Episode 39

வீட்டிற்குச் சென்று அவன் அறையில் அடைந்துகொண்டான் ஜெகதீஷ். மனம் மிகவும் காயப்பட்டு இருந்தது. அவனால் யூகிக்க கூட முடியவில்லை கல்கிக்கு சிரஞ்சீவியைப் பிடிக்குமென. என்னை விட அப்படி என்ன அவன் உயர்ந்துவிட்டான் என்ற எண்ணம். அஞ்சனாவுக்குத் தான் மனம் கேட்கவில்லை. எப்படியும் ஜெகதீஷ் கல்கியின் காதல் தெரிந்து வருத்தப்படுவான் என தெரியும். சின்ன வயதில் இருந்தே ஒன்றாய் வளர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் அவர்கள்தான் ஆறுதல் எல்லாம். அதனால் ஜெகதீஷுக்கு அழைக்க

“நீ கூட உன் தங்கச்சிக்குத் தானே டி சப்போர்ட் பண்ணின?” என்றான் எடுத்தவுடன்.

“என்னடா இன்னமும் கோவம் போகலயா?” அஞ்சனா கேட்க

“கஷ்டமா இருக்கு அஞ்சு. நிஜமா நான் நினைச்சுக் கூட பார்க்கல, அந்த போலீஸை எப்படி டி அவளுக்குப் பிடிச்சது.? இதுல லவ் எல்லாம் எனக்குப் பிடிக்காதுன்னு வசனம் வேற பேசுவா” என்றான் கடுப்பாக.

“டேய் அவரும் நல்லவர்தான் டா, கல்கிக்கே பிடிச்சதுன்னா பார்த்துக்கயேன்”

“நான் நல்லவன் இல்லைன்னு சொல்றியா அஞ்சு? என்னையும் தானே டி அவளுக்குப் பிடிக்கும்?” என்று அடமாய் ஜெகதீஷ் பேசவும் அஞ்சனா உடனே

“சரி நான் ஒன்னு கேட்கிறேன் பதில் சொல்லு?” என்றாள்.

“சொல்லு”

“கல்கியை விட நானும் நீயும் ரொம்ப க்ளோஸ். நான் கூட உனக்கு அத்தைப் பொண்ணுதான். ஆனா உனக்கு ஏன் கல்கி மேல லவ் வந்துச்சு? என்னை உனக்கு ஏன் பிடிக்கல?” என்று அஞ்சனா கேட்க

“லூசா டி நீ? உன்னை நான் அப்படி பார்க்கவே இல்லை. நீ எனக்கு நல்ல ப்ரண்ட்” என்றான் கோபத்துடன்.

“அதேதான்! கல்கி உன்னை அப்படி பார்க்கலடா ஜெகா. அதைப் புரிஞ்சிக்கோ. அவளுக்கு நீ ஒரு ப்ரண்ட். அவ சிரஞ்சீவியைப் பார்க்கலன்னாலும் உன்னை அவ வேற எண்ணத்துல ஏத்துக்கவே மாட்டா” என்றாள் பொறுமையாகவே.

அதற்கு ஜெகதீஷிடம் பதில் இல்லை, அஞ்சனா சொன்னதை அறிவு ஏற்றாலும் அகம் ஏற்கவில்லை. அவனின் உணர்வுகள் புரிந்து அஞ்சனாவும்

“கொஞ்சம் பொறுமையா யோசிச்சா உனக்கே புரியும் ஜெகா, எனக்கு நீயும் முக்கியம் புரிஞ்சிப்ப நினைக்கிறேன். இப்போ வைக்கிறேன். நீயே சரியாகிட்டு பேசு” என்று வைத்துவிட்டாள். ஜெகதீஷ் சொல்லித் தெரிவதை விட தானே சொல்வது நலமென அங்கையற்கண்ணியிடம் கல்கி சொல்லிவிட்டாள் தன் காதலை. அவரோ

“உனக்கு எப்படி டி அந்த பையனைப் பிடிச்சது? அந்த பையனுக்கு எப்படி உன்னைப் பிடிச்சது?” என்றார் ஆச்சர்யமாக.

