Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 11

காளிதாஸன் 11

கார்த்தியின் பதிலால் காளிதாஸன் அதிர்ந்து போனான். கார்த்தி காதலிக்கிறோம் என்று சொல்லி விட, அடுத்தடுத்து அதனைக் குறித்த கேள்விகள் வரவும், இதனின் பின்விளைவுகளை யோசித்தவன் கோபத்துடன் அவளை இழுத்துக் கொண்டு போனான்.

அவனின் வீட்டில் அலுவலக அறை, கீழ்த்தளத்தில் இடப்பக்கம் இருந்தது. அங்குதான் ப்ரஸ் மீட் ஏற்பாடு செய்திருந்தான். அங்கிருந்தும் வீட்டிற்குள் நுழைய ஒரு கதவுண்டு. இரண்டு கதவுகள் தாண்டினால் ஹால் உண்டு, அங்கேயே ஒரு பக்கம் sliding door கண்ணாடியால் போட்டப்பட்ட அறைக்குள் கார்த்தியை இழுத்துச் சென்ற காளிதாஸன்,

“அறிவிருக்கா உங்களுக்கு? என்ன நினைச்சிட்டு அப்படி சொன்னீங்க? ஏற்கெனவே உங்க செயலால எனக்கு அவ்வளவு டென்ஷன். இப்போ இப்படி உளறிட்டீங்க? எதுக்கு இப்படி ஒரு பொய் சொன்னீங்க நீங்க?” என்றான் எரிச்சலாக.

கார்த்தி இதனை எதிர்ப்பார்த்ததால் அமைதியாகி விட்டாள்.

“ஆன்ஸர் மீ! உங்களை நடந்த உண்மையைத்தானே சொல்ல சொன்னேன். நான் ஹெல்ப் பண்ணினேன் சொல்றதுக்கு என்ன?” என்று அதட்டலாய்க் கேட்க,

“உண்மையைத்தான் சொன்னேன்” என்று மெல்ல சொன்னாள் கார்த்தி.

“நான்சென்ஸ்! என்ன உண்மை?” என்றான் கோபத்துடன். தலையைப் பிடித்தபடி சோஃபாவில் உட்கார்ந்தவனுக்கு வரிசையாய் போனில் அழைப்புகள். மகாதேவன், சிவகாமி, கவின் என்று தொடர்ந்து அவர்கள் அழைக்க அவனின் டென்ஷன் உச்சம் தொட்டது.

“வாலி” என்று கத்த, அவன் டோரைத் திறந்து அங்கேயே நின்றான். எப்போதும் அழைத்தவுடன் அவனருகே வந்து நிற்பவன், இன்று இவர்களுக்குத் தனிமை கொடுத்து கதவருகே  நிற்க,

“ஹேய் என்ன நீயும் இரிட்டேட் பண்றியா? உள்ள வா மேன்” என்று கத்திய காளிதாஸன்,

“இந்த போனை பிடி, ரொம்ப முக்கியமான கால்ஸ்னா மட்டும் பேசு. ஒழுங்கா பேசு, உளறி வைக்காத” என்று அதட்டி அனுப்பினான்.

“என்ன உண்மை?” என்று அவளைப் பார்த்தவன், “உட்காருங்க ப்ர்ஸ்ட்” என்றான் அதட்டலாக.

சோஃபாவில் உட்கார்ந்தவள், “அவங்க கேட்டப்போ ஏன் அது உண்மையா இருக்கக் கூடாதுன்னு தோணீச்சு, எனக்கு… எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு காளிதாஸ்” என்றாள் அவன் முகம் பார்த்து.

நேற்று இருந்த கலக்கம், பயம், அழுகை ஒன்றுமே இல்லை. முழுத் தெளிவு.

“பிடிச்சிருந்தா லவ்னு அர்த்தமா? யோசிக்கவே மாட்டீங்களா?” என்றான் எரிச்சலாக.

