ஆறு மாதங்கள் கழித்து…
சர்வஜனனுக்கும் ரசிகாவுக்கும் திருமணம் முடிந்து மாதங்கள் ஓடியிருந்தன. ரசிகாவுக்கு இருந்த ஒரே கவலை அப்பா தனியாக இருப்பார் என்பதுதான். அதை மனம் விட்டு சர்வாவிடம் சொல்லவும் செய்தாள்.
“உனக்கு உங்கப்பா பத்தி தெரியும்தானே ரசி, கண்டிப்பா நம்மோட வந்து இருக்க ஒத்துக்க மாட்டார். வீக்கெண்ட்ல நம்ம அவர் கூட போய் இருக்கலாம், இருந்தாலும் உனக்காக நான் கேட்டுப்பார்க்கிறேன்” என்று கேட்கவும் செய்தான். அவன் நினைத்தது போலவே சிவசங்கரன் மறுத்துவிட்டார்.
இருந்தும், “எனக்கு முடியாம போற காலத்துல உங்களை விட்டா யார் கூட இருப்பேன் சர்வா, கண்டிப்பா அப்போ வரேன். சில வருஷங்கள்னா கூட நான் ராதிகா கூட வாழ்ந்த வீடு, எங்க நினைவுகள் இங்க தான் இருக்கு, நினைவுகள் மட்டும்தான் மனுஷனை உயிர்ப்போடு வச்சிருக்கும். உனக்குப் புரியும்னு நினைக்கிறேன், ரசிகா ஃபீல் பண்ணுவான்னு எனக்குப் புரியுது, நீதான் அவளுக்குப் புரிய வைக்கணும்” என்று சொல்லிவிட்டார்.
அதன்படி வார இறுதியில் அவருடன் அவர் வீட்டில் இருவரும் தங்குவார்கள், இல்லையா அவரை இங்கு அழைத்து வருவான் சர்வா. காதல் இல்லையென்று சொன்னாலும் கூட சர்வா ஒரு சிறந்த கணவனாக இருந்தான், அத்தனை அக்கறையுடனும் பரிவுடனும் அன்புடனும் ரசிகாவை நடத்துவான்.
‘காதல்..
அதற்கென்று ஆசைகள்
எதுவும் இல்லாதது..
அது நிறைவேற
வேண்டுமென்பதைத் தவிர!’ என்றொரு கலீல் கிப்ரான் கவிதை உண்டு.
அது போல ரசிகாவிற்கு அவளின் காதல் நிறைவேறியதே பெரிய மகிழ்ச்சி. இதில் சர்வாவுடன் இருக்கும் பொழுதுகள் எல்லாம் அவளுக்கு வண்ணமயமே! அவள் அம்மா இருந்தபோது எப்படி மகிழ்ச்சியாய் துறுதுறுவென்று இருந்தாளோ, அப்படி கொஞ்சம் கொஞ்சமாய் அவன் அறியாமலே ரசிகாவை மாற்றியிருந்தான் சர்வா.
உமாவிற்கு சிவசங்கரனே சர்வாவை மருமகனாக ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயம் அவன் மீது தவறிருக்காது என்று அவராகவே ஒரு அனுமானத்துக்கு வந்தவர், அதனைப் பற்றி பேசவில்லை. தங்கள் வளர்ப்பில் குற்றமில்லை என்ற திருப்தி அவரிடம்.
இன்னமும் உமாவுக்கும் சர்வாவுக்கும் முட்டிக்கொள்ளும், ரேஷ்மிக்குக் குழந்தைப் பிறந்து இருக்க, அவள் அம்மா வீட்டில் இருந்தாள்.
புஷ்பாவும் அவளை நன்றாகவே நடத்தினார். அவரைப் பொருத்தவரையில் எப்போதும் உமாவோடு தன்னை ஒப்பிட்டுப்பார்ப்பார், அதுதான் அவரின் பெரிய குறை. மற்றபடி அன்பாகத்தான் இருப்பார், அதுவும் பெண்பிள்ளை இல்லாதவர் என்பதாலும் ரசிகாவும் தாயில்லா பெண் என்பதாலும் கூடுதல் அக்கறையுடன் கவனிப்பார்.
சர்வஜனனே ஆச்சரியப்பட்டு, “மா, என்னம்மா நீயும் ரசியும் சண்டை போடுவீங்கன்னு நினைச்சேன், இவ்வளவு நல்ல மாமியாரா நீ? எனக்குத் தெரியாம போச்சே” என்று வம்பிழுத்தான்.
