அடுத்த நாள் ரசிகாவும் வைஷாலியும் நடந்து வருகையில், அவர்கள் பள்ளியை விட்டு நாலைந்து தெருக்கள் தள்ளி ஒரு நேர் சாலையில் இவர்கள் வர, பிரிந்து இருந்த தெரு ஒன்றின் மூலையில் மரத்தடியில் அவர்களின் பக்கத்து வகுப்பு மாணவி கரிஷ்மா இருக்க, அவளின் காதலன் அஜய் அவளின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
“ஏய்! அது அஜய் அண்ணா இல்ல” என்று ரசிகா விரிந்த விழிகளுடன் சொல்ல,
“ஆமா டி, பார்த்தியா? அவங்களும் உன் சர்வாவும் ஒரே ஏஜ்தான். பாரு இரண்டு பேரும் எப்படி லவ் பண்றாங்கன்னு” என்று காவியக் காதலர்களைக் கண்டது போல வைஷாலி பெருமையாய் சொன்னாள்.
“எங்கடி லவ் பண்றாங்க, கிஸ்ல பண்றாங்க” இன்னமும் அதிர்ச்சி விலகாமல் ரசிகா உரைத்தாள்.
“லூசு லவ் பண்றவங்கதான் கிஸ் பண்ணுவாங்க” வைஷாலி அறிவாய்ப் பதிலளிக்க,
“தப்பில்லையா?” என்று ரசிகா தயக்கமாய்க் கேட்டாள்.
“லவ் பண்றவங்க கிஸ் பண்ணினா என்ன தப்பு? நான் கூட தீபக் பர்த்டேவுக்கு தீபக்கை கிஸ் பண்ணினேன்” வெட்கமாய் சொன்னாள் வைஷாலி.
“நிஜமாவா?” என்று இரண்டு முறை அழுத்திக் கேட்ட ரசிகாவைப் பார்த்த வைஷாலி,
“என்னடி நீ? நிஜமாவான்னு கேட்கிற…தீபக் என் லவ்வர்தானே? அவனை கிஸ் பண்ணினா என்ன தப்பு? அப்புறம் எப்படி நான் எவ்வளவு லவ் பண்றேன்னு தெரியும் சொல்லு. நீ படத்தில பார்த்ததில்லை ஹீரோ ஹீரோயின்லாம் கிஸ் பண்றதை” என்று இது கூடத் தெரியாமல் இருக்கிறாயே என்ற பாவப் பார்வையை வைஷாலி தர,
“பார்த்திருக்கேன் வைஷு, அப்போ கிஸ் பண்ணினா நம்ம எவ்வளவு லவ் பண்றோம்னு தெரியுமா?” என்று ரசிகா ஆலோசனைக் கேட்டாள்.
ஆம், ஆலோசனையே! இதையெல்லாம் காதலில் திளைக்கும் தோழிகளிடம் கேட்காது வேறு யாரிடம் கேட்பாள் அவள்? அவர்களோ இளமையின் தாக்கத்திலும் வாலிபத்தின் வாசலிலும் நின்று கண்டதே காதல், கொண்டதே கோலம் என்றும் காதலில்லாமல் இருந்தால் தவறு என்பதை போலவுமே பேசிவிட தவறான வழியைத் தவறென உணராமல் அதன்வழி நடந்தாள் ரசிகா.
“நீ மட்டும் உன் சர்வாவை கிஸ் பண்ணி, நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன் சர்வான்னு சொல்லு. அப்புறம் பாரு” என்ற வைஷாலியை நம்பிக்கையின்றி பார்த்த ரசிகா,
“சர்வாவுக்குப் பிடிக்கலன்னா”
“லூசு பாய்ஸ்க்கு அவங்களா லவ் சொல்றதை விட, அவங்க கிட்ட லவ் சொல்ற பொண்ணுங்களைத் தான் பிடிக்கும்னு தீபக் சொல்லியிருக்கான், கிஸ் கொடுத்து ப்ரோபோஸ் பண்ணி எவனாவது ஓகே சொல்லாம இருப்பானா?” என்று வைஷாலி கேட்டிருந்த கேள்வி ரசிகாவினுள் பெரும் தாக்கம் செய்திருக்க, அடுத்த நாள் இதனை மற்ற தோழிகளிடமும் பேசினாள்.
அவர்களோ, “வைஷு சொல்றதுதான் சரி, இப்போ நீ லவ் சொல்லாம இருந்தா அப்புறம் சர்வா வேற யாராச்சும் லவ் பண்ணினா என்ன செய்வ?” என்று கேட்டனர்.