“உன் பொண்ணு உன் அண்ணன் பையனை வேண்டாம்னு சொல்றா, உனக்குக் கோவம் வரலையாம்மா?” என்று அஞ்சனா சிரிப்புடன் கேட்க

“அவன் அண்ணன் பையனா இருந்தாலும் எனக்கு என் பொண்ணோட சந்தோஷம்தான் முக்கியம். ஆனா உங்கப்பா என்ன சொல்வாரோனுதான் கவலையா இருக்கு” என்று புலம்பினார்.

“நீதான் அப்பாவைப் பேசி சம்மதிக்க வைக்கனும்” அஞ்சனா சொல்ல

“அவர்கிட்ட இப்போ அவசரத்துல எந்த முடிவும் எடுக்காதீங்கன்னு சொல்லிட்டேன் டி. ஆனா அவருக்குத் தீடீர்னு இப்படியானதும் பயந்துப் போய்ட்டார், பொறுமையாத்தான் சொல்லணும். இதுல யமுனா பையன் வேற தாத்தா கேட்டப்ப முடியவே முடியாதுன்னு பொசுக்குனு சொல்லிட்டார். இப்ப போய் கேட்டா ஒத்துப்பார்னு நினைக்கிறீங்களா டி நீங்க?” என்று மகள்களிடம் அங்கையற்கண்ணி கேட்கவும்

“ஒத்துப்பாரா இல்லையான்னு நீதான்மா சொல்லணும். உன் வீட்டுக்காரைப் பத்தி உனக்குத் தான் தெரியும்” என்றாள் அஞ்சனா.

விஷயத்தை சொல்லிவிட்டு அமைதியாய் நின்ற கல்கியைப் பார்த்த அங்கை , “கல்கி, இது வாழ்க்கை விஷயம், இன்னிக்குப் பிடிச்சிருக்கு சொல்லிட்டு நாளைக்கு மாத்தி பேசக் கூடாது. உங்க இரண்டு பேருக்கு ஒத்துவருமான்னு இன்னொரு தடவ யோசிம்மா. உங்க இரண்டு பேருக்கும் நான் பார்த்த அன்னில இருந்து சண்டைதான்” என்றார்.

“ம்மா, ஒத்துவருமா எல்லாம் நான் யோசிக்காம உங்கிட்ட சொல்லல. ஏன் நீயும் அப்பாவும் சண்டைப் போட்டதே இல்லையா? இல்லை அப்பத்தா தாத்தா கூட சண்டைப் போட்டதில்லையா, ஏன் இவளே மாமா கூட சண்டைப் போடாமையா குடும்ப நடத்துறா?” என்று கல்கி எல்லாரையும் இழுக்க

“பார்த்தியாம்மா? இவளைப் பேசினா இவ நம்ம எல்லாரையும் இழுக்குறா. ம்மா, இவளை சமாளிக்க அவராலதான் முடியும். அவ பிடிச்சா அதுல இருந்து மாற மாட்டாம்மா” என்று அஞ்சு சொல்ல யமுனா உள்ளே வர

“என்ன யமுனா? நீ கூட சொல்லவே இல்லை, கல்கி இப்படி சொல்றா?” என்று கேட்க யமுனா கல்கியைப் பார்த்தவர்

“இல்லண்ணி எனக்கே அவர் சொல்லித்தான் தெரியும். இரண்டு பேருமே எங்கிட்ட சொல்லவே இல்லை” என்றவரின் பேச்சில் சோர்வு.

“என்ன யமுனா? இப்படி சோர்ந்து பேசுற?” என்று அங்கை கேட்க

“இல்ல, அண்ணன் என்ன சொல்லும்னு நினைச்சா கவலையா இருக்கு” என்றார்.

“பொறுமையாத்தான் பேசணும் அவர்கிட்ட, இரண்டு நாள் போகட்டும்” என்றார் அங்கையற்கண்ணி.