“அவங்க அப்படி கேட்ட அந்த நிமிஷம் அதை ஏன் உண்மையாக்கக் கூடாதுன்னுதான் என்னோட மனசு நினைச்சது..” என்ற கார்த்தியை முழுதாய் சொல்ல விடாது,

“அந்த நிமிஷம் தோணினா அப்படியே பேசுவீங்களா? நிமிஷத்துல எடுக்கிற முடிவா இது? அட்டர் நான்சென்ஸ் கார்த்தியாயினி, உங்ககிட்ட இதை நான் எதிர்ப்பார்க்கல” என்றான் காளிதாஸன் அதிருப்தியுடன்.

“எல்லா முடிவும் ஏதோவொரு நிமிஷத்துல எடுக்கிறதுதானே? என்னோட முடிவுல என்ன தப்பு சொல்லுங்க? நீங்க சிங்கிள்தானே? யாரையும் லவ் பண்ணலதானே சொன்னீங்க? என்னை மறுக்க என்ன காரணம்? நான் ராஜரத்னம் பொண்ணுன்றதாலயா?” என்று கார்த்தி பொறுமையுடன் அவனிடம் கேட்க,

“நான் மனுஷங்களை அவங்களுக்காக மட்டும்தான் மதிப்பேன்” என்று அவளை முறைத்தவன்,

“நான் சிங்கிள்ன்றதால உங்களை லவ் பண்ணனும்னு சட்டமா என்ன? என்னோட வாழ்க்கையை யாரோட ஷேர் பண்ணனும்னு நான் முடிவு பண்ணனும்” என்றான் அழுத்தமாய். தனது கோபத்தைக் கட்டுப்படுத்த தண்ணீரைக் குடித்தான். அவன் தண்ணீர் குடித்த வேகத்தில் கோபம் புரிய, கார்த்தி மென்குரலில்,

“ஓகே! ஸாரி. தப்புதான். அங்க அவங்க கேட்கவும் என்னையும் மீறி நான் சொல்லிட்டேன், உண்மையை சொல்லணும்னா உங்ககிட்ட தனியா சொல்றதை விட அங்க அத்தனைப் பேர் முன்னாடி சொல்றது எனக்கு ஈசியா இருந்தது, இப்போ என்ன?” என்று நிமிர்ந்து அவனை நன்றாய்ப் பார்த்தவள்,

“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, என்னை வேண்டாம்ன்றதுக்கு ஒரு ரீசன் சொல்லுங்க. நியாயமா இருந்தா நான் ஏத்துக்கிறேன்” என்றாள் கார்த்தியாயினியும் விடாது.

“என்ன தெரியும் என்னைப் பத்தி? உங்களுக்கு உதவி செஞ்சவன்றதுக்காக இப்படி ஒரு முடிவா?”

“உதவி செய்றதுக்கெல்லாம் யாரும் விரும்பிட மாட்டாங்கன்னு உங்களுக்கே தெரியும். உங்களைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுதான், ஆனா, நான் ஒன்னு சொல்லணும். இதை நம்புவீங்களா தெரியல” என்று நிறுத்தியவள்,

“எனக்கு ஒருத்தர் கூட எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணினாங்க. அவருக்குப் பிடிச்சது, பிடிக்காதது எல்லாம் தெரியும் எனக்கு, அவர் கூட பேசி தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, எனக்கு ஒரு கஷ்டம்ன்றப்போ உங்களைத்தான் நான் தேடினேன். எங்க வீட்ல உள்ளவங்களைப் பத்தி உங்களுக்குத்தான் முழுசா தெரிஞ்சது கூட ஒரு காரணமா இருக்கலாம். ஆனா, இந்த கல்யாணம், விருப்பம் இதெல்லாம் இன்னிக்கு இப்போ நினைச்சதுதான்.  நவீன் என் லைஃப்ல வேண்டாம்னு நினைச்சப்போ எனக்கு கஷ்டமாவே இல்லை”

“அவரைத் தெரிஞ்சாலும் ஒரு பிணைப்பு, ஒரு bond எதுவும் தோணல. இதெல்லாம் நீங்க என்னைப் பார்த்து நான் இருக்கேன் சொன்னீங்க இல்லையா, அப்போ தோணிச்சு. எப்பவும் நீங்க எனக்கு இருக்கணும் தோனுச்சு. ஒரு மனம் கேட்குது, உனக்கு உதவி செஞ்சவரை இப்படி நிக்க வைப்பியான்னு? ஆனாலும்..?”