ரசிகாவோ, “இப்ப என்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டு அந்த ப்ரதீக்ஷாவோட ஆள் மாதிரி லண்டன் போய் மாறிட்டா என்ன செய்றது?” என்றாள்.
“ப்ரதிக்ஷா வீட்ல ரொம்ப ஸ்டீரிக்ட், அவ ஆள் காலேஜ் போன பின்னாடி இரண்டு பேரும் ரொம்ப பேசவே இல்லை, அதனால அவர் கடுப்பாகிட்டார். உனக்கு அப்படியா? உங்க ஃபேமிலி ப்ரண்ட், உமா அத்தை வீட்டுக்குப் போறப்ப எல்லாம் அவர் கூட பேசலாமே?” என்று வினிதா சொல்ல,
சாந்தினியோ,
“அந்த சுரேந்தர் மாதிரி உன் சர்வா மோசமா என்ன?” என்று கேட்டுவிட,
“ஏய் சர்வா ரொம்ப ரொம்ப நல்லவர், மத்தவங்க கூட எல்லாம் கம்பேர் செய்யாத” என்றாள் அந்த பதினாறு வயது பாவை.
சர்வா வெளிநாடு செல்ல இன்னும் ஒரு வாரமே இருந்த நிலை எப்போது அவனிடம் காதல் சொல்லுவோம் என்று ரசிகா காத்திருந்தாள். அவளைப் பொருத்தவரையில் அம்மா இல்லாத அவளுக்கு சர்வாவைக் காதலிக்கிறேன் என்ற நினைப்பே ஒரு பிடிப்பினை வழங்கியது. ஆறு மாதம் அகத்தில் சர்வாவின் மீது காதல் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டே போனாள்.
ரகசியமாய் சந்தோஷம் கொண்டு ரசிக்கும் அந்த மன நிலையை அவளின் வயதும் வாலிபமும் செய்தது. கூடவே ஹார்மோன்களின் ஆட்டமும், டோபமைனின் சுரப்பு அதிகமாக காதல் உணர்வு என்பது அந்த சிறு பெண்ணுக்குப் பிடித்ததாகிப் போனது.
அதே நேரம் சர்வாவைப் பிரிந்து எப்படி இருப்பது என்ற கவலை வேறு, அப்போது பார்த்து சக்தியின் ஊரில் திருவிழா நடக்க, உமா ரசிகாவையும் அழைத்திருந்தார். சுகுமாறனுக்கு விடுமுறை எடுக்க முடியாத காரணத்தால் புஷ்பாவும் வராது இருக்க, பத்ரிக்கோ கல்லூரி இருந்தது.
லண்டன் செல்லும் முன் குலதெய்வத்தை தரிசனம் செய்யலாம் என்று சர்வா நினைத்து அவனும் உமாவோடு சென்றான். சக்திவேலனுக்குக் கல்லூரி நிர்வாகியாகவும் முதல்வராகவும் வேலைகள் அதிகமிருக்க, இரண்டு நாள்தானே என்று மகளும் பிரியப்பட்ட சிவா இவர்களுடன் சென்றார்.
திருவிழா முடிந்த அன்று சிவசங்கரன் அவருக்கென கொடுக்கப்பட்ட அறையில் உறங்கிக் கொண்டிருக்க, உமாவுடன் தங்கியிருந்தாள் ரசிகா.
ரசிகாவும் சர்வாவும் உட்கார்ந்து மேட்ச் பார்த்துக் கொண்டிருக்க,
“அப்பு, சீக்கிரம் தூங்கிடணும்” என்று சொல்லியே சென்றிருந்தார் சிவசங்கரன்.
“ப்பா, மேட்ச் முடிஞ்சதும் தூங்கிடுவேன். ப்ராமிஸ்” என்றாள்.
“மேட்ச் முடிஞ்சதுமே இவளைத் துரத்தி விடுறேன் மாமா. நீங்க போங்க” என்றான் சர்வா.
“சரி சர்வா” என்று அவரும் உறங்கப் போயிருக்க, இன்னும் ஐந்து நாள் அதன்பின் சர்வா யுகே போய்விடுவான். அவனை நேரில் பார்க்க இன்னும் மூன்று வருடம் ஆகும். இதுவே ரசிகாவின் மனதில் ஓடியது. மேட்ச் முடியவும்,
“ரசி! மேட்ச் ஓவர். போய் பெரியம்மா கூட தூங்கு” என்று சர்வா அவளைத் துரத்த, அந்த வீட்டு முற்றத்து தூண் அருகே நின்றவள் அங்கேயே தேங்கிட,
“என்ன ரசி, தூங்க போ” என்றான் சர்வா டீவியை நிறுத்திவிட்டு.
