Episode 1
“அமிழ்தா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே வெளியே வந்தாள் சுதந்திரமலர். அவளது அம்மா சாரதா,
“அவ காலையில அத்தை எழுந்தப்பவே எழுந்துட்டா, அத்தை பால் கொடுத்தாங்க குடிச்சா” என்றதும்
“சரிம்மா” என்றாள் மலர் புன்னகையுடன்.
“இப்படித்தான் எல்லாரும் அவங்க அவங்க பொண்ணைக் கண்ணும் கருத்துமா வளர்த்திருப்பாங்க” என்றார்.
குத்தல் பேச்சு! அம்மாவிற்கு இப்படியெல்லாம் பேச வரும் என்று சுதந்திராவுக்குத் தெரியவே தெரியாது. ஏன் அவரே பேசியதில்லை, அவரை பேச வைத்தவள் அவள்தான்.
அம்மாவின் பேச்சும் வலித்தாலும், காலையிலேயே தன்னை வர்ணவி வர சொல்லி இருக்கிறாள் என்பது நினைவில் வர, மனதெல்லாம் நிறைய குழப்பம், தயக்கம் இருந்தும் அதனை ஒதுக்கிக் கிளம்பத் தொடங்கினாள்.
சுதந்திரா நேற்றுதான் அமெரிக்காவில் இருந்து வந்தாள். அவள் காலையிலேயே தயாராகி வெளியே வருவதைப் பார்த்த சாரதா,
“என்ன மலர் காலையிலேயே எங்க கிளம்பிட்ட? நேத்து தானே வந்த” என்றார்.
“வருவோட பொண்ணுக்கு இன்னிக்குப் பர்த்டேம்மா. என்னை அவசியம் வரணும்னு சொன்னா” என்று பதில் சொன்னாள்.
“அவ அவசியம் வரணும்னு சொன்னாலும் நீ அவசியம் போகனுமா என்ன?” என்றார் கண்டிப்பான குரலில்.
“ம்மா! நான் கண்டிப்பா போகணும்” என்று தோழியின் மீதான ப்ரியத்தில் அவளது வார்த்தைகள் பிறக்க,
“அவளாலதான் நீ இப்படி இருக்க, அவளோட சகவாசம் தான் உன்னை இங்க நிறுத்தி இருக்கு. அவ புருஷன் குழந்தைனு குடும்பமா இருக்கா” என்று மகளின் வாழ்க்கை மீதான அக்கறையில் சாரதாவின் வார்த்தைகள் கொஞ்சம் வேகமாகவே வந்தன.
“ம்மா! ஒன்னு புரிஞ்சிக்கோ, என்னோட வாழ்க்கையில நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும்தான்!” என்று அழுத்தி சொன்னவள் கோபத்தில் குரல் உயர்த்தி,
“வர்ணவி இதுல எங்கேயுமே இல்லை. நான் என் வாழ்க்கையில செஞ்சது எல்லாமே தப்புன்னா கூட பரவாயில்லை, இனிமேலும் என் முடிவை நான்தான் எடுப்பேன். தப்பா இருந்தாலும் கூட!” என்றாள் அழுத்தமாக.
அவளின் பேச்சை சாரதாவால் ரசிக்கவே முடியவில்லை. அவளின் முடிவுகள் சரியானதாக இருக்கும் என்பதை விட எப்போதும் அவளுடையதாகவே இருக்கும்.
“அதானே எங்க பேச்சை நீ கேட்கறதை நிறுத்தி ரொம்ப வருஷம் ஆகிடுச்சுல” என்றவர் கிச்சனுக்குள் அடியெடுத்து வைத்தார். அங்கிருந்தபடியே,
“அதுக்காக இவ்வளவு சீக்கிரம் போகணும்னு இல்ல, முதல்ல சாப்பிட்டு போ, நான் டிபன் ரெடி பண்ணிட்டேன்” என்று தாய்க்கே உரிய குணம் அவரிடம் தலைத்தூக்கியது. அப்பத்தாவிடம்,
“நான் போய்ட்டு வரேன் ஆத்தா, அமிழ்தாவைப் பார்த்துக்கோ”என்றாள்.