“ஏன் உன் பெரியம்மாதான் நல்ல மாமியாரா இருக்கணுமா? நானெல்லாம் இருக்க கூடாதா?” என்று சண்டைக்கு வந்தார் புஷ்பா.
“ஓஹ், அப்போ பெரியம்மாவை விட நல்ல மாமியாரா இருக்கணும்னு நினைக்கிறீங்க?” என்று இவனும் வாய்ப் பேசினான். ஆனால் ஒருவகையில் அது உண்மையும் கூட! போட்டி போட்டு மருமகளைப் பார்த்தார்.
”நான் நல்ல மாமியாரா இல்லையான்னு நீ சொல்ல வேண்டாம் ரசி சொல்லுவா, நீ சொல்லு ரசி” என்று கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவளை அழைக்க,
“நீங்கதான் அத்தை பெஸ்ட் மாமியார்” என்று அவள் புன்னகையுடன் சொல்ல,
“கேட்டுக்கோ சர்வா” என்று புஷ்பா பெருமையுடன் நகர, அறைக்குள் வந்தவுடன் அவளை அணைத்துப் பிடித்த சர்வா,
“ஒரே ஒரு ட்ரிக் சொல்லிக் கொடுத்தேன் உனக்கு, எங்கம்மாவையே கவுத்துட்ட டீ நீ?” என்றான்.
சர்வாதான் திருமணத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறான்.
“அம்மா எப்பவும் பெரியம்மா கூட ஒரு காம்படிஷன் மாதிரி நினைச்சிப்பாங்க ரசி, நீ உனக்கு எது தெரியலன்னாலும் பெரியம்மா கிட்ட கேட்காம அம்மா கிட்ட கேளு, அவங்களுக்கு உன்னைப் பிடிச்சிடும். அவங்களை முக்கியமா நினைக்கலங்கறதுதான் அவங்க பிரச்சனை, அதை சரி செஞ்சிட்டா அம்மா வில் பி ஹாப்பி” என்றிருந்தான்.
அவள் அமைதியாக அவனின் அணைப்பில் நிற்க,
“அது எப்படி எங்கம்மா அது சொன்னாலும் எஸ் சொல்லிடுற நீ , என்னால கூட அப்படி இருக்க முடியாது”
“அவங்க நம்ம நல்லதுக்குத்தான் சொல்றாங்க, எனக்கு எஸ் சொல்லியே பழகிடுச்சு அதான் எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லை சர்வா” என்றதும்,
“எல்லாம் மிலிட்டர் டிரெயினிங், எப்படி யூஸ் ஆகுது பாரு” என்றான் சிரித்தபடி.
“இப்போ நீங்க வீட்டீங்கன்னா நான் காலேஜ் போக ரெடியாகுவேன்” என்றதும்,
“ஆமா ஆமா, டைம் ஆகிடும். இன்னிக்கு ஒரு மீட்டீங் இருக்குனு பெரியப்பா சொன்னார். நான் அங்க போகணும் ரசி, நீ உன் ஸ்கூட்டியில போயிடும்மா ப்ளீஸ்” என்று சொல்லி அவன் விலகிவிட,
“சர்வா, இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்று திட்டிவிட்டு ரசிகாவும் கிளம்பினாள். ஆனாலும் நேரமாகிவிட்டது, புஷ்பா அவளை சாப்பிடாமல் விடவில்லை, அடுத்து ட்ராஃபிக் ஜாம் ஆகிவிட சிவசங்கரனிடம் காலையிலே திட்டு வாங்கினாள்.
“பொறுப்பான இடத்துல இருந்தா அதே பொறுப்போடு இருக்கணும், அஞ்சு நிமிஷம் லேட்னா ஓகே, இது என்ன பதினைஞ்சு நிமிஷம் லேட்” என்று பயங்கரமாய்த் திட்டிவிட்டார்.
“சாரி ஸர்” என்று சொன்னாலும்,
“நீ இப்படி லேட்டா வந்தா எப்படி பசங்களை கேள்வி கேட்க முடியும்? கேள்வி கேட்கிற இடத்துல இருக்கவங்க கேள்வி கேட்க முடியாதபடி சரியா நடக்கணும்” என்று மகளை நன்றாய்த் திட்டினார்.
