‘செவ்வானம் வெட்கம் கொண்டது
யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது
யாராலே?’
இசையின் துணையோடு காலை சமையலில் ஈடுபட்டிருந்தாள் ரசிகா. அவளின் அம்மாவின் பழக்கமது, எப்போதும் வீட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கும், அம்மாவிற்குப் பிடித்த ஒன்றை செய்கையில் அவருடன் இருப்பது போலவே ஒரு உணர்வு.
அவள் ரசிக்கும் இசையில் ஸ்ரீனிவாசின் குரல் அவள் செவி தீண்டுவது போல், அம்மாவையும் தீண்டும் என்று நினைத்துக்கொள்வாள்.
ஒரு பக்கம் இட்லி வேக இன்னொரு பக்கம் சாம்பார் வைக்க ஏற்பாடு செய்திருந்தாள். இடையே எப்போது எந்த மசாலா சேர்க்க வேண்டுமென சந்தேகம் வந்துவிட்டது.
உடனே அவளது ஆபத்பாந்தவி அபய ரட்ஷகி உமாவிற்குப் போன் செய்தாள்.
“அத்தை, ஹாப்பி மார்னிங்” என்றாள் அவர் எடுத்தவுடனே.
“ஹாப்பி மார்னிங் அப்புக்குட்டி, என்ன காலையில என்னைத் தேடுற?” என்று அவர் விஷயத்திற்கு வர,
“அத்தை சாம்பார்ல சாம்பார் பொடி எப்போ போடணும்?” என்றாள் டென்ஷனாக.
“சமைக்கிறதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? போன வாரம்தானே சொல்லிக் கொடுத்தேன்”
“அய்யோ அத்தை மறந்து போச்சு, சீக்கிரம் சொல்லுங்க, செஞ்சிட்டு நான் ரெடியாகி காலேஜ் போக வேண்டாமா?” என்றவளின் குரலில் அவசரமே நிரம்பி வழிய செய்முறையை எல்லாம் சொன்ன உமா,
“இதுக்குத்தான் சமையலுக்கு ஆள் வைங்கன்னா எங்க கேட்கிறார் உங்கப்பா” என்றார் வருத்தமாக.
“முடிஞ்சா மாமா கிட்ட சொல்லி ரெகமெண்டேஷன் செய்ய சொல்லுங்கத்தை, இப்போ டைம் ஆச்சு, ஏழே முக்காலுக்கு எல்லாம் ரெடியாகலன்னா எனக்கு ஏழரைதான்” என்றவள் போனை வைத்துவிட்டு உமா சொன்னது போலவே சாம்பாரை வைத்து முடித்தாள்.
அதன்பின் குளித்து முடித்து ஏழரை மணிக்கெல்லாம் தயாராகியவளுக்கு அவள் தோழி யுவராணியிடமிருந்து அழைப்பு.
“சொல்லு டி” என்று ரசிகா ஆரம்பிக்க,
“ஏய் இப்போதான் டி எழுந்தேன்” என்றாள் சோகமாக.
“அப்போ காலேஜ் வரமாட்டியா நீ?”
“எரும, நேத்து படம் பார்த்துட்டு லேட்டா தூங்கினேன், காலையில எழுந்திரிக்கவே முடியல டி. இப்போ டக்குன்னு ரெடியாக ஒரு வழி சொல்லு”
“இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல கிளம்பினாதான், நீ பஸ் பிடிச்சு காலேஜுக்கு எய்ட் ஃபீஃப்டின் போல வர முடியும். சரி குளிச்சிட்டியா?”
“ஏய்! நான் குளிக்கல, பல் கூட விளக்கல டி, உனக்குத்தான் போன் பண்றேன்” என்றாள் பரபரப்பாக.
“ஏன் டி ஒன்னுமே செய்யாம சீக்கிரம் கிளம்பனும்னா என்ன செய்றது? பேசாம லீவ் போடு டி” என்று ரசிகா சொல்ல,
“அது தெரியாம தான் உங்கிட்ட ஐடியா கேட்கிறேனா? இன்னிக்கு கல்ச்சுரல்ஸ்க்கு ஆடிஷன் இருக்கு, நான் போகனுமே. முதல்ல ஐடியா சொல்லு. இப்போவே அஞ்சு நிமிஷம் அவுட்”
“உன்னை…பேசாம குளிக்காம டிரஸ் பண்ணிட்டு கிளம்பிடு. ப்ரஷ் பண்ணிட்டு பேஸ் வாஷ் செஞ்சிட்டு பஸ் ஏறிடு”
“ம்ம், நாறுமே”
“பின்ன மணக்குமா, செண்ட் போட்டுக்கோ”
“யாராவது கண்டுபிடிச்சிட்டா?”
