Episode 27
“இவனுக்குப் பிரசன்னான்னு பெயர் வச்சதுக்குப் பதிலா பிரச்சனைன்னு பெயர் வச்சுருக்கலாம் வரு, இவன் தெரிஞ்சு செய்றான்னா தெரியாம செய்றான்னா ஒன்னும் தெரியல எனக்கு” என்று தங்கையிடம் புலம்பினான் ஜனார்த்தன். வர்ணவியோ சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தாள்.
“இதுங்க சண்டைப் போடுறதுன்னா போட வேண்டியதுதானே? அதென்ன நடுவுல இங்க கவனி ஜனான்னு என்னை இழுக்குறாங்க” என்று கடுப்பாக சொல்லும்போதே,
“ஜனா, இங்க கவனிங்க” என்று மலர் அதட்டினாள்.
விஷயம் இதுதான். பிரசன்னா மாலை நேரத்தில் அமிழ்தாவையும் சாத்வீயையும் வெளியே அழைத்துச் சென்றிருக்க, அமிழ்தா ஒரு நாய்க்குட்டி வேண்டும் என்று கேட்டுவிட, உடனே அவனுக்குத் தெரிந்த இடத்தில் சொல்லி ஒரு அழகிய பொமேரியன் நாய்க்குட்டி வாங்கிவிட்டான்.
சுதந்திர மலர் வீட்டினுள் நுழையவுமே நாய்க்குட்டித் துள்ளிக் கொண்டு அவளை நோக்கி வர, ஒரு நொடி பயந்தவள் சோஃபாவில் ஏறி நின்றுகொண்டு ஜனாவை அழைத்தாள். ஜனாவும் அதுவரை அறையில் இருந்தவன் அப்போதுதான் ஹாலுக்கு வந்து நாய்க்குட்டிப் பார்த்துவிட்டு,
“சோ க்யூட்” என்று சொல்லி மலரைப் பார்க்க, அவளோ அவனை முறைத்து,
“யார் பப்பியை இங்க கொண்டு வந்தா?” என்று சத்தமிட்டாள்.
சௌந்தர்யா ஜகனுடன் கோவிலுக்குச் சென்றிருக்க, வர்ணவி கிச்சனில் இருந்தவள் “அவர்தான்டி வாங்கிட்டு வந்தார், அமிழ்தா கேட்டாளாம்” என்றதும்,
“அவனுக்கு அறிவுனு ஒன்னு இருக்கா? குழந்தைக் கேட்டா வாங்கித் தர பொருளா இது?” என்று பல்லைக் கடித்தாள் மலர்.
அதற்குள் மலரின் சத்தம் கேட்டு பிரசன்னா வர, அவன் கைப்பிடித்து நாய்க்குட்டியைத் தேடியபடி அமிழ்தா வந்தாள். அம்மா சோஃபாவில் ஏறி நிற்பது கண்டு அமிழ்தா உடனே,
“நானும் நானும்” என்று சோஃபாவில் ஏறி குதிக்க,
“அமிழ்து, இறங்கு” என்றாள் மலர்.
“நோ ம்மா” என்று அமிழ்தா மறுக்க,
“வரு, நான் இன்னும் ஃபேஸ் வாஷ் கூட செய்யல, நீ இவளைத் தூக்கு. பேபி அத்தைக் கிட்ட போ” என்று சொன்னவள் ஜனா நாய்க்குட்டியைத் தூக்கியதும் சோஃபாவில் இருந்து கீழிறங்கினாள்.
“முதல்ல பப்பியை எங்க வாங்கினாங்களோ அங்க போய் கொடுக்க சொல்லுங்க ஜனா” என்று மலர் சொல்ல,
“மா, என்னோட பப்பி” என்று அமிழ்தா சொல்ல,
“அமிழ்து, நீ பிக் கேர்ள் ஆனதும் பப்பி வாங்கலாம், இப்போ வேண்டாம்” என்று அதட்டினாள் மலர். உடனே அமிழ்தாவின் முகம் வாடிவிட, பிரசன்னா மலரை முறைத்தான்.