முன்பென்றால் பரவாயில்லை இப்போது இது அவர்களுடையது அல்லவா? இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று பேச,
சர்வஜனன் மீட்டீங் முடிந்து வந்தவன் இவள் திட்டு வாங்குவதைப் பார்த்தாலும் கூட, ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவனது அறைக்குள் போய்விட்டான். இவன் பேச போனால் மாப்பிள்ளை என்றும் பாராமல் கரெஸ் என்றும் நினைக்காமல் துவைத்து விடுவார் மிலிட்டரி என்று தெரிந்தவன்.
ஒருவழியாக திட்டுகள் வாங்கி அவளது வகுப்பை முடிந்து லஞ்ச் ப்ரேக்கில் யுவியைப் பார்த்து தன் சோக கதையை சொல்ல,
“அடி போடி! நீ சர்வா ஸாரை கல்யாணம் பண்ணினா நமக்கு எக்ஸ்க்யூஸ் கிடைக்கும்னு பார்த்தா ஒன்னும் இல்லை, இதுல மத்தவங்க வேற என்னமோ நான் உன் ப்ரண்ட்னு எனக்கு பார்ஷியாலட்டி காமிக்கிற மாதிரி பார்க்கிறாங்க, இங்க உனக்கே பாதி டீ கூட வழியில்லைன்னு அவங்களுக்குத் தெரியல” என்று யுவி சிரிக்க,
“சிரிக்காத டி, இந்த சர்வானாலதான் லேட். மீட்டீங் போகணும்னு என்னை விட்டு வந்துட்டார்” என்றாள் சுருங்கிய முகத்துடன்.
“முசோலினி கிட்ட சொல்ல வேண்டியதுதானே?
“ரொம்ப கொழுப்பு டி உனக்கு, அதை சொன்னா வீட்ல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் கரெக்ட் டைம்கு காலேஜ் வரணும்னு எக்ஸ்ட்ரா அஞ்சு நிமிஷம் அட்வைஸ் செய்வார்” என்றதும்,
“வாஸ்தவமான பேச்சு, சரி விடு. அந்த லெமன் ரைஸை எடு இந்த பக்கம். அப்படியே ஒரு ஜூஸ் சொல்லு, உன்னோட சோகத்தைக் கேட்டு வயிறு எரியுது” என்று புலம்ப,
“என் சோகத்துக்கு நான் சோடா குடிச்சிக்கிறேன்” என்று ரசிகா சொல்ல, யுவி முறைத்தாள்.
“இரு இரு வாங்கி வரேன்” என்று எழுந்து போய் வாங்கித் தந்தாள். பேச்சும் சிரிப்புமாக அவர்கள் பொழுது நகர,
“சீக்கிரம் சாப்பிடு டி, இன்னொரு முறை திட்டு வாங்க முடியாது என்னால” என்ற ரசிகா விரைவாக உண்டு முடித்து எழுந்து போனாள்.
இரவு வீட்டில் சர்வா உறங்க வந்த ரசிகாவிடம்,
“என்ன ரசிம்மா? கோவமா?” என்று இழுக்க,
“திட்டுவாங்கும்போது அப்படியே போனவர்தானே, போங்க” என்று அவள் முகம் திருப்பினாள்.
“நான் மட்டும் குறுக்க வந்திருந்தா மாமா என்னையும் சேர்த்து வச்சு திட்டியிருப்பார், உன்னைத் திட்டினா நீ தாங்குவ என்னைத் திட்டினா நீ தாங்குவியாம்மா தாங்குவியா” என்றதும் அவன் நெஞ்சில் குத்தியவள்
“எப்படியெல்லாம் பேசி ஏமாத்துறீங்க?” என்றவளின் கையைப் பிடித்து அவன் வருடத் துவங்க,
“சர்வா” என்றாள் ஆச்சரியமாக.
“அடுத்து வாங்கியாச்சா?” என்று சிரித்தாள்.
“எஸ்” என்றவன் எழுந்து போய் மேஜை மீதிருந்த நகைப்பெட்டியை எடுத்து வந்தான். திறந்து அதனுள் இருந்த வைர வளையலை எடுத்தான்.
இப்படித்தான் அடிக்கடி அவளுக்கு வளையல்களாக வாங்கிக் குவித்துக் கொண்டே இருப்பான். தங்கம், வைரம் என்றில்லை கண்ணாடி வளையல்கள், ஃபேன்சி வளையல்கள் என்று நிறைய வாங்கித் தந்துவிட்டான்.
