Episode 33
பிரசன்னா “ஏன் மலர் அவ்வளவு அவசரமா வீட்டை விட்டு கிளம்பின? என்னாலயா?” என்று மலரிடம் கேட்க,
மலரோ “அது என் வீடு, எனக்கு எப்ப போகணும்னு தோணுதோ அப்போ போவேன் வருவேன் அண்ட் உங்களால நான் ஏன் கிளம்பனும்? குட் ஜோக்” என்றாள் நக்கலாக.
“நீ என்னாலதான் கிளம்பினேன்னு எங்க எல்லாருக்கும் தெரியும் மலர்” என்றான் பிரசன்னா அழுத்தமாய்.
“ஹலோ! உங்களை வச்சு என் லைஃப்ல எந்த முடிவும் நான் எடுத்ததே இல்லை. உங்களை நான் எப்பவும் கன்சீடர் பண்ணினதே இல்லை ” என்றாள் பட்டென்று.
சௌந்தர்யாவோ சண்டையாகிவிடுமோ என பயந்து அவர்களிடம் நகரப்பார்க்க, ஜனா அம்மாவின் அருகே நின்றவன் அவரின் கையைப் பற்றி,
“மா, அவங்களே பேசிக்கட்டும். சும்மா இருங்க” என்று அடக்கினான்.
மலரின் பார்வை பிரசன்னாவைக் கொதிநிலைக்குக் கொண்டு செல்ல,
“மலர்! ஃப்ரஸ்ட் இந்த ஆட்டிட்யூட் எங்கிட்ட காட்டாத” என்றான் கோபத்துடன்.
“ஐ சீ! பட் எனக்கு இந்த ஆட்டிட்யூட்தான் வரும், உங்களுக்குப் பிடிக்கலன்னா நீங்க பேசாதீங்க. ஓகே?” என்று பேச பிரசன்னா,
“டிஸ்கஸ்டிங்” என்றவன் கோபமாய் வெளியே செல்ல, மலரோ மாடியேறிவிட்டாள் மகளைக் காண.
வர்ணவி எந்த பக்கம் போகவென தெரியாது நிற்க, மகளைப் பார்த்த சௌந்தர்யா,
“வாசுவை ஜனா பார்த்துப்பான், மலர் அமிழ்தாவைப் பார்க்க போய்ட்டா, நீ என்னோட வந்து சமைக்கிற வழியைப் பாரு, சண்டைப் போட்டு எல்லாரும் கடைசியா சாப்பிடத் தான் வருவாங்க வரு” என்றார்.
“என்னம்மா இப்படியே சண்டைப் போட்டுட்டே இருப்பாங்களா?” என்று கவலையுடன் கேட்ட மகளிடம்,
“இப்படியே போட மாட்டாங்க, எப்படியும் கொஞ்சம் ப்ரேக் விட்டுப் போடுவாங்க” என்றார்.
“மா, இதுக்கு நம்ம என்ன செய்றது?”
“இப்போ என்ன செஞ்சோம்? வேடிக்கைத் தானே பார்த்தோம், அதையே செய்வோம்”
“கொஞ்சமாச்சும் சீரியஸா பேசும்மா”
“ஏன் டி இந்த வீட்ல எல்லாருமே சீரியஸாதானே பேசுறாங்க, எனக்கு அப்படி பேச வரலடி. கொஞ்ச நாள்ல அந்த அன்பு அண்ணன் தங்கை சண்டையும் நமக்குப் பழகி போய்டும், இப்ப வந்து இட்லிக்கு சட்னி செய் வா” என்று மகளை இழுத்துப் போனார் சௌந்தர்யா.
“மச்சான்” என்று ஜனா வந்து தோளைத் தோட உடனே வெடித்துவிட்டான் பிரசன்னா.
“என்னடா அப்படி தப்பா பேசினேன் நான்? எவ்வளவு பொறுமையா பேசுறேன் அவகிட்ட, என்ன லுக் அது? வேணும்னே என்னை இரிட்டேட் பண்றா” என்றான் இன்னும் மலர் மீது கோபமுள்ளவனாக.
“முன்னாடி அப்பா மேல தப்புன்னு நினைச்சிட்டு அவரைப் பிடிக்காம நடந்தேன், இப்போ அவரைப் புரிஞ்சிக்கிட்டேன் தானே? மன்னிக்கவெல்லாம் நான் சொல்லல, ஆனா அதுக்குன்னு இப்படி ஒரு பார்வை? பேச்சு?” என்று டென்ஷனாகப் பேச,
“நீயும் அவ கிட்ட இதே மாதிரி நடந்திருக்க வாசு?” என்றான் ஜனா பட்டென.
