Episode 38

“இதை முன்னாடியே சொல்லியிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது” என்றான் சிரஞ்சீவி. அவனை முறைத்துப்பார்த்தவள்

“என் விஷயம் இது. எப்ப சொல்லணும்னு நான் தான் டிசைட் செய்யணும். அவன் சொன்னதுக்கு நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். நான் மறுத்த பின்னாடியும் அவன் மனசுல என்னை நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. நீங்க என் லைஃப்ல வரலனாலும் நான் நிச்சயமா அவனை கல்யாணம் செஞ்சிருக்க மாட்டேன், அதான் நிஜம்” என்று சொல்லி வரப்ரசாத்தின் கையைப் பார்த்தாள் கல்கி. இன்னும் கல்கியின் கரத்துடன் இணைந்திருக்க, அதனை உதறிவிட்டு அவள் உள்ளே செல்ல

“கல்கி, ப்ளீஸ்” என்று இவன் பின்னாடியே சென்றான். கல்கி அவன் பேச்சே காதில் விழாதது போல் சமையல்கட்டுக்குள் செல்ல,

“கல்கி, ஏன் என்னை அவாய்ட் பண்ற?” என்று வரப்ரசாத் கேட்க

“அடுத்து இவரா?” என்று அஞ்சனா சிரிப்புடன் பார்த்தாள்.

“அவன் எங்கடி?” என்று கேட்க

“என்னை லவ் பண்றேனு சொன்னதும் அவன் போய்ட்டான் அண்ணி” என்று அஞ்சனாவிடம் பதில் சொன்னான் சிரஞ்சீவி.

“கல்கி, ஆன்ஸர் மீ” என்று வரப்ரசாத் குரல் உயர்த்த

“சத்தம் போடாதீங்க, இது ஒன்னும் உங்க ஸ்டேசன் இல்லை” என்று கல்கி பல்லைக் கடித்தாள்.

“ஓகே! ஓகே! கூல்… சொல்லு என் மேல என்ன கோவம்? நேத்துல இருந்து பேச மாட்டேங்கிற?” என்று அவன் கேட்க, அவனைப் பார்த்த மாதிரி நின்றவள் கோபத்தை அடக்க கைகளைக் கட்டிக்கொண்டு

“அது எப்படி என்னைத் தெரியும்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்வீங்களே? என் கோவம் ஏன்னு தெரியலையா?” என்று அதே கோபத்துடன் கேட்கவும் சிரஞ்சீவிக்கு அந்த நேரத்தில் தன்னை அவள் கணித்ததை எண்ணி சிரிப்புதான்.

“ஸாரி! அது நேத்து நீ மாமா பேசவும் ஒன்னும் சொல்லாம அமைதியாப் போய்ட்டியா..” என்றவனை ஆவேசமாய் நெருங்கியவள்

“அமைதியா போனா…அமைதியா போனா…என்ன இப்போ? அப்பா சொல்ற பேச்சுக் கேட்டு அவனைக் கல்யாணம் செஞ்சுப்பேன்னு நினைச்சீங்களா?” என்று கேட்டவள் மிதமிஞ்சிய ஆவேசத்தில் அங்கிருந்த சம்படத்தை தள்ள, அது வரப்ரசாத்தின் காலில் விழுந்தது.

“ம்மா,!” என்று அவன் கத்த, அவர்கள் பேசட்டும் என அமைதியாய்ப் பார்த்து நின்ற அஞ்சனா தங்கையின் ஆவேசம் கண்டு

“கல்கி! என்னடி இது? அவர் சொல்றதையும் கேளு” என்றாள். சிரஞ்சீவி அந்த சம்படத்தை எடுத்து சமையல் மேஜை மீது வைத்துவிட்டு குனிந்து தன் காலைத் தேய்த்து விட

“என்ன இவர் சொல்றதைக் கேட்கனும்? எல்லாம் அத்தையையும் மாமாவையும் சொல்லணும். புள்ள வளர்த்துருக்காங்க புள்ளையை…செல்லம்… கழுத வயசுலயும் பங்காரம் சிங்காரம்னு மாமா கொஞ்சுறார்ல அதான். அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கொஞ்சமும் நினைப்பில்லாமல் தான் நினைச்சது நடக்கலன்னா உடனே பொசுக்குனு கோவம் வரும்…உனக்குத்தான் கோவம் வருமா?” என்று அவன் தோளில் வேகத்துடன் அடிக்க அஞ்சனா தங்கையின் கைப்பிடித்தவள்

சிரஞ்சீவியைப் பார்த்து “அவ டென்ஷன் ஆகிட்டா, நீங்க ஒன்னும் நினைச்சிக்காதீங்க. இவளுக்குக் கோபம் சட்டுன்னு வந்துடும்” என்றாள்.

