Episode 2

இடைவெளி 2

“சது ப்ளீஸ், என்னைப் பாரு” என்று பரசுராம் கெஞ்சலாக சொல்ல, சாதனா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்கு ஹிந்தி தெரியாது, இவங்ககிட்ட சொல்லதெரியாம நீ சாப்பிடுறதயே கேட்டுட்டேன். இப்போ ரொம்ப பசிக்குது, ஆனா இது சுத்தமா பிடிக்கல. எனக்கு வேற சொல்லு சது” என்று பாவமாக முகத்தை வைத்துக் கேட்க, சாதனாவால் மறுக்க முடியவில்லை.

அவனிடம் பதில் சொல்லாமல் ஹோம்ஸ்டேவின் பெண்மணியை அழைத்து பூரியும் கிழங்கும் கொண்டு வர செய்தாள். சூடான பூரிகள் அவன் முன் வைக்கப் பட பூரித்துப் போனவன் மூன்று பூரி உள்ளே போனதும் தான் முன்னே இருந்தவளைப் பார்த்தான்.

“ஆமா, நீ என்ன சாப்பிடுற?” என்று கேட்க,

“baked potatoes with cream and chicken, pomegranate mojito” என்றதும் பரசுராம் விழித்தான்.

‘உருளைக்கிழங்கு கோழி மசாலான்னு சிம்பிளா சொல்றாளா பாரேன். எட்டாயிரம் இதுக்குதானாயா?’ என்று மெல்ல முணுமுணுத்தவன் அந்த ஹோம்ஸ்டேவின் ஓனரை மனத்தில் கடுப்புடன் பார்த்து வைத்தான்.

“இதையும் சேர்த்து சாப்பிடு சது, வேஸ்ட் ஆகிடும்.” என்று மனைவியிடம் சொல்ல

“பூரி சாப்பிட்டு இதை சாப்பிடுங்க, சிக்கன் அண்ட் போட்டேட்டோதான்.” என்றாள் முறைப்பாக.

 எப்படியோ பசிக்கு வாங்கியதை எல்லாம் உண்டு முடித்தான் பரசு. உண்ணும்போது பேசினால் சதுவுக்குப் பிடிக்காது என்பதால் சாப்பிடவுடன்,

“ஏன் சது டைவர்ஸ் கொடுக்கிற அளவுக்கு என்னை வெறுத்துட்டியா? இல்லை வாழ்ற அளவுக்கு என் மேல விருப்பமே வரலையா? ஒரு நாள், சில நிமிஷம் கோவம் அதுக்காக இப்படியா?” தாங்கலாக பரசுராம் கேட்கவும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்

“அந்த சில  நிமிஷம் கோவத்தை இரண்டு மாசமா என்னால மறக்க முடியலயே, என்ன செய்றது ராம்? அந்த கோவமான பேச்சு கேட்கக் கூடாதுனு தான் இவ்வளவு தூரம் வந்தேன், இங்கேயும் வந்துட்டீங்க?” சது கணவனை சரமாரியாகக் கேள்விகள் கேட்டவள் இருக்குமிடம் உணர்ந்து,

“எனக்குப் பப்ளிக்ல சீன் கீரியேட் பண்ணினா பிடிக்காதுனு உங்களுக்குத் தெரியும்தானே? எதுனாலும் என் ரூம்க்கு வந்து பேசுங்க. ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் செகண்ட் ரூம் ஆன் ரைட்” என்று சொல்லி சாதனா எழுந்து போய்விட, இவனும் அவள் பின்னே போனான்.

சாதனாவின் அறையும் அவனுடையது போலவே நல்ல வசதி, விசாலமும் கூட. அவள் அறை பால்கனி வழியே பார்க்க, ஹிமாச்சலின் மலைகள் அவ்வளவு அழகாய் வெண்பனியை சுமந்து திரண்டு வானின்  நீலப்பிண்ணனியில்  சொர்க்கம்!! அந்த இயற்கை எழிலில் மனைவியை அணைத்து நிற்க ஏங்கிய அகத்தை அடக்கியவன்,

“சது, உனக்கு எப்படியோ இரண்டு மாசமா நீ இல்லாம ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரே தடவை என்னை மன்னிச்சிடு ப்ளீஸ். அது ரொம்ப தப்பு! ஒத்துக்கிறேன், இனிமே பேச மாட்டேன், அப்படி நடந்தா நீ சொல்றதைக் கேட்கிறேன்” என்று அவளை சமாதானம் செய்யும் வகையில் ராம் பேச, சாதனா இரங்கவில்லை.