இரண்டு நாள் கழித்து, சிரஞ்சீவி உதயமூர்த்தியிடன் பேசப் போக, எல்லாரையும் விட யமுனா மிகவும் பயந்து போய் அந்த அறைக்கதவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எந்துக்கு நீ டென்ஷன் ஆகுற யமுனா?” என்ற சூர்யாவுக்குமே மனைவியைப் பார்க்க பார்க்க டென்ஷன் கூடியது.

“என்னத்த நீங்க லவ் மேரெஜ் பண்ணிட்டு இப்படி பயப்படுறீங்க?” அஞ்சனா யமுனாவைக் கேட்க

“இப்படி வீட்ல சொல்ல பயந்துட்டுதான் நாங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப வரை எனக்குப் பயமே போகல” என்றார் யமுனா. எல்லாரும் பேசிக் கொண்டிருக்க கல்கியோ அமைதியாக இருந்தாள்.

அவளின் அமைதி கண்டு அஞ்சனா “என்னடி அப்பா ஒத்துப்பாரா இல்லையான்னு டென்ஷனா இருக்கா?” என்று கேட்க இல்லை என்று தலையசைத்தாள்.

அங்கை “நான் மாமாவை விட்டு பேச சொல்றேன் கல்கி, நீ கவலைப்படாத டி” என்று சொல்ல,

கல்கியோ “ப்ச், எனக்கு அதெல்லாம் கவலை இல்லை. இரண்டு பேரும் பேசி சண்டையில்லாம வெளியே வரனுமேன்னு இருக்கு” என்றாள் கவலையாக. அவள் சொன்னது போலவேதான் அங்கே சூழல் இருந்தது.

என்னவோ பேசணும் என்கிறானே என்று நினைத்த உதயமூர்த்திக்கு கொஞ்சமும் என்ன பேசுவான் என்ற அனுமானம் இல்லை. தனியாகப் பேச நினைக்கிறான் என்பதால் அவர் அறைக்கு அழைத்துப் போக, வரப்ரசாத் சுற்றி வளைக்காமல் பட்டென கல்கியைத் திருமணம் செய்ய கேட்க அவர் எதிர்ப்பார்க்கவே இல்லை.

 

ஆனால் அவரும் யோசிக்கவில்லை, உடனே மறுத்தார்.

 

“அதெல்லாம் உங்களுக்கும் கல்கிக்கும் சரிவராதுங்க தம்பி” என்றதும் சிரஞ்சீவிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

“இல்லை மாமா, கல்கிக்கும் என்னைப் பிடிக்கும். ஒருத்தர் ஒருத்தர் பிடிச்சதாலதான் நான் உங்ககிட்ட பேசுறேன், இப்பவே பேசணும் நான் நினைக்கல. ஆனா நீங்க கல்கிக்கு வேற இடத்துல கல்யாணம் பேசுறதால இப்ப பேசவேண்டியாதாகிடுச்சு” என்றான் பொறுமையாக.

கல்கிக்கும் என்னைப் பிடிக்கும் என்ற சிரஞ்சீவியின் வார்த்தைகள் உதயமூர்த்திக்கு உவப்பானதாக இல்லை.

 

“என் பொண்ணு என்னை மீறமாட்டா” என்றார் நம்பிக்கையாக.

 

“என்னைப் பிடிச்சதால உங்க பேச்சை மீறிட்டான்னு அர்த்தமில்ல மாமா” என்றான் அழுத்தமாக.

 

“என் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு எனக்குத் தெரியும்”

உதயமூர்த்தி ஆரம்பித்தில் இருந்தே மறுத்துப் பேச,

 

வரப்ரசாத்திற்கு என்ன இவர் சொல்வதைக் கேட்க கூட விருப்பமின்றி இருக்கிறாரே என்று கோபம் வந்தது. இது தான் என் முடிவு என்ற அவரின் நிலைப்பாடு அவனுக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.

 

“கண்டிப்பா! உங்களுக்குத் தெரியும்தான் மாமா. அது மாதிரி எங்களுக்கு என்ன வேணும்னு முடிவு பண்ற வயசு எங்களுக்கு இருக்கு. உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா கல்கியைக் கூப்பிட்டுக் கேட்டுப் பாருங்க என்னைப் பிடிக்குமா இல்லையான்னு” என்றான் நம்பிக்கையாக.

