத்த, விவாகரத்துப் பத்திரத்தில் ராமின் பார்வை பதிந்தது. அப்போதுதான் அவளிடம் ஆசுவாசம்.

“இதானே?” என்று கேட்க

“இதை முதல்தடவ பார்த்தப்போ நான் எப்படி பயந்தேன் தெரியுமா? உள்ள அவ்வளவு பயம், நீ  நிரந்தரமா என்னைப் பிரிஞ்சிடுவியோன்னு, யார்கிட்டயும் அதைக் காட்ட முடியல. தைரியமா இருக்க மாதிரி காட்டிக்கிட்டேன்” என்றவனை அணைத்துக்கொண்டவள் ஒரு கையால் அந்த பத்திரத்தை எடுத்தாள்.

ராமை விட்டு விலகி, அதனை கிழித்துப்போட்டாள்.

“நான் எப்பவும் அப்படி நினைக்கலனு ஆயிரம் தடவ சொல்லிட்டேன் ராம், இப்ப நல்லாயிருக்கும்போதும் அதையே ஏன் நினைக்கிறீங்க?” வருத்தமாகக் கேட்டாள் சாதனா.

“இல்லை, மறுபடி இதைப் பார்க்கவும் டென்ஷன்” என்றதும்

“இவ்வளவு ஃபீல் பண்ண வேண்டாம், அப்படியே டிவோர்ஸ்னாலும் என்னை பண்ணக்கூடாது, உங்க மச்சான்ஸை பண்ணனும்” சிறு புன்னகையுடன் சாதனா பேச, ராம் புரியாமல் பார்த்தான்.

“அதுல இருக்க சைன் என்னோடது இல்லை ராம், உதய் சைன். செல்வா அண்ட் உதய்யோட ஐடியா இது, நீங்க என்னைத் தேடக்கூடாது சொன்னதால நீங்க தேடல, இரண்டு மாசமா நம்ம பிரிஞ்சு இருக்கவும் அவனுங்க மனசு கேட்காம இப்படி பண்ணிட்டாங்க, சதுவுக்கு இந்த தயிர்சாதத்தை விட மனசே இல்லை. சோ சில் பண்ணுங்க!” என்றாள் கணவனிடம்.

ஆனால்,  அவனோ வெடித்தான்.

“அறிவிருக்கா உங்களுக்கெல்லாம்? என்னோட ஃபீலிங்க்ஸோட விளையாடுவியா சது நீ? அவனுங்களுக்கு அறிவு இல்லைன்னா உனக்குமா டி இல்லை?” என்று கத்தினான்.

“ராம், அவங்க நல்லதுக்க்..” என்றவளை ராம் முறைத்த பார்வையில் அவளிடம் பதில் இல்லை.

விழிகள் சிவந்து கலங்கியிருக்க, ராம் உள்ளம் கொதித்தது.

“என்ன நல்லது?? இத்தனை நாளா நான் மனசுல எவ்வளவு தவிச்சிருப்பேன் சாதனா? என்னோட மனைவி கூட என்னை விட்டுப் போற மாதிரி நடந்துக்கிட்டேன்னு எவ்வளவு குற்றவுணர்ச்சி எனக்கு. நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லியும் சின்ன பசங்க கூட சேர்ந்து எப்படி…?” என்று பல்லைக் கடித்தான்.

சாதனாவின் கையெழுத்தைப் பார்த்த அந்த காரிருள் காலம் கண்முன் வந்து போனது. அவனின் மன உளைச்சல் இன்று வெளிப்பட்டது.

“ராம், எனக்கே நீங்க அங்க வந்த பின்னாடிதான் தெரியும்”

சாதனாவின் சமாதானங்கள் அவனிடம் எடுபடவில்லை.