“அதெல்லாம் நான் கவனிச்சுக்கிறேன், நீ அவசியம் போகனுமா?” என்று வடிவு பேத்திக்காகப் பார்த்தார்.
அவர் கையைத் தட்டிக்கொடுத்தவள்,
“அவளைப் பார்த்து இரண்டு வருஷம் மேல ஆகப்போகுது, நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன், அவ குழந்தையுடைய பொறந்த நாள் ஆத்தா எப்படி போகாம இருக்கறது சொல்லு” என்று அவரிடம் சொல்லவும் மறுக்கமுடியவிலை அவராலும்.
அவள் காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கணவர் முரளிதரனிடம், சாரதா போன் செய்து சுதந்திரா வர்ணவி வீட்டு விசேஷத்திற்குச் சென்ற விஷயத்தை சொன்னார். முரளிதரன் சில நொடிகள் அமைதியாக இருந்தவர்,
“அவ இஷ்டம் போல பண்ணட்டும் விடு சாரதா, அங்க போறதால எதுவும் ஆகப்போறதில்லை” என்றதோடு முடித்துவிட்டார்.
சுதந்திரா கேப் பிடித்து விழா நடக்கும் ஹோட்டலுக்குச் சென்றாள். மதியம் பதினொரு மணிக்கு மேல்தான் விழா ஆரம்பம், விருந்தினர்களுக்கு மதிய உணவு அங்கேதான். வர்ணவி சுதந்திராவை சீக்கிரம் வர சொல்லி இருந்தாள், சுதந்திரா அதனாலேயே சீக்கிரம் கிளம்ப, அவள் அங்கு சென்று சேரும்போது மணி பத்தாகிவிட்டது.
ஹோட்டலின் லாபியில் நின்று கொண்டு சுதந்திரா வர்ணவிக்கு அழைக்க, வர்ணவி எதுவும் பேசாமல் போனை உடனே கட் செய்து விட்டாள். சுதந்திரா மீண்டும் அழைக்கையில், வர்ணவி அவள் முன் இருந்தாள்.
சுதந்திராவைப் பார்த்த வர்ணவியின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் தான். எதுவும் பேசாமல் உடனே அவள் சுதந்திராவைக் கட்டிக் கொண்டாள். சுதந்திராவும் கட்டிக்கொண்டு,
“என்னடி கொஞ்சம் குண்டாகிட்ட போல” என்று பேச ஆரம்பிக்க,
“பக்கீ, எப்படி இருக்க? ஐ மிஸ்ட் யூ ஸோ மச்” என்று மலரின் கன்னத்தில் முத்தம் கொடுக்க,
“அடியே பப்ளிக்ல என்ன பண்ற நீ ?” என்றவள் தோழியின் தோள்களில் கையைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.
“பின்ன இத்தனை வருஷம் கழிச்சுப் பார்க்கிறேன், ஐ அம் ஸோ ஹாப்பி” என்ற வர்ணவியின் உணர்வுகளை சுதந்திராவால் உணர முடிந்தது.
“நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்டி, ஆனா இப்போ கிஸ் கொடுத்தா என் லிப்ஸ்டிக் போயிடுமே” என்று கண்ணடிக்க,
“போனா போகட்டுமே, ஆனா நிஜமா அழகா இருக்கடி நீ!” என்று மீண்டும் முத்தமிட்டாள்.
“அட, உன்னை விட நான் அழகா? உன் கண்ணுக்கு நான் எப்படி இருந்தாலும் அழகாதான்டி தெரிவேன், ஆனா என்னதிது தொப்பை?” என்று அவள் வயிற்றில் லேசாகக் குத்திக் கேட்க
“உனக்கு என்ன எரும? நானோ மம்மியாகிட்டேன், உன்னை மாதிரி சிங்கிளா இருந்தா பரவாயில்லை” என்றவளின் பேச்சில் சுதந்திராவிடம் ஒரு முகமாறுதல். அவளைக் காயப்படுத்திவிட்டோமோ என்று வருந்தியவள், அதை ஒதுக்கிவிட்டு,
“முதல்ல வா, என் பொண்ணு கிட்ட உன்னைக் காட்டனும், அவளை ரெடி பண்ணியிருக்கேன், ஓகேவா பாரு” என்றவள் மலரை மறுவார்த்தைப் பேசவிடாமல் வேகமாக லிஃப்டினுள் இழுத்துப் போனாள்.