 “ராம், எதுனாலும் ஊருக்குப் போய் பேசிக்கலாம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு வந்திருக்கேன், என்னை தனியா விடுங்க. இப்போ உங்க ரூம் போங்க” என்றாள் பொறுமையாக.

“சது…!” ராம் ஏக்கத்துடன் பார்க்க,

“ராம் கெட் அவுட்!” கொஞ்சம் குரல் உயர்த்தினாள். ராம் சோகமாக அவன் அறைக்கு வர அவன் அம்மா இந்துவிடமிருந்து அழைப்பு.

“எங்கடா சொல்லாம கொள்ளாம வெளியூர் போய்ட்ட போல இருக்கு? எல்லாம் நாங்களே நியூஸ் பார்த்து தெரிஞ்சிக்கனும் இல்லையா?” என்று அதட்டினார்.

“அம்மா, சதுவோடதான்மா இருக்கேன்” என்றான்.

“ஜீவா தான் போன்ல காட்டினான், ஆனா உனக்கு சொல்லணும்னு தோணலதானே? பெரிய மனுஷன் ஆகிட்ட இல்லை” என்று திட்டியவர் போனை வைத்துவிட்டார்.

அம்மா பேசியதில் வருத்தமாக இருந்தது, ஒருவயதுவரைக்கும் அவனும் அவரும் மிகவும்  நெருக்கம். பின் இவனாகவே விலகிவிட்டான், என்னவோ வருத்தமாக இருந்தது. சதுவின் மறுப்பு, அம்மாவின் பேச்சு எல்லாம் சேர்ந்து. அப்போது சரியாக உதய்யிடம் இருந்து அழைப்பு.

“என்ன மாம்ஸ்? உதவி செஞ்ச இந்த உதய்யை உடனே மறந்துட்டு உங்களை ஏமாத்தின அண்ணனுக்கு எல்லாம் போன் செஞ்சு பேச முடியுது? நான் எல்லாம் சின்ன பையன்னு தானே இப்படி பண்றீங்க?” என்று உதய் உரிமையாக வம்பிழுத்தான்.  

“உன்னைத்தான் டா தேடினேன், மிஸ் யூ மாம்ஸுனு ஏண்டா இன்ஸ்டாவுல ஸ்டோரி போட்ட, அதை ஜீவா பார்த்துட்டான். உன் அண்ணா அந்த செல்வா கூட பார்த்திருப்பான்” என்று ராம் புலம்ப,

“செல்வாவை நான் ஹைட் பண்ணிடுவேன் ஹாஹா, ஹேக் தெரியாத மாமாவா இருக்கீங்களே? என் மாமாவை பிரிஞ்சு இருக்க இந்த ஒருவாரம் எனக்கு ஒரு யுகம்னு நானே சோகத்துல மிஸ்ஸிங்க் மாம்ஸ்னு போஸ்ட் போட்டிருக்கேன். கொஞ்சம் கூட என் அன்பை மதிக்க மாட்டேங்கிறீங்க நீங்க?” என்று உதய் செல்லம் கொஞ்சிட,

“டேய், முடியலடா! இதெல்லாம் என் பொண்டாட்டி செய்ய வேண்டியதுடா, ரொம்ப பண்றீங்கடா நீங்க” என்று பேசும்போதே மாதவனிடமிருந்து போன்.

“இருடா, பெரியவன் வரான். கான் கால் போடுறேன்” என்று மாதவனை அழைப்பில் சேர்த்தான்.

“அக்காவை பேசி சமாளிக்க சொன்னா போன்ல யார்கிட்ட பேசுற நீ?” என்று மிரட்டலாகக் கேட்டான் மாதவன்.

“சது கூட இப்படியெல்லாம் கேட்க மாட்டா டா, உன் தம்பி கிட்டதான் பேசுறேன் மாதவா”

“யோவ் மாமா எங்ககிட்டவே பேசிட்டு இருந்தா எப்போ நீ சாதனாவை சமாதானம் செய்வ? தேற மாட்டார் போலடா இவரு” என்று உதய்யிடம் குறையாக சொன்னான் மாதவன்.

“பேசினேன் பேசினேன், அவ ஸ்டைல்ல வழக்கம்போல கெட் அவுட் சொல்லிட்டா” சலிப்பாக சொன்னான் பரசுராம். 