“டேய்! அப்போ எனக்கு அப்பா மேல தப்பில்லைன்னு தெரியாதேடா” என்றான் ஆயாசமாய்.
“அதேதான் நானும் சொல்றேன் மச்சான், இப்பவும் அவர் மேல தப்பில்லைன்னு தெரிஞ்சதாலதானே நீ மாறின, அப்படி தெரியவரலன்னா, தப்பே செய்யாம முரளி மாமாவை நீ தண்டிச்சிருப்ப” என்றவனுக்குப் பிரசன்னா பதில் சொல்ல வர,
“இரு நான் பேசிடுறேன்” என்று அவனை நிறுத்தியவன்,
“ஒரு அப்பாவா குழந்தையைப் பிரிஞ்ச வேதனை என்னன்னு என்னால உணர முடியும்டா, அரைமணி நேரமாகல அமிழ்தா இருக்கான்னு தெரிஞ்சு, என்னால தாங்கவே முடியாம வண்டியைக் கொண்டு போய் மோதினேன். அப்படியிருக்கப்போ தப்பே செய்யாம உன்னோட அப்பாவுக்கு நீ எவ்வளவு பெரிய தண்டனைக் கொடுத்திட்ட தெரியுமா?” என்றதும் பிரசன்னாவிற்கு குற்றவுணர்வு கூடியது.
“நீ மலரை நடத்தின விதம் எப்பவுமே தப்புதான். நீ அவளை தனிமனுஷியா பாருன்னு சொல்லிப் பார்த்தேன். என் மனைவியா பாருன்னு சொன்னேன். நீ பிடிவாதமா உன் அப்பாவோட பொண்ணாதானே பார்த்த?” என்று கேட்க ஊமையாக நின்றான்.
“யூ ஷூட் ரெஸ்பெக்ட் பீப்பிள் நோ மேட்டர் வாட்” என்றான் அழுத்தமாக.
“எனக்கு உன்னைப் புரியுதுடா மச்சான், ஆனா உன்னோட கோபம் முரளி மாமாவோட நின்னிருந்தா பரவாயில்லை, தாத்தா சொல்பேச்சுக் கேட்டு அவரை ஒதுக்கினன்னு விடலாம். பட் மலரை நீ நடத்தின விதம் எப்பவும் தப்பு” என்றதும் பிரசன்னாவின் முகம் வாடிப்போனது.
பிடித்தவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ரகம் பிரசன்னா. பிடித்தவரிடம் எந்தளவு உரிமையும் உறவும் வளர்க்கிறானோ பிடிக்கவில்லை என்றால் அந்தளவு வெறுப்புக் காட்டுவான். அது அவன் வளர்ப்பின் விளைவாய் இருக்க, அதன் விளைவுகள் இன்று அவனை வீரியமாய்த் தாக்கியது.
ஜனாவின் விஷயத்தில் மட்டுமே ஜனாவின் மீதான பிடித்தத்தை, பிரியத்தை மலரின் மீதான வெறுப்பு வென்றுவிட்டது. ஜனா அவனைத் தோளோடு சேர்த்தணைக்க,
“போடா போ அவளுக்கே நீ எப்பவும் சப்போர்ட் செய்ற” என்று பிரசன்னா விலகினான்.
“டேய்! அங்க போனா அவளும் இதையே சொல்லுவாடா? அவளைக் கூட பார்க்காம உங்கிட்ட பேச வந்திருக்கேன். என்னைப் பார்த்து என்ன சொல்றடா நீ?” என்றதும் பிரசன்னா இளகினான்.
ஒவ்வொரு முறையும் ஜனா பிரசன்னாவிற்குக் கிடைத்த வரம் என்று நிரூபித்தான். அதில் நெஞ்சம் நெகிழ்ந்தவன் இப்போது அவனாகவே ஜனாவை அணைத்தவன்,
“தேங்க்ஸ்டா, இப்போ இதுக்கும் உங்கிட்ட சண்டை போடுவாளா?” என்று பிரசன்னா ஜனாவிற்காகக் கேட்க,
ஜனாவோ, “மலர் இதுவரைக்கும் ஒருதடவை கூட உங்கூட பேசக் கூடாது, பழக கூடாது ஒன்னுமே சொன்னதில்லை. என்னை, என்னோட உறவுகளை உணர்வுகளை அவ எப்பவும் மதிப்பா. நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு அவளுக்கு நல்லாவே தெரியும். நீ அவ அண்ணான்னு தெரியறதுக்கு முன்னாடியும் அப்படிதான், இப்பவும் அப்படிதான் அவ” என்றான் பெருமிதமாக.