“மா, எனக்கு பப்பி வேணும்” என்று அழ, வர்ணவி குழந்தையை சமாதானம் செய்தாள்.
“டேய், நான் வாங்கிக் கொடுத்தேன்னு குழந்தையோட ஆசையைக் கெடுக்க வேண்டாம்னு சொல்லுடா ஜனா” என்று பிரசன்னாவும் மலரிடம் நேராய்ப் பேசாது ஜனாவை இழுக்க ஜனாவோ முழித்தான்.
மலரோ “இங்க பாருங்க ஜனா, நான் ஒன்னும் அப்படி நினைச்சு சொல்லல, முதல்ல புரிஞ்சிக்க சொல்லுங்க” என்றாள்.
“அப்போ வேற என்ன காரணம்னு கேளுடா” என்றான் பிரசன்னவாசன்.
“எனக்கு வீட்ல அனிமல்ஸ் வளர்க்கிறது பிடிக்காது” என்று மலர் சொல்ல,
“நம்ம விருப்பத்தைக் குழந்தை மேல திணிக்கக் கூடாதுன்னு சொல்லுடா ஜனா” என்றான் அண்ணன்.
தங்கையோ,
“நான் ஒன்னும் மத்தவங்க மாதிரி என்னோட விருப்பத்தை அடுத்தவங்க மேல திணிக்கற ஆள் கிடையாது” என்று பிரசன்னாவைக் கொட்டியவள்,
“விலங்குகளுக்கும் சுதந்திரம் உண்டு. வீட்ல போட்டு அடைச்சு வச்சு அதோட சுதந்திரத்தைப் பறிச்சிட்டு நல்லா கவனிச்சா மட்டும் அது சந்தோஷப்படாது, அது தப்பான விஷயம்”
“அப்போ எத்தனையோ பேர் பெட் அனிமல்ஸ் வளர்க்கிறாங்க, டாக்ஸ் அவ்வளவு பாசமா இருக்கு அவங்க ஓனர்ஸோட. இவ சொல்ற மாதிரி அதோட சுதந்திரத்தைப் பறிச்சது உண்மைன்னா அவ்வளவு பாசமா இருக்குமா?” என்றான் பிரசன்னா.
“மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்ல, என் வீட்டுப் பிள்ளைங்களுக்கு வேண்டாம், அன்பு காட்டனும்னா அதுக்கு அந்த பொருள் சொந்தமா இருக்கணும்னு அவசியமில்லை” என்று மலர் விடாது அவள் கருத்தை வலியுறுத்த பிரசன்னாவும் பின்வாங்கவில்லை.
“எனக்கு அமிழ்தாவுக்கு வாங்கிக் கொடுக்க உரிமையிருக்கு, குழந்தை ஆசைப்பட்டா நான் வாங்கிக்கொடுத்தேன், மத்தவங்களுக்குப் பிடிக்கலன்னா ஐ டோண்ட் மைண்ட். எல்லாத்துக்கு ரூல்ஸ்” என்று பிரசன்னா பேசிவிட,
“என்ன ரூல்ஸ் பேசினேன் நான்? நீதான் சிரிச்சா ரூல்ஸ், பேசினா ரூல்ஸ்னு போடுற. அமிழ்தான்னு இல்ல சாத்வீக்கு வாங்கிக் கொடுத்தாலும் இதையேதான் நான் சொல்வேன்” என்று இப்போது நேரடியாகவே சண்டையிட்டனர் அண்ணனும் தங்கையும்.