 

“உன் அம்மா மாதிரி இல்லை என் பொண்ணு” என்று உதயமூர்த்திக் கோபத்தில் வார்த்தை விட அது சரியாய் சென்று சரமாரியாக சிரஞ்சீவியின் மனதைத் தாக்கியது.

கோபத்துடன் நாற்காலியை விட்டு எழுந்து கொண்டான்.

 

“ஏமி மாமா இதி? எனக்குப் புரியல.. என்ன எங்கம்மா மாதிரி?” என்றவனின் பேச்சில் அம்மாவைப் பேசிய கோபம் அப்படியே தெறித்தது.

பெருமூச்சு எடுத்து தன்னை நிதானம் செய்தவன்
“எஸ், என் அம்மா மாதிரி இல்லை உங்கப்பொண்ணு. அதனாலதான் நான் உங்ககிட்ட வந்து பேசிட்டு இருக்கேன். எங்கம்மா என் நானாவுக்காக எல்லாம் விட்டு வந்தாங்க. ஆனா உங்கப்பொண்ணு வரமாட்டா, அதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க மாமா. உங்களுக்கு ஏன் லவ் மேரேஜ்னா உங்களை மீறின ஒரு விஷயம்னு நினைக்கிறீங்க? இப்பவும் உங்களை மதிச்சதாலதான் உங்க சம்மதம் வேணும் நினைக்கிறோம். உங்களுக்கு ஒரு உணர்வு வரலன்றதுக்காக அந்த உணர்வு இருக்கறவங்களைத் தப்பா நினைக்காதீங்க” என்றான் பொறுமையாக.

“அதெல்லாம் சரிப்பட்டு வராது, என் முன்னாடியே என் பொண்ணைப் பேசினவர் தானே நீங்க? அவளை அடிக்க கை ஒங்கினது கூட அவ எங்கிட்ட சொல்லிட்டா” என்றார் முதல்முறை அவர்கள் சண்டையிட்டதை வைத்து.
கல்கியிடம் உன் அத்தை மகன் மரியாதையாகப் பேசு என்று உதயமூர்த்தி முன்பு சொல்லியிருக்க அப்போது கல்கி சொல்லிவிட்டாள்.

“உங்க தங்கச்சி பையன் என்னை அடிக்க வரான், நீங்க அவனுக்கு மரியாதை தர சொல்றீங்களா?” என்று. அது இன்னும் அவருக்கு மறக்காது இருக்க, கல்கி மீது கடுங்கோபம் வந்தது சிரஞ்சீவிக்கு.

‘அஹம்பாவம் டி உனக்கு’ என்று பல்லைக் கடித்தான்.
தன்னைப் பற்றிய அவரின் பிம்பம் வேறாக இருக்க, அதை மாற்ற நினைத்து,

“நான் அடிச்சா வாங்கிட்டு நிக்குற ஆளா மாமா கல்கி? கண்டிப்பா திருப்பி அடிச்சிருப்பா. உங்க பொண்ணைப் பத்தி தெரியாம பேசாதீங்க” என்று சொல்ல என் பெண்ணை இவனுக்கு என்னை விட தெரியுமா என்று தந்தையாய் அவரின் கர்வம் அங்கே அடிப்பட்டது.

அவர் அமைதியாய் இருக்க,
“இங்க பாருங்க மாமா, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க. கல்கி ஒன்னு உங்க பொண்ணா இருப்பா இல்லை என் மனைவியா இருப்பா. இந்த ப்ளாக்மெயில் எல்லாம் செஞ்சு நீங்க அவ மனசை மாத்திடலாம் நினைக்காதீங்க” என்றான் அழுத்தமாக.