“தெரிஞ்ச அப்புறம் சொன்னியா நீ? என்னைப் பத்தி உனக்குத் தெரியாதது எதாவது இருக்கா? என் மனசு வருத்தப்படுற விஷயம்னு தெரிஞ்சும் இதை எங்கிட்ட இருந்து மறைச்சிட்ட, எனக்கு இதுல இருந்து விடுதலை கொடுக்கனும்னு உனக்குத் தோனல இல்லை?” என்றான் ஆத்திரத்துடன்.

 அவனுங்களுக்கு இருக்கு. கொஞ்சம் இடம் கொடுத்தா என்னை என்ன நினைச்சாங்க அவங்க?” என்று கத்தினான்.

அப்போது பார்த்து காலிங் பெல் சத்தம். வெள்ளிக்கிழமை என்பதால் தம்பிகள் மூவரும் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்க சாதனா ராமைப் பார்த்தாள். அவன் இன்னும் முறைக்க, சாதனா கதவைத் திறந்தாள்.

செல்வாவும் மாதவனும் உட்கார, உதய் உற்சாகமாக, “மாம்ஸ் எங்க?” என்று அறைக்குள் சாதனா தடுப்பதற்குள் சென்றுவிட்டான்.

“என்ன மாமா? எப்படி இருக்கீங்க? சீக்கிரம் கிளம்புங்க, படத்துக்குப் போகலாம்” என்று உட்கார்ந்திருந்த ராமை எழுப்பி விட கைகொடுக்க, ராம் இருந்த கோபத்தில் உதய்யை

“விடுடா” என்று உதறினான்.

சாதனா செல்வாவிடம், “அவர் கோவமா இருக்காரு” என்று சொல்ல, மாதவனோ “அவன் கோவப்படுற மாதிரி நீ என்ன செஞ்ச?” என்று அவளிடம் கேட்க

“நீங்க செஞ்சதுக்குத்தான் அவர் கோவப்படுறார்” என்று சாதனா அவர்களிடம் கத்தினாள்.

“இவனுங்கதான் செஞ்சாங்க, எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல” மாதவன் விலகப்பார்க்க

“அவனுங்க செஞ்சது தெரிஞ்சும் மறைச்சதானே, உன் மாமா வருவார். வாங்கிக்கட்டிக்க” என்று சாதனா திட்டினாள்.

“போடா! நான் எங்கேயும் வரல” என்று ராம் மறுக்க, உதய் அவனை விடாப்படியாக இழுக்க ராம் இருந்த கோபத்தில் பளாரென்று அடித்துவிட்டான்.

“சின்ன .பையன் மாதிரி நடந்துக்கோ, அதிகப்பிரசங்கி” என்று அதட்டியவன் உதய்யின் அதிர்ந்த முகம் பார்த்து தன் மீதே கோபம் எழ, அறையை விட்டு வெளியே வந்தான்.

சத்தம் கேட்டு சாதனா, “ராம் அவனை ஏன் அடிச்சீங்க?” என்று கணவனைக் கத்த

“யோவ் மாமா என்ன இதெல்லாம்?” என்று மாதவன் அதிருப்தியாகப் பார்க்க

செல்வாவுக்குத் தம்பியை அடித்ததும் சுர்ரென்று ஏறியது. “எதுக்கு அவனை அடிச்சீங்க?” என்று எகிறினான்.

ராம் எல்லாரையும் முறைத்தவன் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.

உதய் உம்மென்று உட்கார்ந்திருந்தான். அண்ணன்கள் இருவரும் அரணாய் இருபக்கமும் உட்கார, சாதனா முன்னால் இருந்த சோஃபாவில் சோகமாக உட்கார்ந்திருந்தாள்.

உதய்யின் கண்கள் கலங்கியிருக்க, பார்த்த சதுவுக்கு கணவன் மேல் கன்னா பின்னாவென்ற கோபம்.

“வரட்டும் தயிர்சாதம், தாளிச்சிடுறேன்” என்று மனத்தில் உறுதியெடுத்தாள்.