“மிஸ்டர். பரசுராம்  நீங்க ஒன்னும் அவ ஆபிஸ்ல இருக்க மேனேஜர் பரசுராம் இல்லை, ஹஸ்பண்ட் பரசுராம். அதை ஞாபகம் வைச்சிட்டு இன்னும் பேசுவியா அதைவிட்டு அவ கெட் அவுட் சொன்னா வந்துடுவியா நீ? இடியட்!” என்று திட்டினான் மாதவன்.

“மாம்ஸ் பாவம்ணா, திட்டாத!” உதய் சொல்ல,

“போங்கடா, எல்லோரும் ஒன்னு கூடி திட்டுறீங்க நீங்க. அவ என்னடான்னா பேச போனாலே பேசாதன்னு திட்டுறா. இவன் பேசு பேசுன்னு திட்டுறான்.”

 சரி சரி மாமா, ஃபீல் பண்ணாத விடு! சதுவுக்கு உன்னைப் பிடிக்காம ஒன்னும் கட்டல, பிடிக்காத விஷயத்தை அவ செய்யவே மாட்டா. உன் மேல சாஃப்ட் கார்னர் இருக்கு. ஆனாலும்,  இரண்டு மாசமா என்னத்தான்யா செஞ்ச? ஒரு முன்னேற்றமும் இல்லை” என்று கடுப்பாகக் கேட்டான் மாதவன்.

“என்ன செஞ்சிருப்பாரு? அக்காவை ஆபிஸ்ல சைட் அடிச்சிட்டு இருந்தவர் வீட்லயும் ஜாலியா சைட் அடிச்சிருப்பார், அக்கா என்ன சொன்னாலும் ஓகே சது பண்ணிடலாம்னு சொல்லியிருப்பார்.” என்றான் உதய் கிண்டலாக.

“போடாங்க்!” என்றான் பரசு கடுப்பாக.

“இந்த பேச்செல்லாம் எங்ககிட்டதான் மாமா உனக்கு, சது கிட்ட போய் உன் வீரத்தைக் காட்டேன்” என்று ஏற்றிவிட்டான் மாதவன்.

“டேய் என் மேல தப்புடா, தேவையில்லாம பேசினது நான்.  அவ அதுக்கே டென்ஷன் ஆகி டைவர்ஸ் நோட்டீஸ் விட்டுட்டான்னு பயங்கர கடுப்புல இருக்கேன், நீங்க வேற.” என்று பரசு சொல்ல.,

“மாமா, விடு! அப்படியெல்லாம் சது டைவர்ஸ் பண்ணமாட்டா உன்னை. நாங்க விட்டுடுவோமா? எங்க பரசுமாமா மாதிரி யார் கிடைப்பா” என்று மாதவ் ஆறுதலாகப் பேச,

“அட போங்கடா! அவ என்னைப் பார்த்து ஒரு ரியாக்ஷனும் கொடுக்க மாட்டேங்கிறா, இந்த உதய் பய என்னை மிஸ் பண்றேன்னு சொல்றான், இரண்டு மாசம் ஆகுது. உங்கக்கா ஒன்னுமே பேசல”

“போனது போகட்டும் , புறப்படு புயலே!!  எழுந்திரு, அக்கா கால்ல விழுந்திரு!” என்று உதய் கூவினான்.

“மவனே வந்தேன், வாயுல உதைச்சேன்னா வங்காள விரிகுடாவுல விழுவ” என்று பரசு திட்ட

“அப்போ மார்ல மிதிச்சா மால்தீவ்ஸ்ல விழுவான்னா மாமா?” மாதவன் கிண்டலாகக் கேட்க

“உங்களை எல்லாம்?? மச்சானா போய்ட்டீங்கடா இல்லைனா”

“இல்லைன்னா என்ன மாம்ஸ்?” உதய் கேட்டதற்கு மாதவனும்

“இல்லைனா  என்ன மாமா?” ராகமாய் இழுத்தான்.

அவர்கள் இழுத்த தோரணையில் எதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் “அதான் இல்லையேடா, விடுங்க. எனக்குப் பாடி தாங்காது இதுக்கு மேல.” ராம் சொன்னதில் பாவம் பார்த்து விட்ட மாதவன்

“பேசாம சதுவை ஃப்ர்ஸ்ட் டைம் பார்க்கிறதா நினைச்சு அழகா ப்ரோபோஸ் பண்ணு மாமா. சென்று வென்று வா” என்று வாழ்த்தினான்.