“கார்த்தி! கொஞ்சம் பொறுமையா யோசிங்க. என் மேல இருக்க மரியாதையை நீங்க வேற மாதிரி கற்பனைப் பண்ணிட்டீங்க, உங்க கூட இருக்கவங்க எல்லாம் தவறானவங்களா இருக்கறதால என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கு. similar to stockholm syndrome. ஒன்னும் பிரச்சனை இல்லை, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன அப்புறம் நம்ம பேசலாம்” என்று அவன் விளக்கி சொல்ல கார்த்திக்கு கோபம் வந்தது.

“நீங்க அறிவாளின்னு எனக்குத் தெரியும். அதுக்காக என்னை மொத்தமா முட்டாள்னு முடிவு கட்டிட்டீங்களா? என்னோட ஃபீலிங்க்ஸ் எனக்குத் தெரியாதா?” என்றாள் ஆதங்கமாக.

“என்ன ஃபீலிங்க்ஸ்? என் வயசு தெரியுமா? ஐ அம் ஃபார்டி” என்றான் கடுப்பாக. அவனது வயது அவனுக்கு பெரிய விஷயமே கிடையாது. எல்லாருக்கும் வயது ஆகும்தானே? ஆனால், இந்த பெண், இவளின் உணர்வுகள், அதனை நிறுத்த வேறு எதை சொல்வான்?

அவன் வயதை சொல்ல, கார்த்தியின் கண்களில் அதிர்ச்சி.

“உங்களுக்காகப் பொய் சொல்லல, உண்மைதான். செக் இட்” என்று அவனின் அடையாள அட்டை ஒன்றை வாலட்டில் இருந்து எடுத்து நீட்டினான்.

கார்த்தி வாங்கவில்லை. அவன் பேச்சில் இருந்த உண்மை புரிந்தது. மனம் உடனே, ‘கிட்டத்தட்ட பதிமூன்று வருட வித்தியாசம்’ என்று கணக்கிட்டது.

அவள் யோசிக்க எடுத்த நிமிடத்தில் காளிதாஸன், “இதுக்குத்தான் இவ்வளவு நேரம் கத்துறேன், இப்போ ஷாக் ஆகி நிக்குறீங்க, யோசிக்காம அங்க உளறிட்டீங்க” என்றான் கொஞ்சம் நக்கலாக.

“என்ன உளறினேன்? ஷாக் ஆனேன்தான்! எப்படி ஃபார்டில கூட இவர் யங்கா இருக்காரேனு” என்று சொல்லி அவனை கார்த்தி ரசனையாய் ஒரு பார்வை பார்க்க, காளிதாஸனுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.

“கொஞ்ச நாள்ல தலைமுடி எல்லாம் நரைச்சிடும். அப்போ நான் உங்க கண்ணுக்கு யங்கா எல்லாம் தெரிய மாட்டேன்” என்றான் கடுப்பாக.

“பரவாயில்லை, எனக்கும் கூட ஒரு நாள் நரைச்சிடும்” என்றாள் கார்த்தி பட்டென்று.

“ஹவ் டேர்? இந்த தைரியம் நேத்து இருந்திருந்தா எனக்கு உங்களால எந்த தலைவலியும் இருந்திருக்காது” என்று அவன் எரிச்சலில் பேச, தலைவலி என்றதில் மனம் சுணங்கினாலும்,

“நேத்து காளிதாஸ் என்னோட இல்லையே, நீங்க இருக்கும் போது  என்னவோ என் தைரியம் அதிகமாகத்தான் ஆகுது. இதுவரைக்கும் ப்ரஸ், மீடியான்னு அப்பாவோட அரசியல் விழாக்களுக்குக் கூட போனதில்லை. இன்னிக்கு எல்லாரும் பார்க்க காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன். ஒரு பொண்ணுக்குத் தைரியம் கொடுக்கிறவன்தான் உண்மையான ஆண். என்னைப் பெத்தவங்க, கூடப் பொறந்தவங்க கொடுக்காத தைரியத்தை நீங்க கொடுத்தீங்க” என்றாள் உணர்ச்சி மீகிய நிலையில்.