“கழுத குட்டி! நீ குளிச்சியா இல்லையான்னு கண்டுபிடிக்கறதுதான் நாட்டுல எல்லாருக்கும் முக்கியமா என்ன?”
“ஓகே, ஒகே” என்றபடி யுவா ப்ரஷ் செய்யத் தொடங்கிவிட,
“பன்னிக்குட்டி! பல் விளக்குறது இங்க வரைக்கும் கேட்குது”
“ஹி ஹி டைம் ஆச்சுல, ஏன் டி முடிஞ்சா இந்த முசோலினியை கொஞ்சம் எனக்குக் கருணைக் காட்ட சொல்லேன்” என்றதும்,
“செருப்பால அடிப்பேன்! அவருக்குப் பயந்துதான் நான் தினமும் அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு எழுந்துக்கிறேன், நீ ஜாலியா படம் பார்த்துட்டு பெர்மிஷன் கேட்கிறியா? சீக்கிரம் கிளம்பி வா” என்று சொல்லி ரசிகா போனை வைத்தாள்.
“காலையிலயே போனா?” என்றபடி வந்தார் முசோலினி, முசோலினி என்ற சிவசங்கரன். ரசிகாவின் அப்பா.
“இல்லப்பா அது யுவி ஒரு டவுட் கேட்டா” என்று ரசிகா தயங்கி தயங்கிப் பேச,
“டவுட்லாம் காலேஜ்ல கேட்க வேண்டியதுதானே? காலையில எழுந்தவுடனே போனை எடுக்கக் கூடாதுன்னு எத்தனை தடவ சொல்லுறது?” என்று கடிந்து கொண்டே செல்ல ரசிகா எதிர்த்துப் பேசவில்லை, அதற்குப் பழகவில்லை.
“இனிமே செய்ய மாட்டேன்பா” என்று முடித்துக்கொண்டாள்.
“சீக்கிரம் கிளம்பு. நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன், உனக்குப் பால் வச்சிருக்கேன், மறக்காம குடிச்சிடு” என்று சொல்லி அவர் கிளம்பிப் போக, ரசிகா அப்பா சொன்னது போலவே எல்லாம் செய்தவள் கிளம்பும் முன் அம்மாவின் நின்று வணங்கினாள். அம்மாவின் படத்திற்கு முத்தமிட்டவள் அங்கிருந்த தாழம்பு குங்குமத்தை வைத்தவள், தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றாள்.
பார்க்கிங் ஏரியாவில் தனது வண்டியை நிறுத்தியவள் ஆபிஸ் ரூம்சென்று பயோமெட்ரீக்கில் ரேகைப் பதிந்தவள் தோழிக்காக காரிடாரில் நின்றாள்.
“ஹாப்பி மார்னிங் மேம்” என்றாள் ஒரு மாணவி.
“ஹாப்பி மார்னிங்” என்று புன்னகையுடன் பதிலளித்தாள் ரசிகா சிவசங்கரன், அந்த கல்லூரியில் துணைப் பேராசிரியர்.
இந்த ஹாப்பி மார்னிங் அவள் ஏற்படுத்திய பழக்கம். அது என்ன குட் பேட் மார்னிங்? சந்தோஷமான காலையாக இருக்கட்டுமே என்று அவள் சொல்ல, அவளது மாணவர்களும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டனர்.
நகரின் மையத்தில் இருக்கும் ஒரு கலைக்கல்லூரி. ஆனால் பெரிய சுற்றுப்பரப்பு, அதனைப் போலவே அழகிய சுற்றுச்சுழல். எல்லா மருங்கிலும் மரங்கள்தான். அந்த காலை நேரத்தில் மெல்லிய பனிபடர்ந்த காற்றில் நிற்பதே அவ்வளவு சுகமாய் இதமாய் இருக்க, அந்த நொடிகள் ரசிகா ரசித்து அனுபவிப்பவை.