“என்னடா என்னைப் பார்க்குறீங்க?” என்று சாதனா தம்பிகளைக் கேட்க

“வீட்டு மாப்பிள்ளன்னா கொம்பா உன் வீட்டுக்காரருக்கு? எப்படி அவர் உதய்யை அடிக்கலாம்?” எண்ட் செல்வா கத்த,

“உன்னை யார் அதிகப்பிரசங்கித்தனம் செய்ய சொன்னா?” சாதனாவும் பதிலுக்குக் கத்தினாள்.

“ராம் ரொம்ப எமோஷனல், எல்லாத்தையும் லைட்டா எடுக்க மாட்டார். அதுவும் என் விஷயத்துல அவர் ரொம்ப ரொம்ப சென்சிடிவ்” என்று தலையைத் தாங்கிக் கொண்டு அவர்களிடம் சொல்ல, மாதவன் சாதனாவின் அருகே சென்று உட்கார்ந்தான்.

“டென்ஷன் ஆகாத சது, ராமை நான் பார்த்துக்கிறேன்” என்று மாதவன் சொல்ல

“அவரை நான் பார்த்துப்பேன்” என்று முறைப்பாக சொன்னாள். செல்வாவோ,

“அவர் அப்படினு தெரிஞ்சா ஒன்னு முன்னாடியே எங்க கிட்ட சொல்லியிருக்கணும், இல்லையா அவர்கிட்ட இதை சொல்லாம இருக்கணும். உன்னை யார் அவரோட சண்டைப்போட்டு போக சொன்னா? அவரும் உன்னைத் தேடாம இருந்தார், ஷாக் டீரிட்மெண்ட் கொடுத்ததாலதானே அவர் வந்தார். இப்ப எங்களைப் பேசாத சாதனா ” என்று அக்காவை அதட்டினான் அவன்.

இங்கே இவர்கள் சண்டையிட்டுக்கொள்ள ராம் சமன்பட இரண்டு மணி நேரங்கள் ஆனது.

அமைதியாக ஒரு பூங்காவில் வந்து உட்கார்ந்துவிட்டான். கோபம், ஆத்திரம், ஆதங்கம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய, மெல்ல மெல்ல நிதர்சனம் உரைத்தது. அதுவும் இத்தனை நாள் அவன் மறுகிய காரணம் மாயை என்ற தெரிந்ததும் அதை மனம் உணர்ந்த பின் ஒரு ஆசுவாசம் அவனிடம்.

‘சாதனாவுக்கு என்னை விட்டுப் போகணும்னு எண்ணமில்லை’ இத்தனை நாள்  நெஞ்சடைத்த உணர்வு முழுமையாக நீங்கியது. கண்கள் கசிந்தன! பெருமூச்சுடன் பைக்கில் சுற்றினான்.

இப்போது வீட்டினரை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற சஞ்சலம் அவனுக்கு. உதய்யிடம் கை நீட்டியது தவறாகப்பட்டது. அதற்கும் சாதனாவிடம் வாங்கிக் கட்டிகொள்ளப்போகிறோம் என்று நினைத்தான்.

‘நியாயமா சந்தோஷப்பட்டிருக்கனும், டென்ஷன்ல என்ன என்னமோ பண்ணிட்டேன்’ என்று நொந்தான்.

பத்து மணி வரை வெளியே சுற்றி அதன்பின் வீடு சென்றான். இன்னும் வெளியே ஷூக்கள் கிடக்க, அவர்கள் கிளம்பவில்லை என்று புரிந்தவனுக்கு சின்ன குறுநகை.

பெல் அடித்துவிட்டு நிற்க, மாதவன் வந்து கதவைத் திறந்தான்.

“மாதவா!” என்றழைக்க

“மாமா, நீ இவ்வளவு ஃபீல் பண்ணுவன்னு தெரியாது, இல்லைன்னா சொல்லியிருப்பேன். என் மேல தப்பில்லை” என்று அவன் சட்டென்று ராமைக் கட்டிக்கொண்டான். ராம் சத்தமாக சிரித்தான்.