“நான் முன்னாடி நினைச்சிருக்கேன் என்னோட மனைவியா வர பொண்ணு வரு கூடவும் உங்கூடவும் ப்ரண்ட்லியா இருக்கணும்னு. இப்போ அந்த பேராசை எல்லாம் எனக்கில்ல, இனிமே இரண்டு பேரும் சண்டைப் போடாதீங்க, அவ்வளவுதான் சொல்வேன்” என்றவன் மாடியேறினான்.
அங்கு போனால் சுதந்திரா சூடாக தன் அம்மாவிடம் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தாள். சாரதா மகளுக்கு அழைத்து,
“ஏன் மலர் திரும்ப வீட்டுக்கு வராம போய்ட்ட?” என்று கேட்க,
“உங்களுக்குத்தான் என்னைப் பார்க்க நேரமில்லையே”
“இப்படி பேசாத மலர், அண்ணா இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கான். கிருஷ்ணா எவ்வளவு சந்தோஷப்பட்டா, நீ மட்டும் ஏன் இப்படி செய்றடா?” என்றார் வருத்தமாக.
“ஏன்னா எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்குதே, அது எப்படி எப்படி அவன் சாரி சொன்னதும் உடனே நீங்களும் அப்பாவும் ஒன்னுமில்லடா கண்ணான்னு சொல்றீங்க, அதே எங்கிட்ட மட்டும் அவர் சரியா பேச இத்தனை வருஷம் ஆச்சு” என்றாள் கோபமும் வருத்தமும் சரிவிகிதமாய்க் கலந்த குரலில்.
“அவன் தாயில்லா புள்ளடா, சின்ன வயசுல அவங்க தாத்தா பேச்சைக் கேட்டு நடந்துட்டான். அதுக்காக இப்போ கோவப்பட முடியுமா சொல்லு? அவனாலதானே அப்பா எனக்குக் கிடைச்சாங்க” என்று சாரதா பொறுமையாய்ப் பேச,
“அதான் சொல்றேன், உங்க செல்ல மகனை நீங்க கொஞ்சிக்கோங்க. எனக்கென்ன வந்துச்சு? என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றாள் பட்டென.
“நீ எங்களை மீறி போன வருத்தம் எங்களுக்கு இருக்கத்தானே செய்யும்?”
“உங்களை மீறி நான் போகலனா நானும் ஜனாவும் சேர்ந்திருக்கவே மாட்டோம். இப்போ நீங்க உங்க மகன் கூட சேர்ந்திட்டீங்க, அவனால என்னோட வாழ்க்கைதான் போயிருக்கும்” என்றாள் கோபமாக.
“உனக்கு சொன்னா புரியாது மலர், அமிழ்தாவை விட்டு இருந்து பார், அப்போ தெரியும் அப்பாவோட கஷ்டம்”
“நான் ஏன் என் பொண்ணை விட்டு இருக்கணும்? பெத்தவங்க மனசு பெட்ரோல்னு சொல்ல வரீங்களா? ஓகே ஓகே” என்றாள் நக்கலாக.
“என்ன சொல்ற நீ?” என்று புரியாமல் அந்த பக்கம் சாரதா கேட்க,
“பெத்தவங்க மனசு பெட்ரோல் மாதிரி ரொம்ப காஸ்ட்லி உயர்வானதுன்னு சொல்றேன், அதான் உங்க பையன் வந்ததும் பரந்த உள்ளத்தோடு அவனை அப்படியே ஏத்துக்கிட்டீங்க” என்றாள் நக்கலாக.
மகளின் பேச்சில் சிரித்தவர்,
“எங்கிட்டவே இவ்வளவு பேசுற நீ, அங்க எப்படி பிரசன்னா கிட்ட சண்டை போடாம இருக்க? சண்டை போடுறியா நீ?” என்றார் கண்டிப்புடன்.