மணி எட்டு பத்து ஆகிவிட, அப்போது சரியாக சந்தோஷமாகவே தனது தோழியைக் கண்டு சீரான நடையிட்டு வந்தாள் யுவராணி. போனில் அப்படி புலம்பியவளா எனும் வண்ணம் காட்டன் புடவையைக் கனக்கச்சிதமாய்க் கட்டியிருந்தவள், மிடுக்குடன் நடந்துவர ரசிகாவிற்கு இவள் குளித்துவிட்டு வருகிறாளா இல்லையா என்ற சந்தேகம்.
அதில் முகம் கனிந்து முறுவலோடு இருக்க,
“என்ன மேடம்? என்னை சைட் அடிக்கிறீங்க?” என்று யுவராணி கேட்க,
“இல்ல” என்றவள் தனது சிரிப்பை அடக்க,
“என்ன சிரிப்பு?” என்றாள் மெல்லமாக. இயல்பிலேயே அவளது குரல் கணீர் கணீர்தான். அதனால் மெல்லமாய்க் கேட்க,
“ஒன்னு நினைச்சேன், சிரிச்சேன்” என்றாள் ரசிகா மென்னகையுடன்.
“என்ன நினைச்ச?”
“இந்த அளவு டீக்கா டிரஸ் பண்ணிருக்கியே? அதான் குளிச்சியா இல்லையான்னு யோசனை” என்று சொல்லவும் மெல்லமாக ரசிகாவின் கையில் கிள்ளியவள்,
“கொழுப்பு உனக்கு” என்றவள் பின் இன்னும் குரலைத் தாழ்த்தி,
“குளிக்கல டி, ஆனா அப்படி தெரியல இல்லை” என்றாள் பெருமையாக.
“இத்தனை நாளும் கூட நீ குளிச்சியா என்னனு எனக்குத் தெரியலதான்” என்று ரசிகா கிண்டல் செய்ய, மாணவர்கள் அதிகளவில் வந்தவண்ணம் இருக்க இவர்களுக்கு விஷ் செய்துவிட்டு எல்லாரும் அவரவர் வகுப்புக்குள் நுழைந்தனர்.
“உனக்குக் காலையில க்ளாஸ் இல்லையா ரசிகா?” என்று யுவராணி கேட்க,
“இருக்கு டி ஃப்ர்ஸ்ட் இயருக்கு. உனக்கு?”
“எனக்குக் க்ளாஸ் இல்ல, ஸோ கேண்டீன்ல போய் சாப்பிட்டு அப்புறம் நெக்ஸ்ட் அவர் இந்த கல்ச்சுரல்ஸ் ஆடிஷன் இருக்குல, அங்க போகணும்” என்றதும்,
“ம்ம், காலேஜ்ல படிக்கிறப்பவும் இப்படி சொல்லிட்டு கட் அடிச்ச, இப்பவும் இப்படி” என்று ரசிகா கிண்டல் செய்ய,
“அடியே! பொறுப்போட மறுபிறப்புடி நான், அதனாலதான் இந்த வேலையை எங்கிட்ட கொடுத்திருக்காங்க” என்றாள்.
“ஆஹா! தெரியுமே, அதான் நீ காலையில இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்ததுட்டியே..அடிங்க..இந்த காலேஜ்ல பாட்டு டான்ஸ் தெரிஞ்ச நாலு மேம்ல நீயும் ஒரு ஆள்னு உன்னை செலெக்ட் பண்ணியிருக்காங்க, அதுல பெருமை வேற” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் சிவசங்கரன் அந்தப்பக்கமாய் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார்.
“அய்யோ ராகா, உன் நைனா டி, நான் கேண்டீன் போறேன்” என்று ஓடிவிட ரசிகாவும் அவளது வகுப்புக்குள் போனாள்.
ரசிகாவின் தந்தை சிவசங்கரன் அந்த கல்லூரி உரிமையாளரின் நெருங்கிய நண்பர். எங்கும் நேர்மை! எதிலும் நேர்மை தவறாத மனிதர். தன் சொந்தமகள் தாமதாக வந்தாலும் கூட வைத்து விளாசிவிடுவார். தராசு என்றுதான் அவரை ஆசிரியர்கள் அழைக்க, மாணவர்களுக்கோ அவர் முசோலினி. அவ்வளவு கண்டிப்பு. அதனாலயே பெற்றோர் எல்லாம் பயமின்றி நம்பிக்கையுடன் கல்லூரிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர்.