“என்ன சிரிக்கிற?” என்று மாதவன் ராமைப் பார்க்க,

“உங்களை எப்படி சமாதானம் செய்றதுனு நான் வந்தா நீ என்னை சமாதானம் பண்ற?” என்றவன் மற்ற மூவரைப் பார்த்தான்.

கையில் இருந்த பையை மேஜையில் வைத்துவிட்டு உதயின் அருகே உட்கார்ந்தவன் அவனை தோளோடு அணைத்து, “சாரிடா” என்றான்.

“இட்ஸ் ஒகே மாம்ஸ்! நாந்தான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேன். சாரி” என்று உதய் மன்னிப்புக் கேட்க,

“ரொம்ப வலிக்குதா?” என்று உதய்யின் கன்னம் வருடினான்.

“இல்லை மாமா!” என்று உதய் புன்னகைத்தாலும் ராமின் கைத்தடம் தெரிந்தது. கோபம் வந்தால் அளவில்லாமல் தனக்கு வருகிறது என்று புரிந்தது, தன் கோபம் குறைக்க வேண்டும் என்று நினைத்தான்.

“இந்தா உனக்குப் பசிக்கும்ல, உனக்குப் பிடிச்ச சீஸ் பர்ஸ்ட் பீட்சா” என்று நீட்ட,

“எனக்கு?” என்று மாதவன் கேட்க

“உன்னையா அடிச்சேன், இவனைத்தானே அடிச்சேன்?” என்று கிண்டலாகக் கேட்டான் பரசுராம்.

“அடப்பாவி! இவ்வளவு நேரம் பசியில வெயிட் பண்ணினா உன்னை” என்று மாதவன் ராமை முறைக்க,

“இதுல ஃபேமிலி பேக் பிரியாணி இருக்குடா, தட்டு எடுத்துட்டு வா சது” என்று சாதனாவை அழைக்க, அவள் அசையவில்லை. ராமே எடுத்து வந்து பரிமாறினான்.

செல்வாவும் சாதனாவும் ராமிடம் பேசவில்லை.

“டேய் செல்வா, நீ ஏண்டா கோவப்படுற? நாந்தான் கோவப்படனும்” ராம் பேச, அவன் முறைத்தான்.

“அதுக்காக சின்ன பையனை அடிப்பீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் சொரண இல்லையா?” என்று அண்ணனையும் தம்பியையும் திட்டினான்.

ராமின் முகம் வாடியது.

“எனக்கு அவன் மேல உரிமை இருக்கு, அவன் செஞ்சது அதிகப்படியான விஷயம். உனக்குப் புரியாது செல்வா. உலகமா நினைக்கிற ஒருத்தி வாழ்க்கையில இல்லைன்ற மாதிரி இந்த பேப்பர்ஸ் வந்தது..” என்று பெருமூச்சுவிட்டவன்

“உனக்கு லவ் வந்தாதான் டா தெரியும்” என்றான் சாபம் போல்.

செல்வா முறைக்க,

“என்ன சாபம் கொடுக்கிறீங்களா?” என்று ராமிடம் கோபமாகக் கேட்டான்.

செல்வாவுக்கு சட்டென்று கோபம் வரும் என்று புரிந்த சாதனா, “வாயை மூடு செல்வா” என்று தம்பியை அதட்டினாள்.

“என்னடா சாபம்னு எல்லாம் பேசுற?” ராம் வருத்தமாகக் கேட்க, மாதவனுக்குக் கோபம் வந்தது.