“பேசிட்டாலும், இந்த சுக்கிரன் சூரியன் எல்லாம் ஃபுல் டைம் உங்க மகன் தலை மேல உட்கார்ந்து இருப்பாங்க போல, எங்க போனாலும் சாருக்கு ராஜமரியாதைதான்” என்றாள் சலிப்பாக.
“நீயும் எங்க செல்லப்பொண்ணு தான்டா, உன்னையும் நல்லாதானே பார்க்கிறாங்க” என்று சாரதா சமாதானம் செய்ய, மலர் அமைதியாகவே இருக்க,
“அண்ணா முன்னாடி கோபத்துல பேசியிருந்தா அதையெல்லாம் மறந்து மன்னிச்சிடுடா மலர். நீ அம்மா அப்பா கிட்ட வளர்ந்த பொண்ணுடா, புரிஞ்சிக்கோ” என்ற அம்மாவின் பேச்சில் அவருக்காகப் பதில் பேசாது இருந்தாள்.
தனக்குப் பிரசன்னா முக்கியமில்லாதவனாய் இருக்கலாம், ஆனால் தன் அப்பாவில் தொடங்கி கணவன் வரை அவன் எல்லாருக்கும் பிரியமானவன். அவர்களின் சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவள்
“சரிம்மா, ஜனா வந்துட்டார். நான் அப்புறம் பேசுறேன்” என்றாள்.
ஒருவார்த்தைப் பேசாது மனைவியைப் பார்த்திருந்தான் ஜனா. அவன் அமைதியாக இருக்க,
“என்ன அடுத்து நீங்க ஆரம்பிக்க போறீங்களா? எப்படி என்னோட ப்ரண்டை பேசலாம்னு?” என்று கேட்டாள் மலர்.
அவளின் கரம்பற்றி,
“நீ பேசினது தப்புன்னு நான் சொல்லவே இல்லையே மலர்” என்றதும் ஜனாவின் முகத்தை ஆராய்ந்தவள்,
“அவனைப் பேசினது உங்களுக்குக் கஷ்டமா இருக்கா?” என்ற மலரின் கேள்விக்கு அவள் முகம் பார்த்து மென்மையாய் சிரித்தான்.
“அவன் உன்னை ஹர்ட் பண்ணினாலும் நீ அவனை ஹர்ட் பண்ணினாலும் எனக்குக் கஷ்டமாதான் இருக்கும் மலர்” என்றான் ஜனா தன் மனதை மறையாது.
அவன் கையை இறுகப்பற்றியவள்,
“நான் ஒன்னு கேட்டா உண்மை சொல்லணும்” என்று ஆரம்பிக்க, அவன் தலையசைக்க
“பிரசன்னாவுக்கு எல்லாரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. உங்களுக்குக் கொஞ்சம் கூட சின்ன வயசுல அப்படி தோணவே இல்லையா ஜனா?”
“இல்லைவே இல்லை, என்னோட பிரசன்னா அவன். என் ப்ரண்டை எல்லாருக்கும் பிடிச்சா எனக்கு சந்தோஷம்தானே?” என்று கேட்ட கணவன் மீது காதல் கூடத்தான் செய்தது.
“நீ பார்க்கிற பிரசன்னா இல்லை அவன். ரொம்ப ஸ்மார்ட், ரொம்ப மெச்சூர்ட். ஸ்கூல்ல எல்லாம் அவனை அட்மையர் செய்யாதவங்களே இல்லை”
“அவனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்ல” என்று மலர் சொல்லவும்,
“பட் பிடிக்கலன்னா அவன் ரொம்ப பேசுவான். அவன் அப்பா இல்லாம அம்மா இல்லாம வளர்ந்த பையன், சின்ன வயசுல இருந்து அப்படி வளர்ந்துட்டான் என்ன செய்றது சொல்லு?” என்றான்.
“என்ன செய்றது அதையும் சொல்லுங்க” என்று மலர் கேட்க,
“ஒன்னும் செய்யவேண்டாம், இப்போ நீ பேசின அப்புறம் அவன் இனி பேச்சு வச்சுக்க மாட்டான்”
“சுதந்திர மலர்ன்னா சும்மாவா? கோட்டைத் தாண்டினா மவனே அவன் காலின்னு சொல்லி வைங்க” என்றாள் மலர் பெருமையாக.
********************************
இன்னும் ஐந்து நாள்தான் கிருஷ்ணபிரியாவின் திருமணத்திற்கு இருந்தது. அப்போதுதான் அலுவலகம் விட்டு வந்தாள் சுதந்திர மலர். அவள் வந்ததே தாமதம், இன்னும் ஜனாவைக் காணவில்லை.