காளிதாஸூக்கு சுறுசுறுவென அவ்வளவு கோபம் ஏறியது அவள் பேச்சில்.

“உதவி செஞ்சதுக்கு உபத்திரவம் பண்றீங்களா நீங்க? இவ்வளவு ஏஜ் டிஃப்ரன்ஸ் சொல்றேன், பரவாயில்லைன்றீங்க” என்று அவன் இயல்பையும் மீறி கத்தினான்.

“பரவாயில்லைன்னா, பரவாயில்லைதானே சொல்ல முடியும்” என்றாள் தெளிவாக.

ஆத்திரம் தாங்காமல், “இடியட்!! என்ன இந்த age difference எல்லாம் romanticize பண்றீங்களா? சொல்றதுக்கு எல்லாம் பரவாயில்லையா இருக்கும், வாழும்போதுதான் கஷ்டம் தெரியும்” என்று கத்தியவனிடம்,

“உண்மையை சொல்லணும்னா நேத்து வரைக்கும் வாழணும்னு பெருசா ஆசையே இல்லை. கல்யாணம்ன்ற ஆசை, எண்ணம் எல்லாம் என்னைக்கு உங்க மூலமா செல்வா பத்தி தெரிஞ்சதோ அன்னிக்கே போயிடுச்சு. ஆனா, இன்னிக்கு இந்த நிமிஷம் உங்களோட வாழனும்ன்ற எண்ணம் மட்டும்தான் மனசு முழுக்க இருக்கு”

“கார்த்தி, டோண்ட் பீ சில்லி” என்றான் கொஞ்சம் தணிவாகவே.

“நிச்சயமா இல்லை, பார்த்தவுடனே காதலிக்கிற வயசு எல்லாம்  நம்ம தாண்டிட்டோம். உங்க தோற்றம் பார்த்து எல்லாம் நான் காதலிக்கல, நீங்க சொன்னதுதான் மிஸ்டர். காளிதாஸன். எண்ணங்கள்தான் மனுஷங்களை உருவாக்குதுன்னு, உங்களை எனக்குத் தெரியாது. ஆனா, உங்க எண்ணங்கள் தெரியும். அதோட நேர்மை, தூய்மை எல்லாம் தெரியும். இப்போ நீங்க இந்த விஷயத்துக்கு ஓகே சொன்னா அரசியல் ரீதியா உங்களுக்கு நிறைய ஆதாயம் இருக்குன்னு கூட எனக்குத் தெரியும். ஆனாலும் மறுக்குறீங்களே, அது… அந்த மனசுல நான் இருக்கணும்னு எனக்குத் தோனுது” என்றாள் தெளிவாக.

வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கலாம். சில முடிவுகள் வாழ்க்கையாகவே மாறலாம். அப்படித்தான் கார்த்தியாயினிக்குக் காளிதாஸன் வாழ்க்கையாக வேண்டும் என்ற முடிவும்!!

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, “மச்சான்! தாஸேட்டா!” என்று கத்திக்கொண்டு கவினும், நித்திலாவும் வந்தனர்.

“நான் தான் ப்ரஸ்ட்!” என்று  நித்தி அவனுக்கு முன்னே வந்து காளிதாஸனின் தோளில் கைப் போட்டு,

“வாழ்த்துகள் தாஸேட்டா! ஐ அம் சோ ஹாப்பி” என்று சொல்ல,

“ஹேய்! மச்சி!” என்று கவின் இன்னொரு பக்கம் வந்து அணைத்துக்கொள்ள, இருவரையும் உதறியவன்,

“பைத்தியங்களா!” என்று திட்டினான்.

“என்னடா?” என்று இருவரும் விலக, அவன் கார்த்தியைக் காட்ட,

“ஓஹ், உன் ஆள் முன்னாடி நான் பிடிச்சது கோவமா? இங்க பாருங்க கார்த்தி, இவன் எனக்கு ஃப்ரஸ்ட் ப்ரண்ட். நானும் இவனுக்கு அப்படித்தான். என்னடா?” என்று நண்பனை நித்தி பார்க்க,

“உன் பொண்டாட்டியை வாயை மூட சொல்லு கவின். இவங்க சும்மா சொன்னாங்க” என்று கார்த்தியைக் காட்டியவன்,

“லவ்வும் இல்லை, ஒன்னுமில்ல” என்றான் எரிச்சலாக.