இந்த அவகாசத்தில் ஜனா தங்கையிடம் புலம்ப,
மலரோ “குழந்தைங்களால எப்படி அதை ஹாண்டில் செய்ய முடியும்? அதுவும் ரொம்ப குட்டி பப்பியா இருக்கு, அதோட முடியெல்லாம் வீடு முழுசும் கொட்டும், ஒரு நேரம் போல இருக்காது, நானே பார்த்திருக்கேன் சில டைம் குட்டி பப்பி கூட கடிக்க செய்யும். நீங்க கொஞ்சம் சொல்லுங்க.” என்று ஜனாவிடம் சொல்ல,
“சொல்லுங்க சொல்லுங்கன்னு இரண்டு பேரும் கேப் விடாம பேசினா எங்க நான் சொல்றது?” என்று ஜனாவும் டென்ஷனாக.
ஜனாவின் சத்தத்தினால் அண்ணன் தங்கை இருவரும் கொஞ்சம் முகம் வாட ஜனாவைப் பார்க்க, இருவரையும் முறைத்தான் அவன்.
பிரசன்னாவோ “டேய் மச்சான், குழந்தையைப் பாருடா, அவ எவ்வளவு ஆசையாக் கேட்டா. பேபி முகமே வாடிப்போச்சு” என்று சொல்ல அமிழ்தா அழுதுகொண்டிருந்தாள். அப்போதும் மலர் இரங்கவில்லை.
“குழந்தைங்க அப்படித்தான் இருப்பாங்க, சின்ன வயசுல பார்க்கிற எல்லா பொருள் மேலயும் ஆசை வரும். நம்மதான் நல்லது எது? கெட்டது எதுன்னு சொல்லித் தரனும். இன்னிக்குக் கேட்டா உடனே வாங்கிக் கொடுத்தா அந்த பொருளோட மதிப்பும் தெரியாது, நேரத்தோட மதிப்பும் தெரியாது. அப்புறம் எல்லாத்துக்கும் அவசரப்படுவாங்க. முதல்ல நாய்க்குட்டின்றது பொருள் இல்ல, உயிர் அது” என்றாள் அழுத்தமாக.
“அதெல்லாம் வளர்ந்த குழந்தைங்களுக்குடா, இரண்டு வயசு குழந்தைக்கு எவ்வளவு ப்ரஷர் போடுறா இவ” என்று எரிச்சலானான் பிரசன்னா.
அவனுக்கு அமிழ்தாவை அவ்வளவு பிடித்திருந்தது. மச்சான் மகள் என்ற பாசமா? தங்கை மகள் என்ற பாசமா? என்று ஆராயாமல் அந்த மழலை மேல் அளவுக்கடந்த அன்பு தோன்ற, சாத்வீ கேட்டு கூட அவன் இப்படி உடனடியாக எதுவும் வாங்கித் தந்ததில்லை.
“இரண்டு வயசுல ஒழுங்கா வளர்க்காத குழந்தைதான் முப்பது வயசுக்கு மேல ஆனாலும் ஒழுங்கா வளர்ந்து நிற்காது” என்று பிரசன்னாவைப் பார்த்து சொல்ல,
“ஏய்! என்னை என்ன சொல்றியா நீ?” என்று பிரசன்னா எகிற,
“உன்னைத்தான் சொல்றேன் என்ன இப்போ” என்றாள் அவனின் அனல்பார்வையைத் தாங்கியவளாக.
ஜனாவோ நாய்க்குட்டியைக் கையில் வைத்திருந்தவன் அதனைப் பத்திரமாய் ஓரிடத்தில் அடைத்துவைத்துவிட்டு, கைகளைக் கழுவி வந்து,
“ஷட் அப்!” என்றான் அவ்வளவு சத்தமாக. தங்களுக்குள் சண்டைப் போடுவதை நிறுத்திவிட்டு ஜனாவைப் பார்க்க,
“பிரசன்னா, நீ பப்பியை ரீடர்ன் பண்ணிடுடா” என்றான் முடிவாக.