சொல்லிவிட்டு வெளியேறப் போன வரப்ரசாத் கதவருகே சென்று நிதானமாய் உதயமூர்த்தியை ஏறிட்டு
“கல்கி ஒன்னு சொல்லுவா மாமா. என் அம்மா உங்களை ஏமாத்திட்டாங்க, சொல்லாம கல்யாணம் செஞ்சுட்டாங்கன்னு, இப்போ எங்க விருப்பத்தை சொல்லியாச்சு, பார்க்கிறேன் நீங்க என்ன முடிவு எடுக்கிறீங்கன்னு” என்றான் வரப்ரசாத்.

அவன் பேச்சில் கோபம் துளிர்க்க
“உங்கப்பா என் தங்கச்சியை எங்கிட்ட இருந்து பிரிச்சார், நீ என் பொண்ணைப் பிரிக்க நினைக்கிற இல்லை” என்றவரிடம் மிதமிஞ்சிய ஒரு வருத்தம் இருந்தது.

“நீங்க ஏன் மாமா பிரிக்கிறேன் நினைக்கிறீங்க? யாருக்கா இருந்தாலும் நீங்க கல்கியைக் கல்யாணம் செஞ்சுக் கொடுத்தா அவ உங்களை விட்டுப் போய்த்தானே ஆகனும், உங்க தங்கச்சி பையன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்க,

“என் தங்கச்சியே என் நம்பிக்கையைக் காப்பாத்தல” என்று அவர் சொல்லிவிட அந்த பேச்சு வருத்தமாய் இருந்தபோதிலும்,

“அதனாலதான் நான் அதைக் காப்பாத்தனும்னு நினைக்கிறேன் மாமா” என்றான் உடனே.

அதில் ஒரு உறுதி தெரிந்தாலும் சட்டென ஒரு முடிவு எடுக்க முடியவில்லை அவரால். அவரை நெருங்கிய வரப்ரசாத் அவரின் கைப்பிடித்து
“எனக்குக் கல்கியோட சந்தோஷம் ரொம்ப முக்கியம் மாமா, அவளுக்கு நீங்க முக்கியம். உங்களை மீறி என்னைக் கல்யாணம் செஞ்சா கூட அவ கண்டிப்பா சந்தோஷமாவே இருக்க மாட்டா, நிச்சயம் செய்யவும் மாட்டா. என்னோட அம்மாவுக்கு இருக்க அதே குற்றவுணர்ச்சி அவளுக்கும் இருக்கும். என் கல்கிக்கு அது வேண்டாம் மாமா, எனக்கு உங்க சம்மதத்தோட கல்கியைக் கல்யாணம் செஞ்சுக்கனும்னுதான் ஆசை. அவ படிச்சு முடிச்சதும்தான் இதைப் பத்தி பேச நினைச்சேன், பட் சிட்டிவேஷன் இப்படி ஆகிடுச்சு. இனிமே உங்க இஷ்டம் மாமா” என்றவன் அவர் அமைதியாக இருக்கவும் வெளியேறிவிட்டான்.

இவன் வரவும் எல்லார் பார்வையும் இவன் மீதுதான். வரப்ரசாத்தோ இவர்களின் பார்வையைக் கண்டு கொள்ளாது வாசலுக்கு வந்து நிற்க, கல்கி வேகமாய் அவன் பின்னால் போனாள்.

✅ End of Episode 39
How did you feel about this episode?
❤️ 8 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Mrs Beena loganathan Reader 1 week ago

முன் நடந்த காதல் கதை 

மனதை ரணமாக 
மகள் காதலை 
மனது ஏற்க மறுக்க....
முடியாது என்ற பிடிவாதம்
மாமாவிடம்....
முடியும் என்ற பிடிவாதம்
மருமகனும் நிற்க....
மங்கை பாடு திண்டாட்டம்...
❤️ 1 more...
Srichitra Reader 1 week ago

Very nice. 

Kavi Natarajan Reader 1 week ago

Very nice ud ma 💞💞💞💞💞

Sathya Velusamy Reader 1 week ago

மாமா என்ன சொல்லப்போறாரோ....

ஜெகதீஷா இப்படி எல்லோருமாக உன்னோட காதலுக்கு பால் ஊத்திட்டாங்களே.....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top