எட்டு பதினைந்துக்குப் பெல் அடிக்கவும் எல்லாரும் வகுப்புக்குள் சென்றுவிட்டனரா என்று பார்த்தபடி சிவசங்கரன் ஆபிஸ் ரூம் போக, அப்போதுதான் பரபரப்பாக உள்ளே நுழைந்தார் சக்திவேலன்.
சிவசங்கரைக் கண்டு ஒரு நொடி தயங்கியவர் பின் அவரது முதல்வர் அறைக்குள் சென்று பொத்தென தனது இருக்கையில் சாய்ந்தார்.
“ப்ரின்சிபால் ஸார் காலேஜ் வர டைமிங் இதானா? ஃபைவ் மினிட்ஸ் லேட்” என்று சிவசங்கரன் சொல்ல
“சாரி ஸர்” என்றார் சக்தி.
“இந்த மாசத்துல இது இரண்டாவது தடவை” என்றார் சிவசங்கரன் கண்டிப்புடன்.
“டேய் இதெல்லாமா டா கணக்கு வச்சிப்ப? உனக்குப் பயந்துதான் டா நான் உமா சாப்பிட சொன்னா, வேண்டாம்னு வேகமா வந்தேன்” என்றார் பாவமாக.
“சக்தி இன்னும் சாப்பிடலையா நீ? சுகர் மாத்திரை போடனும் நீ” என்ற சிவசங்கரன் நொடியில் நண்பராக மாறிப்போனார்.
“உமா சாப்பாடு கொடுத்துச்சா? இல்லை கேண்டீன்ல வாங்கிட்டு வரவா?” என்று கேட்க,
“இல்ல இல்ல, அவ கொடுத்துவிட்டா” என்றதும்,
“நீ முதல்ல சாப்பிடு. நான் இந்த இபி பில் கட்டுற வேலை இருக்கு அதைப் பார்க்கிறேன்” என்று சொல்லி சிவசங்கரன் வெளியேறிவிட்டார்.
சக்திவேலனின் கனவு இந்த கல்லூரி. அவர் டாக்டர். சக்திவேலன் எம்.ஏ. எம்.ஃபில் பி.ஹெச்டி. சக்திவேலனுக்கு கல்வியில் வளமை புலமை எல்லாம் இருந்தாலும் கூட கல்லூரி நடத்தும் திறமை என்பது அவரிடம் இல்லை, ஊரில் இருந்த எல்லா நிலங்களையும் தனது கனவுக்கல்லூரிக்காக செலவு செய்திருந்தாலும் திறம்பட கல்லூரியை நிர்வகிக்கும் திறமை அவருக்கு இல்லாது போக, அப்போதுதான் மனைவியை இழந்து, மகளுக்காக தனது மிலிட்டர் வேலையில் வாலண்டரி ரீடையர்மெண்ட் வாங்கி வந்திருந்த தனது பால்ய சினேகிதன் சிவாவை சந்தித்தார்.
அன்றிலிருந்து எல்லாம் ஏறுமுகம்தான்! சிவசங்கரன் நிர்வாகத்தைப் பார்க்க, சக்திவேலன் கல்வியைப் பார்க்க கல்லூரி தொடங்கி இதோ இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. ரசிகா அன்றையை வருகைப் பதிவை எடுத்து முடித்தவள் வாசலில் நின்றிருந்த மாணவிகளைப் பார்த்தாள். வகுப்பு ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்திருந்தனர் அவர்கள். ஐந்து நிமிடம் மேல் தகுந்த காரணமின்றி லேட் என்றால் பதினைந்து நிமிடம் வெளியே நிற்க வைக்க வேண்டும் என்பது சிவசங்கரின் விதிமுறை.
“ஏன் லேட்?” என்று அந்த மாணவிகளிடம் கேட்க,
“மேம், அது பஸ் லேட்” என்று ஒருத்தி சொல்ல,
“நீங்க எனக்கு முன்னாடியே வந்திட்டீங்கன்னு ஐ நோ கேர்ள்ஸ், கேண்டின் வழியா போகும்போது ஐ சா யூ போத். இண்டர்வெல்ல போய் கதைப் பேசிட்டு கேண்டீன்ல இருக்க வேண்டியதுதானே? க்ளாஸ் இருக்குன்னு தெரிஞ்சும் லேட் செய்வீங்களா? பெட்டர் ஸ்டே அவுட்” என்றவள் பாடம் நடத்திக் கொண்டிருக்க
வெளியே நின்றிருந்த மாணவிகளிடம் அந்த வழியே வந்த ஒருவன்,
“வை ஆர் யூ ஸ்டேண்டீங் அவுட்?” என்று கேட்டான்.