“என்னடா நீயும்?” என்றவனைக் கை நீட்டித் தடுத்தவன்,
“குழந்தைங்க நாய்க்குட்டி கூட விளையாடும்போது அவங்களால தனியா சமாளிக்க முடியாது, யாராவது ஒருத்தர் கூடவே இருந்து பார்க்கணும். யார் பார்ப்பா சொல்லு? தாத்தா அப்பத்தா ரூம் விட்டு வரதே பெருசு, பாரு இவ்வளவு சத்தம் கேட்டு அவங்க வரல”
“அம்மாவும் வருவும் எப்படி எல்லா நேரமும் கவனிக்க முடியும்? நெக்ஸ்ட் மந்த் ப்ளே ஸ்கூல் சேர்ந்தா அமிழ்தாவோட கவனம் அதுல திரும்பிடும். இத்தோட இரண்டு பேரும் இந்த பேச்சை விட்டு வேற வேலைப் பாருங்க” என்றான் கட்டளையாக.
ஜனா அவ்வளவு அழுத்தி சொல்லியிருக்க பிரசன்னாவால் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? ஆனால் அமிழ்தாவோ அழத் துவங்கிவிட்டாள்.
“வரு, நீ இவளை சாத்வீ கிட்ட அழைச்சிட்டுப் போ. இவளுக்குப் புரியவை” என்றவள் தங்கள் அறைக்குள் சென்றாள்.
பிரசன்னாவோ ஜனாவைப் பார்த்தவன்,
“டேய் அந்த கூடையில பப்பியை வச்சுக் கொடு” என்றான்.
பிரசன்னாவுக்கு சின்ன வயதில் இருந்தே நாய், பூனையெல்லாம் அலர்ஜிதான். வாங்கி வருகையில் கூட அங்குள்ள ஆட்கள் கூடையில் வைத்துக் கொடுத்திருக்க, இங்கு வர்ணவிதான் வெளியே எடுத்தாள்.
ஜனாவிற்கு நாய் வளர்க்க ஆசையிருந்தும் பிரசன்னாவிற்காக வாங்கவில்லை. அப்படிப்பட்டவன் இன்று தன் மகளுக்காக வாங்கி இருக்க நெகிழ்ந்து போனான் ஜனார்த்தன்.
சௌந்தர்யாவும் ஜகனும் கோவில் போய்விட்டு வர, மலர் அமிழ்தாவை மடியில் வைத்து உட்கார்ந்திருந்தாள். அமிழ்தாவின் முகம் அழுது வாடிப்போயிருக்க,
“என்னாச்சு மலர்? ஏன் குழந்தை அழுத மாதிரி இருக்கா?” என்றார்.
“கேடிம்மா நீ, கரெக்டா எஸ்கேப் ஆகிட்ட” என்றான் ஜனா கடுப்பாக. மலர் அவனை முறைக்க,
“டேய் என்னடா சொல்ற? என்ன எஸ்கேப் ஆனேன்?” என்று முழித்தார்.
“ம்ம், இவ்வளவு நேரம் மூன்றாம் உலகப்போரை மூச்சைப் பிடிச்சு நிறுத்தி வச்சிருக்கேன், தோ நான் கட்டினதும் இவ கட்டினதும் சேர்ந்து உயிரை வாங்கிடுச்சு” என்றான் சோர்வாக.
மலரோ “என் மேல என்ன தப்பு ஜனா?” என்று கணவனிடம் காய,
“பின்ன என்னைப் பேசவிடாம இரண்டு பேருமே பேசினா” என்றான் இப்போதும் எரிச்சலாக.
வர்ணவி விஷயத்தை சொல்லவும் “குழந்தைக்கு எதுக்கு நாய்க்குட்டி? பிள்ளையைக் கடிச்சிட்டா” என்றார் ஜகன்.
“அதேதான் மாமா நானும் சொன்னேன். என்னைப் பேசுறார் இவர்” என்றாள் மலர்.
“அப்பா, நாங்க தப்புன்னு சொல்லல. இரண்டு பேரும் கேப்பே விடாம அடிச்சிக்கிறாங்க, நீங்க இருந்திருக்கணும் வீட்ல. அப்போ தெரியும் என் நிலைமை” என்றவனைப் பார்க்க எல்லாருக்கும் சிரிப்புதான்.