“நான் எதுக்குடி?” என்றவளின் பேச்சைக் காதிலே வாங்கவில்லை.
அந்த ஹோட்டலில் அவர்களுக்கென்று இரு அறைகள் ஒதுக்கப்பட்டிருக்க, குழந்தையுடன் வர்ணவியின் அம்மா சௌந்தர்யா இருந்தார். அவர் நிச்சயமாக சுதந்திராவின் வருகையை எதிர்ப்பார்க்கவில்லை.
சுதந்திராவுக்கு ஏது கட்டுப்பாடு? அவளுக்கு அவரை எப்போதும் பிடிக்கும். அதனால்,
“எப்படி இருக்கீங்க ஆன்டி?” என்று அவர் நலன் கேட்கவும், அவள் அப்படி சகஜமாகப் பேசுவாள் என எதிர்ப்பார்க்காதவர், சில நொடிகளில் சுதாரித்து,
“நல்லா இருக்கேன் மலர், நீ எப்படி இருக்க?” என்று கேட்டார்.
“நல்லாயிருக்கேன்” என்று அவள் சொல்ல, மகளைப் பார்த்தவர்,
“நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் பக்கத்து ரூம் போறேன்” என்று சௌந்தர்யா போய்விட, தன் குழந்தை சாத்விகாவிடம் திரும்பிய வர்ணவி,
“பேபி இது யார் தெரியுமா?” என்று சுதந்திராவைக் காட்டிக் கேட்க,
“ப்ளவர் அத்த! அம்மாவோட ப்ரண்ட்” என்று சரியாக சொல்லிவிட்டு மெத்தையில் குதித்தாள் சாத்வீ.
“வாவ்! ஸோ ஸ்வீட் பேபி நீ” என்று சுதந்திரா குழந்தையினைக் கொஞ்ச, அவளது லிப்ஸ்டிக் அப்படியே குழந்தையின் கன்னத்தில் ஒட்டிக்கொள்ள,
“எனக்குக் கிஸ் பண்ணினா லிப்ஸ்டிக் ஒட்டிக்கும் சொன்ன நீ இப்போ இவளைப் பார்த்ததும் என்ன மேடம் பண்ற?” என்று கேட்க
“என் செல்லத்தை இவ்வளவு நாள் கழிச்சுப் பார்க்கிறேன், என் பேபி என்னைக் கரெக்டா கண்டுபிடிச்சிட்டா” என்று சொல்லி மீண்டும் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
பின்,
“ஒரு டிஷ்யு கொடு வரு, பாப்பா கன்னமெல்லாம் லிப்ஸ்டிக் “ என்று சொல்லி, வர்ணவி கொடுத்த டிஷ்யுவை வைத்து குழந்தையின் கன்னங்களைத் துடைத்து விட்டாள்.
“எப்படிடி இவ கரெக்டா சொல்றா?” என்று ஆச்சர்யத்துடன் வர்ணவியிடம் சுதந்திரா கேட்க
“நான் அடிக்கடி நம்ம இரண்டு பேர் இருக்க போட்டோ காட்டி சொல்வேன், அவளும் ஸ்கூல் போறா தானே? அவளுக்குப் ப்ரண்ட் இருக்க மாதிரி எனக்கும் நீ ப்ரண்ட்னு உன்னைப் பத்தி சொல்லிட்டே இருப்பேன்” என்றதும், சுதந்திராவிற்கு உள்ளுக்குள் என்னவோ உடைவது போல் இருந்தது.
“நீ ப்ரண்டா கிடைக்க நான் ரொம்ப லக்கி” என்று சொல்ல, அதைக் கேட்ட வர்ணவி சிரித்து விட்டாள்.