“சரிடா வென்று” என்று பரசு பல்லைக் கடிக்க,

“என்னதூ?”

“வென்று வரேன் டா” என்றான் அழுகுரலில்.

“ஹாஹா, மாமா பார்த்துக்கோ. எதுனாலும் கூப்பிடு. பை” என்று சொல்லி மாதவன் வைத்துவிட்டான்.

உதய் கால்’லை கட் செய்யாது,  “மாமா, அக்கா போன் பண்ணினா,  நாந்தான் உங்களுக்கு அவ அங்க இருக்கான்னு சொல்லிட்டேன்னு செம திட்டு” என்றான் பாவமாக. 

“அச்சோ, ரொம்ப திட்டினாளா?” என்று பரசுராமும் பாவமாகக் கேட்க,

“திட்டினாதான், ஆனாலும்,  உங்களுக்காக வாங்கிக்கிட்டேன் மாமா” என்று தியாகியாகப் பேச குளிர்ந்து போனான் ராம்.

“உதய், நீ வயசுல சின்னவனாலும் பெரிய மனுஷண்டா” என்று பாராட்ட,

“அதெல்லாம் வேண்டாம், எனக்கு ஒரு தவுஸண்ட் டூ ஹன்ரட் என் ப்ரண்ட் அக்கவுண்ட்ல போட்டுவிடுங்க மாமா. அரீயர் ஃபீஸ் கட்டனும்” என்றதும்

“டேய்!! இதுக்குதான் வலை விரிச்சியா?” என்று பரசு கடுப்பாக கேட்டான்.

“மாம்ஸ்! செல்வாவுக்குத் தெரியாம செலவு செய்ய முடியுமா? அரீயர் வைச்சன்னு சொன்னா அவன் போடுற அறுவை தாங்காது மாமா. ப்ளீஸ் நான் உங்க மேல சத்தியமா க்ளீயர் பண்ணிடுறேன்”

“டேய், உங்க அக்காளோட தாலி முக்கியம்டா. என் உயிரோட விளையாடாதடா பாவி” பரசுராம் அலறினான்.

“ச்ச, ச்ச! கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன். வேற யார்கிட்ட கேட்டாலும் பேசுவாங்க மாமா. நான் பாவம்தானே உங்க சின்ன மச்சான், செல்ல மச்சான்ல” என்று கொஞ்சலாகக் கேட்க,

“சரிடா சரி, அவன் நம்பர் அனுப்பிவிடு. பட் ஒழுங்கா பாஸ் ஆகிடனும் உதய். அப்புறம் வேற எதுக்கும் நான் சப்போர்ட் செய்ய மாட்டேன். அரீயர் வைக்கிறது தப்பில்ல, ஆனா சும்மா அதே வேலை வைக்காத, ஒழுங்கா படி. ஓகே?” பொறுப்பாக பரசுராம் பேச, உதய் சமத்தாகக் கேட்டுக்கொண்டான்.

“கண்டிப்பா பாஸ் ஆகிடுறேன் மாமா. நீங்க என்னை நம்பலாம்” என்றான் உதய்யும்.

“அப்பறம் அக்கா பேசலன்னா சரியா சாப்பிடாம இருக்காதீங்க, அக்காவோடவே இருங்க. அக்காவுக்குப் பிடிக்கலன்னா மொத்தமா ஒதுங்கிடுவா, பிடிச்சா கோவமிருந்தாலும் மன்னிச்சிருவா மாம்ஸ். ஆல் தி பெஸ்ட், வீரமே வாகை சூடும்!!” என்று பெரிய மனிதனாக உதய் அட்வைஸ் செய்ய, புன்னகையுடன் கேட்டுக்கொண்டான் பரசுராம்.

அதுவரை அகத்தில் இருந்த அலைப்புறுதல் எல்லாம் நீங்கி, ஒரு இதமான மன நிலை அவனிடம். அவன் அறையின் பால்கனியைத் திறந்துவிட, இதமான வானிலை வெளியே. பச்சையாய் எங்கும் ஆப்பிள் தோட்டம். உற்றுப்பார்த்தால் அடர்சிவப்பு ஆப்பிள்கள் கண்ணுக்குத் தெரிந்தன.