வாலி, காளிதாஸனின் போனுடன் உள்ளே வந்தவன், “அண்ணா! தலைவர் கால் பண்ணிட்டே இருக்கார்” என்றான்.

“கொடுடா” என்று வாங்கியவன்,

“கவி, நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னுமே இல்லைடா”

“ஷி இஸ் டிவெண்டி செவன், ஹெல்ப் பண்ணினேன்ற நன்றியுணர்ச்சில என்னவோ பேசிட்டாங்க” என்றதும் கவினும், நித்திலாவும் காளிதாஸனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

“திரும்ப, திரும்ப அதையே சொல்லாதீங்க நீங்க” என்று கார்த்தியும் எரிச்சல் மிகுதியில் அவனிடம் கத்தினாள்.

அவளிடம் பதில் பேசாதவன் கவினிடம், “நீ புரிஞ்சிப்ப நினைக்கிறேன், உனக்கு ஒரு தங்கச்சி இருந்தா எப்படி அட்வைஸ் பண்ணுவியோ அப்படி செய், அவங்களை எங்கரேஜ் செய்யாத. நித்தி உனக்கும்தான்” என்று கண்டிப்பாய் சொன்னவன் வாலியை, ‘பார்த்துக்க’ என்று சொல்லிவிட்டு போனை எடுத்துக் கொண்டு அவர்கள் கட்சித்தலைவரிடம் பேசச் சென்றான்.

கார்த்தியாயினியின் பேட்டியில் ராஜரத்னம் வீட்டினர் கொதித்துப் போயிருந்தனர். உண்மையில் அவர்களுக்கு காளிதாஸனைக் காதலிப்பதால்தான் மற்ற வரன்களை வேண்டாம் என்றாளோ என்ற எண்ணமே. விசாலாட்சி மகளின் செயலை எதிர்ப்பார்க்கவில்லை,

“அந்த பையனைப் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தா, நம்ம கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமே, இப்படி ஊருக்கு முன்னாடி…” என்று அவர் அழ,

“பையனா? அவன் என்னை விட வயசுல பெரியவன். நாற்பது வயசுக்காரன் கூட உங்க பொண்ணுக்கு காதல்” என்றான் செல்வா இகழ்ச்சியாக.

“என்ன அண்ணா சொல்றீங்க?” என்று ராஜீவ் அதிர்ச்சியாக,

“ஆமாடா, அவனுக்கு நாற்பது வயசு. நம்ம மானத்தையே வாங்கிட்டா அவ” என்று பல்லைக் கடித்தான்.

“இவளால சொந்தக்காரங்க, கட்சிக்காரங்கன்னு எல்லார் முன்னாடியும் நமக்குத் தலைக்குனிவு. சிஎம் போன்ல அப்பாவைக் கத்துறார், இவ அவனைக் காதலிக்கிறேன்னு எப்படி திமிரா சொன்னா பார்த்தியா?” என்ற செல்வாவின் மனத்தில் வஞ்சம் பெருகியது. ஏற்கெனவே, காளிதாஸனுக்குத் தங்களைக் கண்டால் ஆகாது. இதில் தங்கைக்கும் உண்மைத் தெரிந்திருக்க, நிச்சயம் அவனின் ஆட்டம்  இவர்களை அழித்துவிடும் என்று புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை இன்னும் வெறுப்பைத் தந்தது.

✅ End of Episode 11
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 6 days ago

Very nice. 

Kavi Natarajan Reader 6 days ago

💞💞💞💞💞💞💞

Mrs Beena loganathan Reader 6 days ago

காளிதாசனை காண வந்து சக்தியின் காதலில் சிக்கி விட்டேன் இன்று 😂😂😂😂🔥🔥👍🏻👍🏻

Mrs Beena loganathan Reader 6 days ago

வயது வித்தியாசத்தை காரணம் காட்டி

விலகி நிற்க....

வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்
விவரமான எண்ணம்தான் விருப்பம் 
வயது தடையில்லை..
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top