“உதய்யை கண்டிக்க எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு செல்வா. உனக்கு இருக்கிறதை விட அதிகமா இருக்கு! அமைதியா வந்து சாப்பிடு” என்று தம்பியை அதட்ட,

“மாமா பாவம்ணா, ஏன் சண்டைப் போடுற?” என்று எல்லோரும் செல்வாவை முறைத்தனர். செல்வா ராமை முறைக்க, ராம் சிரிப்புடன் செல்வாவை நெருங்கி,

“உனக்குக் கோவம் நிறைய வருதுடா, சாப்பிடு” என்று இழுத்து வந்து உட்கார வைத்து பரிமாறினான். செல்வாவும்

“சாரி மாம்ஸ், வேற டென்ஷன்” என்று சொல்லி உண்டான்.

“எங்க எல்லாரையும் சமாதானம் பண்ணிட்ட, உன் சம்சாரத்தை எப்படி சமாளிப்ப? கிண்டலாக மாதவன் கேட்க

“அதெல்லாம் சதுவை பாவமா பார்த்தா என்னை விட்ருவா” என்றான் ராம்.

உதய் பீட்சாவை போட்டோ எடுக்க, “போனை எடுத்த தொலைச்சிருவேன் ராஸ்கல், ஜீவா என்னைப் பேசுறான் டா. அண்ணன் தம்பியை பிரிச்சிறாதீங்கடா, நீ அடி வாங்கிட்டு சாப்பிடுறேன்னு தெரியாம அவன் உன்னை மட்டும் நான் கவனிக்கிறேன் சண்டைக்கு வருவான் டா. ப்ளிஸ்” என்று கெஞ்சவும் போனை வைத்துவிட்டு அமைதியாக உண்டான் உதய்.

சாதனாவை ராம் சாப்பிட சொல்ல, தம்பிகள் முன் பேசாமல் அவளும் அவர்களுடன் உண்டாள்.

இரவு உணவு ஒருவழியாக முடிய, எல்லோரும் உட்கார்ந்து கதைப் பேசினார்கள். மணி பதினொன்றரை ஆகிவிட

“டேய் சீக்கிரம் கிளம்புங்கடா, சதுவை சமாதானம் பண்ணனும்” என்று மனத்தில் நினைத்தவன் எப்படி சொல்வது என்று தெரியாது மாதவனைப் பாவமாகப் பார்த்தான்.

“லேட்டாச்சு, தாத்தா தனியா இருப்பார். உதய் நாளைக்குக் காலேஜ் போகணும், எழுந்திரு. டேய் செல்வா வா” என்று இருவரையும்  மாதவன் கிளப்ப, ராம் நன்றியுடன் அவனைப் பார்த்தான்.

மூவரும் சென்றதும் “சாரி சது” என்று அவள் முன் நின்றான் ராம்.

“என்ன பரசுராமர் அவதாரம் காட்டுறீங்களா?” சாதனா முறைப்பாகக் கேட்க

“இத்தனை நாளா அது மனசுல ஓடிட்டே இருந்ததால நீ அப்படி செய்யலனதும் ஒரு பெரிய ரீலிஃப்!” என்று சொல்லி

“ஹக் பண்ணிக்கவா?” என்றான் பாவமாக.

“அதுக்கு அப்புறம் திட்டு” என்றதும் புன்னகையுடன் கணவனைக் கட்டிக்கொண்டாள் சாதனா.

“உதய் எங்க எல்லோருக்கும் செல்லம்” என்றவளை “நம்ம எல்லோருக்கும்” என்று திருத்தினான் ராம்.