“ஹாஹா, இப்படி சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. உண்மையில நீ யாருக்கு ப்ரண்டா இருக்கியோ அவங்கதான் லக்கி” என்றவள்,
“இந்த லிப்ஸ்டிக் போட்டுக்கோ, எல்லா ஷேடும் இருக்கு, உனக்கு எது வேணுமோ போடு” என்று சொல்லிக் கொடுத்தாள். அவளுடன் குழந்தையை வைத்து செல்பேசியில் சில படங்கள் எடுத்துக்கொண்டாள் சுதந்திரமலர்.
அதற்குள் சௌந்தர்யா வந்து மகளை அழைத்தார். இங்கிதம் கருதி,
“வரு, நான் ஹாலுக்குப் போறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவள் பிறந்தநாள் நடக்கும் ஹாலுக்கு வந்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.
சுற்றி வந்த அவள் பார்வையில் வாசு விழ, ஒரு அலட்சியப்பார்வையுடன் அவனைப் பார்த்தவள் பின் அந்த திசையில் திரும்பவே இல்லை. வாசுவுக்கோ ‘இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்?’ என்ற கேள்வி எழ, அவன் மனமே அதற்கும் பதில் சொன்னது.
‘நம்ம வீட்டு குட்டிப்பிசாசு தான் இவளைக் கூப்பிட்டிருக்கும்’ என்று சரியாக கணித்தவன் , அவளை போனில் அழைத்து,
“உன் ப்ரண்ட் எதுக்குடி இங்க வந்திருக்கா? நீ ஏன் அவளைக் கூப்பிட்ட?” என்று கேட்க
“ஏன்னா அவ என் ப்ரண்ட்” என்றாள் அழுத்தமாக.
“முடிஞ்ச எதையும் திரும்ப ஆரம்பிக்காதடி” என்று கட்டளையாக சொன்னவனிடம்,
“எதுவுமே முடியல, அவ பக்கம் போய் அவளை சீண்டி விடாத மாமா சொல்லிட்டேன்” என்று அவனைப் போலவே கட்டளையிட்டவள்
“முதல்ல நீ இங்க ரூமுக்கு வா, பாப்பாவை அழைச்சிட்டு நம்ம இரண்டு பேரும் ஹாலுக்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டு அவள் வைத்துவிட, வாசுவும் மனைவியைத் தேடி போனான்.
‘அப்பாடா போய்விட்டான்’ என்று நினைத்துக் கொண்டு, மலர் வாசலைப் பார்க்க, அந்த அறையில் இரண்டு வாயில் இருக்க மற்றொரு வாயிலில் இருந்து உள்ளே நுழைந்தான் ஜனார்த்தனன். அவள் அகத்தே காதலை ஜனித்தவன் ஜனார்த்தனன்.
அவனைப் பார்த்த கணம், அவள் அகம் அசைந்தது என்னவோ உண்மை. அதுவும் அவனின் தோற்றம் , தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவள்தான் அவள், ஆனாலும் என்னவோ ஜனாவிடம் குறைவது போல் கண்டாள்.
அதனையே அவள் மனம் யோசிக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தையுடன் வாசுவும் வர்ணவியும் வர, மேடையில் அவர்கள் குடும்பம் மொத்தமும் இருந்தனர். வர்ணவியின் தாத்தா ஜெயப்பிரகாஷ், அவர் மனைவி ரங்கநாயகி, அவள் அப்பா ஜகன், அம்மா சௌந்தர்யா, வாசு, அவனின் நண்பனும் வர்ணவியின் சகோதரனுமான ஜனார்த்தன் என்று எல்லாரும் கூடி இருந்தனர்.
இன்னும் கூட்டம் கூடவில்லை. மேடையில் அம்மாவும் மகனும் ஏதோ வாக்குவாதம் செய்தனர். ஜனா வேகமாக வெளியே போனான். குழந்தையை வாசு கொஞ்சிக் கொண்டிருக்க, வர்ணவி மேடையில் இருந்து கீழே இறங்கி மலரிடம் வந்தாள்.