மெத்தையில் விழுந்தவன் வேடிக்கைப் பார்த்தபடி படுத்திருந்தான். ‘எட்டாயிரத்துக்கு நல்ல மெத்தைதான், ஜம்முனு இருக்கே’ என்று தட்டிப் பார்த்தவனுக்கு உதய்யை முதன்முதலில

பார்த்த ஞாபகம். பத்து வயது சிறுவனாக அவனை கல்லூரியில் கண்டான்.

பரசுராம் பிரபலமான கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சி.எஸ் படித்துக் கொண்டு இருந்தான். எப்போதும் கல்லூரிக்குச் சீக்கிரம் வந்துவிடும் பழக்கம் அவனுக்கு. முதலிலே வந்தவன் கல்லூரி கேண்டீனில் உட்கார்ந்திருந்தான், புத்தகத்தைப் புரட்டியபடி ஒரு டீ குடித்துக் கொண்டிருந்தான். அவன் நண்பர்கள் வந்தால் அவர்களுடன் ஒரே லூட்டியாக இருப்பான்.

படித்துக் கொண்டிருந்தவன் சிந்தனையைக் கலைக்கும்வகையில் ஒரு கூட்டம் அருகே இருந்த நாற்காலிகளை ஆக்கிரமித்தனர்.

பத்து வயது உதய்குமார், பதினான்கு வயது செல்வகுமார், பதினேழு வயது சாதனா, மாதவ்குமார் இவர்களுடன் அவர்கள் தாத்தா சேதுராமன். அப்படி எல்லாரையும் கூட்டமாகப் பார்க்கவும் ஒரு சுவாரஸ்யம் அவனுக்கு.

“தாத்தா, இனிமே அக்காவும் அண்ணாவும் ஸ்கூல் வரமாட்டாங்க தானே?” என்று உதய் கேட்க, சேதுராமன்

“டேய்,  நீ இனிமே ஸ்கூல்ல சேட்டை செஞ்சா இவங்க சொல்ல மாட்டாங்கனு தானே இப்படி கேட்டுட்டே இருக்க, அதெல்லாம் செல்வாண்ணா உங்கூட ஸ்கூல் வருவான். சமத்தா இருக்கனும்” என்றார் சின்னப்பேரனிடம்.

“சதும்மா!  இந்த மாதவனைப் பார்த்துக்கோ, சேர்க்கை ஒழுங்கா இல்லைனா தாத்தாகிட்ட சொல்லணும்”

“என்னையே சொல்லாதீங்க தாத்தா,  நான் ஒழுங்கா இருப்பேன்” என்றான் மாதவன்.

“அக்கா, ரேகிங்க்லாம் பண்ணினா தாத்தாக்கிட்ட சொல்லிடு. அதெல்லாம் law படி தப்பு, நம்ம பாட்டிக்கிட்ட சொல்லிடலாம். நீ பயப்படாத, மாதவண்ணா நீயும்தான்” என்று பெரிய மனிதனாக சொன்னான் செல்வகுமார்.

“பார்த்தியாடி பட்டுக்குட்டி, வக்கீல் பாட்டி கூட இருந்து லா எல்லாம் பேசுறான் இந்த செல்வா” என்று செல்வாவைக் கொஞ்சினார் சேது.  அப்படி அவர்களின் நெருக்கத்தைப் பார்க்க பார்க்க பரசுவுக்கு மிகவும் பிடித்தது. ரசித்த படி அவர்கள் பேச்சைக் கேட்டு உட்கார்ந்திருந்தான். அட்மிஷன் போட வந்திருப்பார்கள் என்று நினைத்தான். எல்லோரும் டிஃபன் முடித்துவிட்டு கிளம்ப, ஒரு ஃபைலை விட்டுவிட்டனர்.

“தாத்தா, உங்க ஃபைல்” என்று பரசுராம் சென்று நீட்ட, “என்ன பட்டு, பத்திரமா வைச்சிக்கிறதில்லையா?” என்று பேத்தியைப் பார்க்க,

“இது மாதவனோடது தாத்தா” என்றாள் சாதனா. ஒரு குட்டி டாப்ஸ், ஜீன்ஸ் என இருந்தாள். அந்த முகம் பார்க்க, மனத்தில் ஒரு குளிர்ச்சி பரவ, முதல்முறையாக சாதனாவை சைட் அடித்தான் பரசுராமன்.