வரப்ரசாத்தோ ஒன்றும் பேசாது சின்ன புன்னகையுடன்
“என் அம்மடூவை எனக்குத் தெரியும்?” என்று சொல்லவும்

“என்ன தெரியும் உனக்கு? ஒன்னும் தெரியாது” என்று இன்னும் திட்டினாள் கல்கி.

அடங்காத காதலும் அடக்க முடியாத கோபமும் அவன் மேல் பெருக, கோபத்துடன் தன் அறைக்குள் வந்து நுழைந்தவள் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

“எல்லாரும் வரதுக்குள்ள நீங்க போய் அவளை சமாதானம் செய்ங்க” என்று அஞ்சனா சொல்ல வரப்ரசாத்தும் கல்கியின் அறைக்குப் போனான்.
வரப்ரசாத் வந்து நிற்கவும்
“நேத்து ஹாஸ்பிட்டல்ல அவ்வளவு வேகமா போன எஸ்பி இப்போ ஏன் வரார்?” என்று கல்கி கேட்க

“மாமா அப்படி சொல்வார்னு எக்ஸ்பெக்ட் செய்யல, இந்த ஜெகதீஷ் வேற ஓகே சொல்ல, நீயும் கடைசியா மாமா என் பேச்சுக் கேளுன்னு சொன்னதும் அமைதியா வந்துட்ட…அதான் டென்ஷனாகிட்டேன்”

“ஓஹ், அப்போ நான் மட்டும் எங்கப்பா அப்படி சொல்வார்னு நினைச்சேனா? ஒரு நாள் நீங்க சொன்னீங்க அத்தை மாமாவுக்கு அப்புறம் என்னைத்தான் நீங்க யோசிப்பேன்னு… நேத்து நான் எங்க போய்ட்டேன் உங்க யோசனையில? அப்பா அப்படி சொன்னதும் நான் வருத்தப்படுவேன்னு உங்களுக்குத் தெரியாதா? என்னை யோசிக்கல தானே நீங்க? அப்பா சொன்னா உடனே நான் கேட்டுப்பேனா? நான் உங்களைத் தவிர யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேனு சொன்னது மறந்து போச்சு அப்படித்தானே?” என்று கல்கி சரமாரியாகக் கேள்வி கேட்டாள்.

“நான் நினைச்சேன், நீங்க என்னைப் பார்த்து பயப்படாத பார்த்துக்கலாம்னு உங்க பார்வையால ஆறுதல் சொல்வீங்கன்னு நினைச்சேன், ஆனா உங்களுக்கு உங்க ஃபீலிங்க்ஸ்தான் முக்கியம். அந்த சிட்டிவேஷன்ல என்னை பார்க்க கூட செய்யாம அப்படியே கோவமா வந்துட்டீங்க”

“என்ன சொன்னீங்க? அமைதியா இருந்தேனா? இருந்தேன் தான். வேற என்ன பேச முடியும் அப்போ என்னால? இஷ்டப்பட்டபடி எல்லாம் சும்மா நாள்லேயே எங்க வீட்ல பேசிட முடியாது. அதுவும் அப்பா அப்படி இருக்கும்போது நான் யோசிச்சுதான் பேசணும். எனக்கு என் அப்பா முக்கியம்” என்றபோது கண்கள் சிவந்து கலங்கியிருந்தது.

அவள் முகம் பார்த்தபடி கட்டில் அருகே நெருங்கி நின்றவன்
“தப்புத்தான், இப்போதானே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். போக போக தெரிஞ்சுப்பேன் கல்கி. அப்போ அந்த நிமிஷம் டென்ஷன் ஆகிட்டேன். அப்புறம் அப்பா வந்து சொல்ல, உன்னைப் பார்க்கவும்தான் நீ எப்படி ஃபீல் செய்வன்னு புரிஞ்சது, ஐ அம் ரியலி சாரிடாம்மா” என்று சொல்லி அவள் கைகளைப் பற்றிக்கொள்ள, கல்கி உதறினாள்.