கிச்சனில் சௌந்தர்யா சமையல் செய்வதை ரசித்துக் கொண்டிருந்தாள். வர்ணவியை அழைத்துக் கொண்டு பிரசன்னா அவன் அப்பா வீடு வரை சென்றிருக்க, குழந்தைகளும் அவர்களுடன்தான். அதுவும் அமிழ்தா இப்போது இன்னும் நன்றாகவே உறவுகளுக்குப் பழகிவிட்டாள்.
ஜனா வந்ததும்,
“ஏன் இவ்வளவு லேட்?” என்று மலர் கேட்க,
“இப்போதானே வந்தான் அவன், ஜனா போய் குளிச்சிட்டு வா. இவ்வளவு அழுக்கா இருக்க” என்றார் சௌந்தர்யா.
“ஊரப்பாக்கம் சைட் போனேன்மா, அங்க வேலை முடியல” என்றவனைப் பார்த்த மலர்,
“காலையில சீக்கிரமே போனீங்க தானே? உங்க ப்ரண்ட் என்ன செய்றார்? அவர்தானே சிவில் படிச்சார், ஆர்கிடெட்க்கு என்ன இவ்வளவு வேலை? இப்படி டயர்டா வரீங்க” என்று வேகவேகமாய்க் கேள்விகள் கேட்க,
“அவன் கிருஷ்ணா கல்யாண வேலையில பிஸியா இருக்கானே, நம்ம கம்பெனின்னு வரும்போது நம்ம டாப் டூ பாட்டம் எல்லா வேலையும் பார்க்கணும் மலர்” என்றான் ஜனா.
“தங்கச்சி கல்யாணம்னதும் பிரசன்னா தீயா வேலை செய்றான்” சௌந்தர்யாவும் பெருமையாய் சொல்ல,
“ஆமா தங்கச்சி கல்யாணம்னா ரொம்ப நல்லா வேலை செய்வார் உங்க மாப்பிள்ளை” என்றாள் கிண்டலாக.
“அதானே நானும் சொன்னேன்” என்று சௌந்தர்யா அப்பாவியாய் சொல்லவும்,
“மா, மேடம் கலாய்க்கிறாங்க” என்று அவளை தோளில் தட்ட பார்க்க,
“டேய் சைட்ல இருந்து வந்தவன் முதல்ல போய் குளிடா, அந்த தூசியோட” என்று சௌந்தர்யா திட்டினார்.
“ஓகேம்மா, நீங்க எனக்கு ஒரு காஃபி போடுங்க” என்றவனிடம்
“நீ முதல்ல சீக்கிரம் வாடா, உன் வீட்டம்மா உன்னை ரொம்ப நேரமா காணும்னு தேடுறாங்க” என்ற சௌந்தர்யா பேச்சுவாக்கில்,
“இப்படி இவனைத் தேடுற நீ எப்படி அமெரிக்காவுல இவனை விட்டு இருந்த” என்று கேட்டுவிட்டார்.
“இவரும் தானே என்னை விட்டு இருந்தார், அமெரிக்கா ஒன்னும் அவ்வளவு தூரமில்லையே அத்தை” என்றாள் மலர் மனதை மறையாமல்.
“மா, நல்லா செய்றம்மா நீ” என்று ஜனா முறைக்க,
என்னவோ ஆரம்பித்து எங்கோ பேச்சு வந்துவிட சௌந்தர்யா சங்கடமாய் உணர்ந்தவர்,
“பாவம் என் பையன், அவனுக்கு அமெரிக்க வரக்கூட காசு இல்லை, என்ன செய்ய” என்றார் விளையாட்டாக.
“ஓஹ், ஜனா அவ்வளவு பணக்கஷ்டமா என்ன உங்களுக்கு?” என்று மலரும் மாமியாருக்கு ஈடுகொடுத்துப் பேச,
சௌந்தர்யாவோ “பின்ன அவன் ஒரு ஏழைத்தாயின் மகன்மா” என்று இல்லாத கண்ணீரைத் துடைக்க, மலருக்கும் ஜனாவுக்கும் அடக்காமல் சிரிப்புவந்துவிட்டது.
✅ End of Episode 33
Very nice
மாமியார் மருமகள் பேச்சு மகிழ்ச்சி.....