“ஏன் சர்வா இவ்வளவு காஸ்ட்லியா டைமண்ட்லாம் எதுக்கு?” என்றவளின் கையைப் பிடித்து வளையலை அணிவித்தவன் அவள் மடியில் தலைவைத்து அவள் கைகளை வருடியபடி,
“என்னை விட காஸ்ட்லியா?” என்றான் கிண்டலாக.
“செல்ஃப் டப்பா” என்று அவள் சிரிக்க,
“நம்மைப் பத்தி நம்மதான் டி பெருமையா பேசணும்” என்றவன்,
“நெக்ஸ்ட் வீக் உன்னோட பர்த்டே வருது, ஸோ என்னால முடிஞ்சது”
“என் சர்வா என்ன வாங்கிக் கொடுத்தாலும் எனக்கு அது விலைமதிக்க முடியாததுதான்” என்ற மனைவியை இழுத்து அணைத்தான்.
“லவ் யூ சொல்லு ரசீ” என்றான் அவள் காதருகே.
“லவ் யூ சர்வா” என்று ரசிகா சொல்ல,
“அதர் வேஸ்ல சொல்லு” என்றான் கள்ளச்சிரிப்புடன்.
“சொல்லிட்டா போச்சு” என்றவள் அவனைத் தன் முத்தங்களால் நிறைத்தாள்.
அவளின் முத்தங்களில் முகிழ்த்தவன்,
“என்னை இவ்வளவு லவ் பண்றதுக்குத் தேங்க்ஸ் ரசிம்மா” என்றான் காதலாக.
சர்வஜனனை காதலில் நனைத்தாள் ரசிகா. அவ்வளவு அக்கறையுடன் அவனைப் பார்த்து பார்த்து கவனிப்பாள். அவனை சர்வமாய் நினைத்து நடத்தினாள், தான் என்பதை விட தலைவன்தான் அவளுக்கு பிரதானம்.
ரசிகா பேசாமல் அவனை ரசித்துப் பார்த்திட,
“என்ன ரசி பேசாம இருக்க? வளையல் டிசைன் பிடிச்சிருக்கா?” என்று வதுவையின் வளைக்கரத்துடன் விளையாடினான்.
“ம்ம், நீங்கதானே சர்வா ரசிம்மான்னு சொன்னீங்க. அதான் ரசிக்கிறேன்” என்றவளின் பேச்சில் தன்னை மறந்து சிரித்தவன்,
“உண்மையில சர்வாவோட ரசியா மாறிட்ட நீ?” என்று சொன்னவன்,
“நானும் ரசியோட சர்வாவா மாறுறேன்” என்றவன் அவளின் வளைக்கரங்களில் முத்தமிடத் தொடங்கியவன்,
“ரசி என் பாட்டு பாடேன்”
“அது உங்க பாட்டுன்னு யேசுதாஸுக்குத் தெரியுமா?” என்ற போதிலும்,
அவள் இதழ்கள் இசைக்கத் தொடங்கின.
‘அசைத்து இசைத்தது
வளைக்கரம்தான்’
என்றதும் அவளின் வளைக்கரத்தை அசைத்து முத்தங்களால் நிறைத்த சர்வாவும்
‘இசைந்து இசைத்தது
புது ஸ்வரம்தான்’
என்று கூட இணைந்து பாடினான்.
ஸ்வரமாய் இசையாய் அவர்கள் வாழ்வு என்றும் இனித்திடும்!
******************
Yes yes pleasant read தான்.....
💛
அசைத்து இசைத்தது வலக்கரம் தான்....
மனதிற்கு இதமான எதார்த்தமான இயல்பான நிலையில் இருக்கும் காதல் கதை.....👏🏻👏🏻👏🏻❤️👍🏻💐🍫🎁
💛
மிக மிக அருமையான கதை. யதார்த்தமான இயல்புடன் அனைவரும் இருப்பது நன்றாக உள்ளது. சத்யா வேலுசாமி சொல்வது போல மீண்டும் ரசித்து படிப்பது அருமை.
💛
நாங்களும் ரசி சர்வாவின் காதலை ரசித்து படித்தோம்.
💛
காதலே ரசிக்கும் ரசி-சர்வா காதலை. அருமையான, மெலோடியான நிலா முற்றம். வாழ்த்துக்கள் !!
நன்றி மா💛
Beautiful story ❤️
Thank you 💛