“தேங்க்ஸ் தம்பி, எந்த இயர்?” என்று அவன் கழுத்தில் தொங்கிய ஐடி பார்த்தபடி அவர் கேட்க,

“செகண்ட் இயர் தாத்தா” என்றான். பொதுவாக அவனிடம் கல்லூரி பற்றி கேட்டவர் பேரன் பேத்தியை எல்லாம் அறிமுகம் செய்துவைத்தார்.

அதன்பின்  மாதவனையும் சாதனாவையும் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. மாதவன் கல்லூரி வாலிபால் டீமில் சேர, இவனும் அதில் இருக்க அவர்களுக்குள்  நட்பு உருவானது. ராம் அவனை விட பத்து மாதம் பெரியவனாக இருந்தாலும் மாதவனுக்கும் அவனுக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டானது. 

சாதனா அவன் துறையிலே சேர்ந்திருக்க, மாதவன் வேறு பிரிவானாலும் சில பாடங்கள் முதல் வருடத்தில் கஷ்டமாக இருக்க, வாலிபால் தோழர்களாக இருக்கவும் பரசுராம் சொல்லிக்கொடுப்பான். அவன் எப்போதுமே அவனை சுற்றி உள்ளவர்களிடம் பயங்கர நெருக்கமாக இருப்பான். யாராக இருந்தாலும் ‘நோ’ என்பதே அவனிடம் கிடையாது!

பரசுண்ணா என்று ஜீனியர் எல்லாம் அவனுக்கு நெருக்கம். முதலாம் வருடம் வேறு பில்டிங் என்பதால் சாதனாவை ஒரு வருடம் பார்க்க வாய்ப்புகள் குறைவு. ஆனாலும்,  மாதவனுடன் வாலிபால் விளையாடும்போது வந்து தம்பிக்காக நிற்பாள் சாதனா.

பரசுராமும் அச்சமயங்களில் பாவையின் மீதான பார்வையில் திளைத்து இருப்பான். விருப்பம், பிடித்தம் எல்லாம் யோசிக்காது அவளைப் பார்த்தால் வயதிற்குரிய ஒரு பரவசம்! பட்டாம்பூச்சி தருணம்!

சாதனா இரண்டாம் வருடம் படிக்கும்போது சில சமயம் கல்லூரி விஷயமாகப் பார்க்க, பேச நேரிடும். அப்படி பேசிய பொழுதுகள் குறைவென்றாலும் இப்போதும் பொக்கிஷம் அவனுக்கு. அவளின் நிமிர்வு, தைரியம் எல்லாம் பிடிக்கும்!

அவள் குடும்பத்தை இன்னும் பிடிக்கும்.  மாதவனும் உதய்குமாரும் சாதனா, செல்வாவின் சித்தப்பா பிள்ளைகள். உதய்யின் அம்மா அவன் பிறக்கும்போது இறந்துவிட, உதய் என்றால் அத்தனை செல்லம் அவர்களுக்கு. உதய் மீது அக்கா, அண்ணன் காட்டும் பாசம்பார்த்தே தன் தம்பி ஜீவாவிடம் அனுசரணையாக நடக்க ஆரம்பித்தான் பரசுராம்.

மாதவனுக்கும் சாதனாவிற்கும் சில மாதங்களே வித்தியாசம், செல்வா சாதனாவின் உடன்பிறந்த சகோதரன். ஆனால்,  அவர்களுக்குள் அத்தகையை வேறுபாடு இருக்காது. இதில் சாதனா, செல்வாவின் பெற்றோர் மூன்று வருடம் முன் ஒரு விபத்தில் இறந்துவிட்டது தெரிய, இன்னும் அவர்கள் மீது ஒரு கரிசனம்.

மாதவனைப் பார்க்கும்போதெல்லாம் சாதனாவின் தரிசனம் கிட்டிவிடும் ராமிற்கு. ரசிக்கும் பார்வையாகத் தொடங்கி, ரகசிய மையலாக மாறி ஒரு கணத்தில் மையல் காதலாக மையம் கொண்டது! ஆனால்,  அவன் மட்டுமே அவள் மீது காதல் கொண்டான், இன்றுவரை அவனாக சென்று அந்த காதலை சொன்னதுமில்லை, காட்டியதுமில்லை!