“ஸர், கேண்டீன் போய்ட்டு லேட்டா வந்தோம், அதான் மேம் பனிஷ்மெண்ட்” என்று தயங்கி தயங்கி ஒரு பெண் சொன்னாள். இதுவரை அந்த கல்லூரியில் பார்க்காத ஒருவன் அவன், ஆனால் பார்க்கவோ ஆசிரியனைப் போலவே இருக்க மரியாதையும் பயமும் கூடியது.
“ஓஹ்” என்றவன் இரண்டடி எடுத்துவைக்க பாடம் எடுத்துக்கொண்டிருந்த ரசிகாவின் தலைத் தெரிய,
“எந்த மேம்?” என்றான் உறுதிபடுத்திக்கொள்ள.
“ரசிகா மேம் ஸர்” என்றதும் உள்ளுக்குள்ளே உஷ்ணம் ஏற,
“நீங்க இரண்டு பேரும் உள்ளே போங்க” என்றதும் சந்தோஷம் இருந்தாலும் ரசிகா என்ன சொல்வாளோ என்று அவர்கள் அவனை பார்க்க,
“நான் மேம்கிட்ட சொல்றேன், யூ கெட் இன்” என்றவன் அந்த மாணவிகள் பின்னே நின்று,
“மேம், இந்த டைம் இவங்களை உள்ளே அலோவ் பண்ணுங்க” என்றதும் அந்த குரலில் சர்வமும் ஆடியது ரசிகாவிற்கு. அவனை அங்கு அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. இன்று வருகிறான் என தெரிந்தவளுக்கு இங்கு வருவான் என தெரியவில்லை.
அகத்தினுள் அவ்வளவு சந்தோஷம்! இறக்கையில்லை பறவையாய் பாவை! கூடவே பெரும்பயம், அவன் பேசுவானோ இல்லையோ என. அந்த அதிர்ச்சியில் அமைதியாகிட மாணவிகள் உள்ளே வரவும் சுயம்பெற்றவள் மெல்ல நடந்து அவனருகே போனாள்.
இவள் வருவதைக் கண்டு அலட்சியத்துடன் நகரப்பார்த்தவனை அவளின் மென் குரல் கட்டிப்போட்டது.
“அவங்க கேண்டீன் போய்ட்டு லேட்டா வந்தாங்க, அதான் பனிஷ் பண்ணினேன். அவங்களை நீங்க அலோவ் பண்ணினா எப்படி சர்வா?” என்று அவனிடம் கேட்க,
“வாட்?” என்றான் நக்கலாக. அப்போதுதான் அவனைப் பெயர் சொல்லி அழைத்தது உரைத்தாலும் அமைதியாய் இருக்க,
“கேண்டீன்ல ஃபுட் ரெடியாக லேட் ஆகியிருக்கும், இதுக்கெல்லாமா பனிஷ்மெண்ட்?” என்றான் அசட்டையாக.
“அவங்க பொய் சொன்னாங்க” என்றதும்,
“ஓஹ் ஓஹ்! பொய் சொன்னா தண்டிக்கவும் ஒரு தகுதி வேணும் ரசிகா.. மேம்” என்றவனின் வார்த்தைகள் இத்தனை ஆண்டாய் அகத்தில் சுமக்கும் காயத்தை கீறிவிட்டது.
மறந்தாலும் அது நினைவில் வர, அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் ரசிகா. அவள் அசையாமல் நிற்க,
அவள் முன்னால் சொடக்கிட்டவன் “க்ளாஸ் நடத்துற ஐடியா இருக்கா இல்லையா ?” என்றதும் இன்னும் வெட்கமாய்ப் போய்விட அவள் மௌனத்தில் நின்றாள்.
‘நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே!’
——————————–
https://youtube.com/shorts/AgV338o8hfs?si=Ix8--d2soz710DE5
Nice start
Already vandhathu thane Pavi ma.
Yes ma. re run dhan
நிலா முற்றம் நாவலை Rerun கொடுத்தமைக்கு நன்றி மா.
My pleasure 😀
ரசிகாவை இவன்
Congratulations ma pavi
Thank you ma. Yes re run story dhan