சுதந்திராவோ ,“ஏன் கீழ வர? என்னாச்சு?” என்று கேட்க
“குழந்தைகளுக்குக் கொடுக்க கிஃப்ட்ஸ் வச்சிருந்தேன், அதை கீழே எடுத்துட்டு வர மறந்துட்டேன். வா மேல ரூம் போய் எடுத்துட்டு வந்துடுவோம்” என்று கூப்பிட, சுதந்திராவுக்கு நன்றாகவே தெரிந்தது, வர்ணவி தன்னிடம் தனியே பேச நினைக்கிறாள் என்று. இந்த வேலைக்கெல்லாம் அவள் வீட்டில் ஆட்கள் உண்டு, அப்படி இல்லையென்றாலும் கூட அவளை எதுவும் செய்ய விட மாட்டான் அவளது கணவன்.
இருந்தும் சுதந்திரா உடன் போக, வர்ணவி வாயே திறக்கவில்லை. சுதந்திராவின் மனம் கேட்கவில்லை. அவளுக்கு வர்ணவியிடம் பேச தயக்கமில்லை என்பது ஒன்று, இத்தனை வருடம் கழித்துப் பார்த்ததில் ஒரு பழைய உற்சாகம் தொற்றியிருக்க, மனத்தில் உள்ளதை வெளியே கேட்டுவிட்டாள்.
“ஏன் உன் அண்ணா பரதேசியாட்டம் இருக்கான்? உன் புருஷன் மட்டும் நல்லா ஜம்முன்னு இருக்கான், அந்த தாடியும் அவனும். எத்தனை நாள் ஷேவ் பண்ணாம வளர்க்கிறான்?” என்று திட்ட,
“என் புருஷனுக்கு அவன் பொண்டாட்டி நான் கூடவே இருக்கேன், எங்க அண்ணா ஆளு அவன் கூட இல்லையே, அதான் அவன் இப்படி இருக்கான்” என்றதும்,
“ஓஹ்! ஆளு இல்லன்னு அவனே ஊருக்கெல்லாம் காமிச்சுக் கொடுக்கிறானா? நல்லா வந்துடும் எனக்கு” என்றாள் சுதந்திரா.
“ஹே! என்னை ஏன்டி திட்டுற? அவன் அப்படி இருக்கிறதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? எல்லாமே அவன் இஷ்டம் தானே? முன்னாடியே பரவாயில்லன்ற அளவு மோசம் பண்றான்” என்று புலம்பியவள்,
“உனக்கு என் அண்ணா நல்லா இல்லைன்னு கவலையா? இல்லை என் புருஷன் அழகா இருக்கான்னு பொறாமையா?” என்று நக்கலாகப் பேச,
“எவன் எப்படி இருந்தா எனக்கென்ன? ஜஸ்ட் தோணிச்சுக் கேட்டேன். யாருக்கிட்டையும் போய் உளறி வைக்காத என்ன?” என்று சொல்லியவள் வர்ணவிக்கு உதவி செய்தாள்.
வர்ணவி,
“ஓகே பேபி! பக்கத்து ரூம்ல சில பேக்ஸ் இருக்கு, அதைப் போய் நான் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி போக, அவளது அண்ணன் அப்போதுதான் அந்த அறையை விட்டு வெளியேறினான். இப்போது ஷேவ் செய்திருந்தான். உடை மாற்றி ப்ரஷாக இருந்தான்.
மகன் சைட்டிலிருந்து அப்படியே வரவும் சௌந்தர்யா அவனிடம் சண்டை போட, அதன் பிறகே மேலே வந்து அவன் அம்மா வைத்திருந்த உடையை அணிந்துகொண்டான்.
“இப்ப தான் டா பார்க்கிற மாதிரி இருக்க” என்று சொல்லிவிட்டு பைகளை எடுக்க, வர்ணவியிடம் பதிலே பேசாமல் ஜனா அந்த அறையை விட்டு வந்தவன், சுதந்திரா இருந்து அறைக்குள் நுழைந்து கொண்டான். அறைக்கதவைத் தாழ்ப்பாள் போட்ட சத்தம் கேட்டு சுதந்திரா திரும்பியவள் ஒரு கணம் அதிர்ந்து பின் அலட்சியத்துடன் பரிசுப் பொருட்களை எடுத்து வைக்க,
அது ஜனாவை ரொம்பவே கோபம் கொள்ள செய்தது. அதனையும் விட சுதந்திர மலரின் உடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து ஒரு அழகான சில்க் காட்டன் புடவைக் கட்டியிருந்தாள். அது அவனை ஈர்த்தது. அதை விட அவளின் அணிமணிகள் எல்லாம் அவனை எள்ளி நகையாடுவது போல் இருந்தன, அவனின் பிரிவு அவளைக் கொஞ்சமும் பாதிக்கவில்லையே?