“ஆமா, அவனை அடிக்கலாமா? ஏற்கனவே அம்மா இல்லாத பையன், சித்தப்பா அவரை சேர்க்க முடியாது!  நீங்கன்னா ரொம்ப இஷ்டம், இப்படி செய்யலாமா? எங்கிட்ட கோவம் காட்டியிருக்கலாமே”

“உனக்கே தெரியும் உதய்னா எனக்கும் பிடிக்கும், பத்து வயசு பையனா இருக்கும்போதிலிருந்து அவனை தெரியும். சொல்லப்போனா இரண்டு பேரும் ஒரே மாதிரி அப்பாவால நிராகரிக்கப்பட்டவங்க. அதனாலயே அவன் மேல் எனக்குப் பாசம் அதிகம்! அவன் அப்படி செய்வான்னு நான் எதிர்ப்பார்க்கல… என்னதான் நார்மலா இருந்தாலும் அந்த டிவோர்ஸ் மேட்டர் மனசுல இருந்துட்டே இருந்தது. அக்சுவலா நான் சந்தோஷப்பட்டிருக்கணும். ஆனா அந்த ஸ்ட்ரெஸ் ரீலீஸ் ஆனதுல…” என்றவனை பேசவிடவில்லை சாதனா.

“எனக்கு ராமை தெரியும்” என்றாள்.

“நிஜமா கோவமில்லையே?” ராம் தவிப்புடன் கேட்டான்.

“ராம், எப்பவும் பெர்பெஃக்டா இருக்கனும் நினைக்காதீங்க! கோவம் எல்லாம் நார்மல்தான், ரிலாக்ஸ்” என்று முதுகை வருடினாள். ராமிற்கு அந்த அணைப்பு தேவையாக இருந்தது.

அணைப்பை இறுக்க பார்த்தால், உதய்யிடமிருந்து சாதனாவுக்கு அழைப்பு.

“அக்கா! மாமா கூட சண்டை போடாத, அவருக்கு உன்னை விட என் மேல ரைட்ஸ் இருக்கு. பாவம் அவர், சண்டை போடாதக்கா ப்ளீஸ்” என்றான் எடுத்துவுடனே.

“என்னை விட ரைட்ஸா?”

“ஆமா, சின்ன வயசுல இருந்தே எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார், ஸ்விம் பண்ண சொல்லிக்கொடுத்தார். அவர் எனக்கு அப்பாக்கா, அவரை ஹர்ட் பண்ணிட்டேன்னுதான் எனக்குக் கஷ்டமா இருந்தது. செல்வாண்ணா வேற கோவமா பேசிட்டான், நீயும் அப்படி பண்ணாத” என்றவன் சாதனா ‘இல்லை’ என்றபின்னே விட்டான்.

ராமை உதய்யின் வார்த்தைகளை நெகிழ்த்தியது.

“தயிர்சாதம்!” என்று செல்லமாக அவனை நெற்றியில்  முட்டியவள்

“ராம் கூட சண்டைப்போடக் கூடாதாம், ஆர்டர் போடுறான் அந்த பெரிய மனுஷன்” என்று சிரிப்புடன் சொன்னவள் அவன் முகம் பார்க்க

“உதய்யை அடிச்சிருக்கக் கூடாது சதும்மா” என்றான் மீண்டும்.

“அட ராமா! அவன் உங்களை சமாதனாம் செய்ய சொல்றான், நீங்க இப்படி பண்றீங்க. அன்புத்தொல்ல தாங்கல, நெக்ஸ்ட் டைம் ஹிமாச்சல் இல்லை, ஹிமாலயஸ் போயிடுவேன், அப்புறம் காவிதான்!” என்று அவனை மிரட்ட, ராம் சத்தமாக சிரித்தான்.

“செகண்ட் ஹனிமூன்னு ஸ்டைலா சொல்லு சது!!” என்றதும் சாதனாவையும் சிரிப்புத் தொற்றியது. மனைவியை இறுக்கமாக அணைத்தான்.

“யூ ஆர் மை ஹோம்!” என்றான் எப்போதும் போல் மனைவியிடம்.

இடைவெளிகள் இனியில்லை!!!!

 

✅ End of Episode 12
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 2 months ago

Superb story Pavi ma. Congrats.

❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 month ago

Super story pavi ma

❤️ 1 more...
Pavithra Narayanan 1 month ago

Thank you 😊

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top