அமிழ்தாவைப் பார்த்த சௌந்தர்யா,
“அம்முக்குட்டி, அப்பத்தா கிட்ட வாங்க. நம்ம பொம்மை டாக் வாங்கலாம்” என்று அவளைத் தூக்க முயல, அம்மாவின் மீது கோபமிருந்தாலும் அவளை விட்டு அசையவில்லை அமிழ்தா.
“விடு சௌ, சின்னக்குழந்தைதானே அவளா சமாதானம் ஆகிடுவா” என்று மனைவியிடம் சொன்ன ஜகன் மருமகளிடம்,
“மலர், சாரிம்மா. இவங்க இந்த ட்ராமாவெல்லாம் செய்றாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியாது. நான் உங்கிட்ட சொல்லிடலாம்னுதான் சொன்னேன். உங்கத்தை வேண்டாம்னு சொல்லிட்டா, இவன் இருக்கானே சும்மாவே எல்லாத்துக்கும் என்னை இழுப்பான். அதான் அமைதியா இருந்திட்டேன்” என்று மன்னிப்புக் கேட்க,
“அய்யோ மாமா நீங்க ஏன் சாரியெல்லாம் கேட்கிறீங்க? எனக்கு உங்க மேல கோவமெல்லாம் இல்லை” என்றாள் மலர்.
சௌந்தர்யா அருகே உட்கார்ந்த மகனிடம்,
“டேய் அது எப்படிடா நீ உங்கப்பா மாதிரியே இருக்க? நீ மாட்டினதும் இல்லாம எங்களைக் கோர்த்துவிட்ட. இப்போ உங்கப்பா மட்டும் அப்ரூவர் ஆகிட்டு என்னை மாட்டிவிட்டு நல்ல மாமனார்னு பெயர் எடுக்கிறார்” என்று கடுப்பாய் மொழிய,
“உன்னையெல்லாம் உன் மருமகளும் மருமகனும் போடுற சண்டைக்குப் பஞ்சாயத்து செய்ய விட்டிருக்கணும், அப்போ தெரிஞ்சிருக்கும் சேதி” என்றான் ஜனா.
அமிழ்தா பசிக்கிறது என்று சொல்ல, மகளை ஜனாவின் மடியில் உட்காரவைத்த மலர்,
“அப்பா கூட இரு பேபி, அம்மா வேலைப் பண்ணிட்டு வரேன்” என்று சொல்ல மெல்லமாய்த் தலையசைத்த குழந்தை ஒன்றும் பேசவில்லை.
கிச்சனுக்குள் வர்ணவியிடம் சௌந்தர்யா,
“ஏன் டி இவங்க சண்டை உன் தாத்தா ஆத்தாவுக்கெல்லாம் தெரியுமா?” என்று கேட்க,
“தெரியாதும்மா, அவங்க ரூம் சாத்தியிருந்துச்சு. சத்தம் கேட்கல போல” என்றாள் அவள்.
“அதுவும் நல்லதுக்குத்தான், எப்ப ரூம் விட்டு வெளியே வந்தாலும் பக்குன்னு இருக்கு. ரொம்ப சண்டைப் போட்டாங்களாடா இவங்க இரண்டு பேரும்?” என்று கேட்கையிலேயே சுதந்திரமலர் வந்துவிட சௌந்தர்யா கவனிக்கவில்லை.
“அண்ணன் தங்கச்சி இரண்டும் அழுத்தம், பாவம் என் குழந்தை” என்று ஜனாவிற்காக வருத்தப்பட,
“எந்த குழந்தை பாவம் அத்தை?” என்று கேட்டபடியே மலர் அவரிடம் வந்தாள்.