“இந்த நிலா அழகா இருக்குல, அங்க நம்ம சென்னையில வீட்டுக்குள்ள நிலா பார்க்க முடியாதுல” என்றபடி முற்றத்தில் இருந்து தெரிந்த நிலாவைக் கண்டு பேசினாள் ரசிகா. அவளுக்கு எப்படியாவது சர்வா இங்கிலாந்து செல்லும் முன் தன் காதலை சொல்ல வேண்டுமே என்ற வேகம்! அதனால் வாய்க்கு வந்தததைப் பேச,
“நிலா அழகாதான் இருக்கு, நீயும் உங்க வீட்டு வாசல்ல நின்னு பார்த்தா நிலா தெரியும். நாளைக்கு ஊருக்குப் போகணும், சீக்கிரம் போய் தூங்கு ரசி” பொறுமையாகவே பதில் சொன்னான் சர்வா.
“சர்வா என்னை மிஸ் பண்ணுவியா யுகே போனா?” என்ற ரசிகாவின் கேள்விக்கு,
“என்ன இந்த கேள்வி தீடீர்னு?” என்று கேட்டாலும்,
“கண்டிப்பா மிஸ் பண்ணுவேன் ரசி” என்ற சர்வா அவள் அருகே நின்று,
“உனக்கு என்ன வேணுமோ சொல்லு, நான் அங்கிருந்து அனுப்பி வைக்கிறேன். நல்லா படிக்கணும் ஒகே” என்றவனின் அக்கறைப் பேச்சில் அவள் விழிகள் கசிந்தன.
“ஐ மிஸ் யூ” என்றவள் அழுகையுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவளை மெல்லத் தன்னை விட்டுப் பிரித்தவன்,
“ரசி! இதுக்குப் போய் அழுவியா? நீயும் நல்லா படிச்சு அங்க ஹையர் ஸ்டடிஸ் படிக்கலாம். இங்க உன்னைப் பார்க்க பெரியம்மா இருக்காங்க, பெரியப்பா மாமான்னு எல்லாரும் இருக்காங்க. நான் அங்க தனியா இருக்கப் போறேன், நானே அழல. நீ ஏன் டி அழற” என்று அவள் தலையில் செல்லமாய்க் கொட்டினான்.
முற்றத்து தூணில் ரசிகா சாய்ந்திருந்தவள் அவனின் கையைப் பிடித்துக் கொண்டு,
“உனக்கு என்னைப் பிடிக்குமா சர்வா? என்னை மறந்திட மாட்டியே” என்றாள் கவலையுடன்.
“என்னாச்சு ரசி உனக்கு? அதெல்லாம் எப்படி மறப்பேன்?” என்று எதிர்க்கேள்வி கேட்டான். அவனுக்குக் கொஞ்சமும் ரசிகா காதல் என நினைத்துப் பழகுகிறாள், கேள்வி கேட்கிறாள் என்று தெரியவில்லை. அதனையும்விட அவனைப் பொருத்தவரை ரசிகா ஒரு அழகிய பாவை. அவளின் பெரியம்மாவிற்கு செல்லம், அதனால் அவனுக்கும் அவளைப் பிடிக்கும்.
அந்த ‘பிடித்தம்’ பெயரிடப்படாது இருக்க இவள் காதல் என கண்டபடி யோசித்து இருக்கிறாள் என கனவிலும் நினைக்கவில்லை சர்வஜனன்.
“நான் ஒன்னு சொல்லணும்” என்றவள் அவனை குனிய சொல்ல,
“சீக்ரெட்டா?” என்று சிரித்தபடி அவன் குனிய, அவனின் கைகள் ரசிகா நின்றிருந்த தூணிற்குப் பின்னால் விழாமல் இருக்கப் பிடித்துக் கொண்டன, பின்னால் இருந்து பார்த்தால் அவன் ரசிகாவை அணைத்திருப்பதாய் ஒரு தோற்றம்.
அவன் எதிர்ப்பார்க்க வண்ணம் அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன் காதல் சொன்னாள் ரசிகா.
அந்த நிலா முற்றத்தில் ஒரு முத்தம்!!
“சர்வா!!!!” என்ற கர்ஜனைக் குரலில் தனது அதிர்ச்சியில் இருந்து மீண்டான் சர்வா.
Read and Share your thought friends.
Nice
வைஷீ நல்லா வைச்சு ஆப்பு....
சர்வாவை தப்பா நினைத்துட்டாங்களா அட பாவமே