இவர்கள் திருமணம் கூட மூம்மூர்த்திகளாக அவனின் மச்சான்கள் முயற்சியால் அரங்கேறியதுதான். அப்படியே பழைய நினைவில் மூழ்கியவனுக்குக் களைப்பில் உறக்கம் சுழட்டியது. மாலை மூன்று மணிக்கு மேல் எழுந்தவன் சாதனாவைப் பார்க்க பரபரப்பாகக் கிளம்பினான்.

பசியும் பெரிதாக இல்லையென்பதால் ஒரு ஜூஸ் வாங்கிப் பருகியவன் வெளியே இருந்த வராண்டாவிற்கு வந்து பார்த்தான். நாற்காலிகள், டேபிள்கள் எல்லாம் இணைய வசதியுடன் போடப்பட்டிருக்க, அங்காங்கே எல்லோரும் லேப்டாப்புடன் வேலைப் பார்த்தனர். சாதனாவும் அங்கே இருக்க, அவள் முன்னே போய் உட்கார்ந்தான்.

“சது, சாப்பிட்டியா?” என்று ராம் கேட்க,

“வொர்க் டைம்ல என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க ராம்” என்றாள் கொஞ்சம் கட்டளையான குரலில்.

“சரி பண்ணல” என்றவன் அவளைப் பார்த்தபடி உட்கார்ந்துவிட, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே இருந்தான். சாதனாவிற்கு அவன் பார்வை புரிந்தாலும் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். உதய் சொல்வது போல், திருமணத்திற்கு முன் திருட்டுத்தனமாக அவளைப் பார்ப்பவன், திருமதியானபின் நேரே பார்க்கிறான், அவ்வளவுதான் வித்தியாசம்!

சாதனா வேலையை முடித்து மீண்டும் அறைக்குள் சென்றவள், கீழே வந்து அவளுக்கும் அவனுக்கும் காஃபி வாங்கி அவனிடம் கொடுக்க, ராமிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.

இருவரும் பேசாமல் காஃபியைப் பருக, சாதனா கொஞ்ச தூரம் நடக்கலாம் என்று  நினைத்து இவனிடம் ஒன்றும் சொல்லாமல் முன்னே எழ,  இவனும் அவளோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடன் நடந்தான். மனைவி முன்னால் நடக்கவும்தான் அவள் உடையைப் பார்த்தான். சின்னதாக ஒரு க்ராப் டாப், ஜீன்ஸ் அணிந்திருக்க, நடக்கவும் இடை வெளி நன்றாகத் தெரிய, சட்டென சினம் அவனிடம். சிலர் பார்வை அவள் மீது படிவது கண்டு இன்னும் கோபம் வந்தது.

எப்போதும் சாதனாவிடம் அவன் அவனாகவே இருக்க மாட்டான், சாதனாவிற்குப் பிடித்த மாதிரி இருக்கவேண்டும் என்று நினைப்பவன் இன்று எல்லாவற்றையும் மீறி அவளருகே சென்று,

“ஏன் சது, மேல ஒரு ஜாக்கெட், இல்லை hoodie போடலாமில்லை. அட்லீஸ்ட் கழுத்துல இருக்க ஸ்டோலை வைச்சுப் போர்த்திக்க” என்று ராம் சொல்லவும்

“ஏன்? எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கென்ன?”

“எனக்கென்னவா? மத்தவங்க உன்னை பார்க்கிறது எனக்குப் பிடிக்கல, நீ என்னை என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோ, ஐ டோண்ட் கேர்” என்று கடுப்பானவன் அவள் கழுத்தில் இருந்த ஸ்டோலை சட்டென இழுத்து ஷால்வையாகப் பின்னால் போர்த்தினான்.

“ராம்” முறைப்பாக சாதனா கணவனைப் பார்க்க, அவனோ பதில் பேசாது அவள் இடையைப் பிடித்து நடந்து இன்னும் மனைவியைப் பேச்சற்றவளாக்கினான். 

✅ End of Episode 2
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 week ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 week ago

மனைவி கோபம் கொண்டு 

மலை மேல் உட்கார்ந்து கொண்டால் 
மலை இறக்குவது எப்படி 
மனம் இருந்தால் 
மார்க்கமுண்டு..... 
மச்சான்களின் யோசனைப்படி மலை பிரதேசம் வந்து விட்டான் 
மனம் வருந்தி கேட்கும் மன்னிப்பை மனைவி ஏற்றுக் கொள்வாளா????
முகம் திருப்பும் 
மனைவியை 
மண்டியிட்டு மன்றாடும் மன்னவன் ராம்.....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top