“எல்லா குழந்தையும் பாவம்தான்” என்று சமாளிக்க,
“இருந்தாலும் உங்க ஆக்டிங்கை அடிச்சிக்க முடியாது அத்தை, எத்தனை தடவை நீங்க என்னைக் காப்பாத்த ட்ரை பண்றீங்கன்னு நான் அப்படியே உங்களை மேல வச்சுப் பார்த்தேன் தெரியுமா? நீங்க என்னடான்னா உங்க குழந்தைக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க?” என்றாள் நக்கலாக.
“அது நீயும் அவனும் அப்போதான் ராசியா இருப்பீங்கன்னுதான் மலர்” என்று சௌந்தர்யா சொல்லவும்,
“என்னோட எமோஷன்ஸோட விளையாடுறது தப்பில்லையா அத்தை? அவர் மேல கோவப்படவும் முடியாம, ஏத்துக்கவும் முடியாம நான் தவிச்ச தவிப்பெல்லாம் உங்களுக்குப் புரியாது. நீங்களும் உங்க மகனுக்கு அம்மாவா யோசிச்சிருக்கீங்க, எனக்கு அத்தையா இல்லை” என்றாள் வருத்தமாக. அவளின் தோளைச் சுற்றிக் கைப்போட்டு அணைத்துப் பிடித்தவர் கலங்கிய கண்களுடன்,
“ப்ளீஸ் மலர், அப்படி சொல்லாத. நான் நல்ல அம்மாவா இருக்கணும்னு நினைச்சதை விட, ஜனா பொறந்த அப்போ இருந்து நல்ல மாமியாரா இருக்கணும்னு நினைச்சிட்டே இருந்திருக்கேன். என்னோட மாமியார் என்னை அப்படி நடத்தல, நான் அவங்களை மாதிரி இருக்கக் கூடாதுன்னு எப்பவும் நினைப்பேன்”
“நிஜமா நீ அன்னிக்கு அழுதப்போ எனக்கே கஷ்டமாதான் இருந்துச்சு. முன்னாடியே எனக்கும் தெரியாது, இந்த வாசுப்பையன் தான் ஐடியா கொடுத்திருக்கான், நானாவே தான் கண்டுபிடிச்சேன். அதுக்கு அப்புறம் நானும் ஜனா கிட்ட சொல்லிடுடான்னு சொல்லிட்டே இருந்தேன் மலர். அவன் எங்க திரும்ப நீ விட்டுப்போயிடுவியோன்னு சொல்லாம இருந்துட்டான்” என்று சௌந்தர்யா பேசவும் மலருக்கு உருகிப்போயிற்று.
எப்போதும் கலகலப்பாக இருப்பவர் கலங்கிப் பேசவும் அவள் அகமும் அன்பில் கசிய,
“அத்தை.. அதுவும் ஜனா சொன்னார். இவ்வளவு ஃபீல் பண்ணி பேசாதீங்க, உங்களுக்கு செட் ஆகல, நீங்க சிரிச்சாதான் நல்லாயிருக்கு. எனக்கும் நல்ல மருமகளா இருக்கணும்னு ஆசை, இப்படி உங்களை அழவைக்கிற மருமகளா இருக்கவேண்டாம்” என்று சொல்லி அணைத்துகொள்ள, ஜனா பசி பொறுக்கமாட்டாமல் கிச்சனுக்குள் வந்தவன் இந்த காட்சியைப் பார்த்துவிட்டு அம்மாவை முறைத்தான்.
“எம்மா பசிக்குதுன்னு சொல்லிட்டிருக்கேன்” என்று கத்த,
“இருடா, இரண்டு நிமிஷம்” என்றதும் அவன் வெளியே போனான்.
சௌந்தர்யா,
“அவனுக்குப் பசிக்கிற கோவமில்ல மலர், நீயும் நானும் கட்டிக்கிட்டோம்ல, அந்த ஜெலஸி. பொறாமைப் பிடிச்சவன்” என்று திட்டிக்கொண்டே எல்லாம் செய்து முடித்தவர் மலரைப் பிடித்து நிறுத்தினார்.