அவள் அடமாய் உதறவும் அவள் கரத்தை விட்டவன் நின்றபடியே அவளை அணைத்துக் கொண்டு

“அம்மடூ! நீயும் என்னை யோசிச்சுப் பாரேன். இட் வாஸ் அ மொண்டரி ஆக்ஷன். அந்த நிமிஷம் அப்படி கோவம் வந்தது நிஜம்தான். நீ உங்கப்பா பேச்சைக் கேட்பேன்னு எல்லாம் நான் நிசங்கா நினைக்கல, பட் அப்ப என்னை லவ் பண்றதை சொல்லாம இருந்திட்டியே, இப்பவும் சொல்லலன்னா மாமா மனசுக்குள்ள வேற ப்ளான்ஸ் பண்ணிடுவாரோன்னு ஒரு டென்ஷன்”

“என்ன டென்ஷன் டென்ஷன்ன்னு, எனக்கில்லையா டென்ஷன்?” என்று கல்கி கத்த

“உனக்கிருக்கா தெரியல, பட் இப்படி கட்டிட்டு இருந்தா எனக்கு டென்ஷனே இல்லை” என்றதும் கல்கி அவனின் அணைப்பில் இருந்து விலக நினைக்க அவன் விட்டால்தானே?

“அதெல்லாம் பக்காவா அரெஸ்ட் பண்ணிட்டேன்” என்று சொல்லி அவள் முகம் பார்த்தான். கல்கி இன்னும் தெளியவில்லை.

“முதல்ல விடுங்க என்னை, அப்பா மட்டும் இப்படி நம்ம பார்த்தார்னா அவ்வளவுதான்”

“என்ன செய்வார்?”

“ம்ம், அப்படியே குண்டூருக்குப் போங்கன்னு துரத்திடுவார்”

“அவுனா? அப்போ ஓகே. நல்லதுதானே?” என்று சொன்னாலும் அவளை விட்டு விலகியவன் அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவளருகே உட்கார்ந்து கொண்டான். இருவருக்குள்ளும் சில நிமிடங்கள் அமைதி. வரப்ரசாத் எதாவது பேசுவானோ என்று பார்க்க, அவன் அமைதியாக இருக்க கல்கி எழுந்து நின்று அவன் காலைத் தொட

“ஹேய்! கால்ல விழுந்து எல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டாம்” என்று சீண்ட

பாவமே என்று அவன் காலைப் பார்க்க நினைத்தவள் அவன் பேசிய பேச்சில் தன் கால் கொண்டு காலில் நன்றாய் அழுத்தி மிதித்தாள்.

“அம்மா” என்று அவன் கத்த அவளோ கண்டுகொள்ளாமல் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

“எவ்வளவு திமிர் உங்களுக்கு?”

“எவ்வளவு பிரேமா உனக்கு? அடிச்சுட்டு இப்போ பார்க்க வேற செய்ற.. உன்னால இதுக்கு மேல என் மேல கோவப்பட முடியாது அம்மடூ. இரண்டு பேருமே நிறைய கோவப்பட்டாச்சு. எப்படி ஒருத்தர் ஒருத்தர் டென்ஷன் பண்றதுன்னு நம்ம இரண்டு பேருக்குமே தெரியும். இந்த காதல்தான் வரல.. ” என்றான்.

“அதனாலதான் இவ்வளவு டென்ஷன்?” என்று கல்கி சொல்ல

“இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம்னு நினைக்கிறியா?” என்று ப்ரசாத் கேட்க

“அதானே நல்லா டென்ஷன் பண்ண சொல்லியாத்தான் தரனும் உங்களுக்கு? இப்படி கேட்கும்போது அப்படியே அறையலாமான்னு வருது எனக்கு. இப்போ அப்படி என்னால யோசிக்க கூட முடியல” என்றாள் கல்கி.

கல்கியின் கோபத்தில் கூட அவள் காதலே தெரிய,

“எனக்கும்.. குண்டூர்ல இருந்து கும்பகோணம் வந்தப்போ என்னோட பெட்டர் ஹாஃப் இங்க இருப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல, அதுவும் முறைச்சுப் பார்த்துட்டு நின்ன பொண்ணை எனக்குப் பிடிக்கும்னு நோ ஐடியா”

“அதெல்லாம் பேசாதீங்க. எனக்கே ஆச்சர்யமாய் இருக்கு. என்ன செஞ்சீங்க என்னை? இப்படித்தான் மாமாவும் எங்கத்தையை மயக்கிட்டார்” என்றதும்

“ஹாஹா, ஏன் நீயும் உங்கத்தையும் என்ன செஞ்சீங்கன்னு நாங்க கேட்கலாமில்ல. நமக்கான அன்பு எங்க இருந்தாலும் அது நம்மை வந்து சேர்ந்திரும் கல்கி” என்றான் காதலாக.