‘அம்மா சொல்ற மாதிரி நான்தான் பரதேசியா இருக்கேன், அதான் அவளே சொல்றாளே’ என்று நினைத்துக் கொண்டான் ஜனா.
அவள் வந்த போது அவன் பார்க்கவே இல்லை, பக்கத்து அறையில் இருக்கும்போது அவளும் தங்கையும் பேசியது கேட்கவும்தான் அவள் இந்தியா வந்திருப்பதே அவனுக்குத் தெரிந்தது. உள்ளுக்குள் உண்மையில் சந்தோஷம்.
அவள் மட்டும் அப்படி ஒரு முடிவு எடுக்காமல் இருந்திருந்தால் இருவரின் வாழ்க்கையும் இப்படி இருதுருவமாகப் போயிருக்காது. அந்த கோபம் அளவுக்கு மீறி இருந்தாலும், இப்போது பார்க்க பார்க்க உள்ளுக்குள் மையலும் காதலும் மாறி மாறி மையம் கொண்டன.
அதுவும் தான் அவளைப் பாதிக்காதது போல் காட்டிக்கொண்டது, அவனை சீண்டியிருக்க,
“அப்புறம் மேடம், எல்லாரும் உங்களை மாதிரி இருப்பாங்களா? யார் இருந்தா என்ன? இல்லைன்னா எனக்கென்னனு?” என்று அவன் கேட்டவுடன் அவளுக்குத் தன் வாயிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. ஆனாலும் அடங்கவில்லை.
“ஆமா, யார் இருந்தா எனக்கென்ன? இல்லைன்னா எனக்கென்ன?” என்று பதில் பேசி விட்டு அறைக்கதவைத் திறக்கப்போக, அவள் கையைப் பிடித்துத் தடுத்தவன்,
“என்னைப் பார்த்ததும் உனக்குத் தோணினதை நீ சொல்லிட்ட, எனக்குத் தோணினதை நான் சொல்ல வேண்டாமா?” என்று கேட்டான்.
“நீங்க எதுவும் எங்கிட்ட சொல்ல வேண்டாம்” என்றவளின் கைகள் மீண்டும் கதவுப் பக்கம் போக, அவளை விடாமல் அழுத்தி அணைத்துப் பிடித்தவன், சுவரில் சாய்த்து,
“ஓகே! ஆக்ஷன் ஸ்பீக்ஸ், உன்னை இப்படி பார்க்கறப்ப ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங்” என்றவன் அதை செயலிலும் காட்டினான். சுதந்திரா அவனை தள்ள முயல, மேலும் மேலும் அவன் அவளுள் புதைந்தான். இழந்த காலத்தை, காதலை ஒற்றை முத்தத்தில் மீட்டு விட முயன்றான் ஜனா.
அந்த நேரம் ஜனாவின் மனத்தில் கசப்புகள் வெறுப்புகள் கடந்த கால மிச்சங்கள் என்று ஒன்றுமில்லை. அவள், அவன், காதல் மட்டுமே! காதல் மட்டும்தான்!
Hello friends,
Hope you read the episode 1 of Nalamudan kadhal (written in 2019)
Share your thoughts.
✅ End of Episode 1
Nice start. முன்பே படித்த கதை மாதிரி இருக்கே னு நினைத்தேன்.
Yes ma, re run dhane.
Ok ma.
Re run panndhuku nandrigal dear ❤️
நான் படித்த பவியின் முதல் கதை💖💖💖
நம் அன்பு தொடங்கிய இடமா சேச்சி 😌🥰
புரியாமல் இருவரும்