“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு நீ சொல்ல மாட்டான்னு எனக்குத் தெரியும் மலர், அது போகட்டும். இப்போ என்ன முடிவு செஞ்சிருக்க? அவன் என்ன தப்பு செஞ்சாலும் மன்னிச்சிடு மலர், இல்ல மறந்திடு” என்றதற்கு,
“கொஞ்சம் டைம் வேணும் அத்தை” என்றாள் மலர்.
எல்லாரும் உண்டு முடித்துவிட, இரவு அமிழ்தாவைத் தன்னருகே ஜனா படுக்க வைத்திருக்க, மலர் அமிழ்தாவின் இன்னொரு புறம் படுத்தாள்.
வெகு நேரமாகியும் உறக்கம் வரவில்லை சுதந்திர மலருக்கு. அவளால் ஜனாவை விட்டுப் போகவும் முடியவில்லை, அதே சமயம் அவனை மன்னித்து ஏற்கவும் முடியா பெருந்தவிப்பு பெண்ணிடம். அறைக்குள் இருப்பது ஒருமாதிரியாக இருக்க மொட்டை மாடிக்கு ஏறிச் செல்ல பார்க்க, இரண்டாம் தளத்தில் ஒரு அறையினுள் வெளிச்சமாய் இருக்க, கண்ணாடி வழியே பார்த்தால் பிரசன்னா இருந்தான்.
“ஒரு மணிக்கு இந்த பிசாசு என்ன செய்யுது?” என்று யோசித்தவள் கண்ணாடியை நன்றாய் உற்று நோக்க, பிரசன்னா குடித்துக் கொண்டு இருந்தான். அவள் பார்ப்பது தெரியாதவன் அவன் பாட்டிற்கு கண்கள் சிவக்க சிவக்க குடித்துக் கொண்டே இருந்தான்.
‘என்னடா இது? வீட்லயே பார் வச்சிருக்கானுங்க?’ என்று கொந்தளித்தவள் வேகமாய் அவர்கள் அறைக்குள் போனவள் ஜனாவைப் பிடித்து உலுக்கினாள்.
ஆழ்ந்த உறக்கம் ஜனாவிற்கு. கடினப்பட்டு கண்திறந்தவன்,
“என்ன மலர்? என்னாச்சு?” என்று பதட்டமாய் எழ,
“பிரசன்னா குடிச்சிட்டு இருக்கான்” என்றாள்.
“அவன் எப்பவாச்சும் குடிப்பான்தான், இதுக்காடி என்னை எழுப்புற?” என்று கடுப்பானவன் கண்களை மூட,
அவனைக் கிள்ளியவள்,
“என்னமோ படிப்பான்ற மாதிரி குடிப்பான்னு சாதாரணமா சொல்ற, ஒழுங்கா அவனை வந்து ஸ்டாப் பண்ணு” என்றாள்.
“ஹேய்! அவன் லிமிட் க்ராஸ் செய்ய மாட்டான் மலர். நீ அமைதியா படு” என்று அவளை தன்னருகே இழுக்க,
“அவன் நிறையா குடிக்கிறான், வாங்க ஜனா” என்று மலர் விடாமல் அழைக்க,
எழுந்தவன் “என்னடி பாசமலரா?” என்றான் கிண்டலாக.
“பாசமலர் இல்ல, சுதந்திர மலர்” என்ற மனைவியைக் கடுப்பாய்ப் பார்த்தாலும் மனத்தில் என்னவோ உறுத்தியது பிரசன்னாவை நினைத்து.
“இந்த நேரத்துல அவன் குடிக்க மாட்டானே? இப்போ ஏன் முழிச்சிருக்கான்” என்று சொல்லியபடி அவன் போக, அவன் பின்னால் வந்த மலருக்கு,
“நானும் தானே முழிச்சிருக்கேன், அதை யோசிக்கத் தெரியுதா பாரு இவனுக்கு” என்று பல்லைக் கடித்தாள்.
✅ End of Episode 27
Nice