“எல்லாம் நல்லபடியா நடக்கும்தானே?” கல்கி தயக்கமாகக் கேட்க

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் கல்கி, நீ என்னை மட்டும் பாரு” என்றான். உடனே கல்கி எழுந்து நின்று சிரஞ்சீவியைப் பார்க்க, அவனும் சிரிப்புடன் எழுந்து கொண்டான்.

“ஸாரிடாம்மா, நேத்து எல்லார் கூடவும் சேர்ந்து நானும் உன்னை டென்ஷன் பண்ணிட்டேன்” என்று மீண்டும் சொல்ல

“இனிமே பண்ணாதீங்க”

“இந்த ஜெகதீஷ்ட்ட வேற சொல்லிட்டோம். அவன் மாமா கிட்ட சொல்லிட்டா என்ன செய்றது?”

“இவ்வளவு தூரம் வந்துடுச்ச இல்ல, அப்பா வீட்டுக்கு வந்த பின்னாடி பொறுமையாப் பேசிப்போம்” கல்கி தெளிவாக சொல்லவும்தான் அவன் திருப்தியானான்.

“மாமா வீட்டுக்கு வந்த பின்னாடி நான் அவர்கிட்ட பொறுமையா பேசுறேன். நீ இதை நினைச்சு இனிமே கவலைப்படாத. நம்ம கல்யாணம் என் பொறுப்பு” என்றான் நம்பிக்கையாக.

சொல்லியவன் அறையை விட்டு வெளியேற, நிலைக்கதவின் அருகே அவன் செல்ல, அவனின் கைப்பற்றிய கல்கி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“என்ன செய்ற அம்மடூ” என்று கேட்டு அவனும் ஒரு கையால் அணைத்துக்கொள்ள

“எனக்கும் டென்ஷன் குறைய வேண்டாமா?” என்று கேட்டாள்.

“குறைச்சிக்கோ” என்று சொல்லி அவள் தலையை வருடிவிட அஞ்சனா சமையல்கட்டில் இருந்து வெளியே வந்தவள் யுகனைப் பார்க்கலாம் என்று போக, இந்த காட்சியைக் கண்டு விட்டு

“அடப்பாவீங்களா! அங்க என்னடான்னா பாத்திரத்தை உடைச்சு சண்டைப்போட்டுட்டு, இப்போ இப்படி நிக்கிறீங்க. ஒன்னு அந்த ஸ்டேஜ் இல்லை இப்படியா?” என்று கேட்க கல்கியை விட்டு வரப்ரசாத் விலகி நின்றவன் சிரிப்புடன் அவர்களைக் கடந்து போய்விட்டான்.

“இப்போ சண்டை முடிஞ்சாச்சா?” என்று அஞ்சனா கேட்க

“முடிஞ்சாச்சு, நீ என்ன செய்ற?” என்று கேட்டபடி அஞ்சனாவிற்கு உதவிகள் செய்யப் போனாள் கல்கி.

நல்ல காலமாக உதயமூர்த்திக்கு வேறு எந்த கோளாறுகளும் இல்லையென தெரிந்துவிட, சர்ஜரிக்கு அவசியமில்லை என்று அன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூன்று நாட்கள் கடந்திருக்கும். எல்லாரும் விடுப்பு எடுத்திருந்தனர். சூர்யா யமுனாவிடம்

“உங்கண்ணா கிட்ட பேசுவோமா?” என்று கேட்க

“எனக்குப் பயமா இருக்கு” என்றார் அவர்.

“இன்னமுமா உனக்குப் பயம் போகல யமுனா? அவர் வேற எதாவது செய்றதுக்குள்ள நம்ம பேசித்தான் ஆகனும்” என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிரஞ்சீவி வந்தவன் என்ன என்று கேட்க, சூர்யா

“உன் மாமா கிட்ட உங்க விஷயம் பேச சொல்லலாம்னு கூப்பிட்டா உங்கம்மா வர மாட்டேங்கிறா” என்றார்.

“நீங்க பேச வேண்டாம் நானா, நான் ஃபர்ஸ்ட் பேசுறேன்” என்றான். அவனுக்கு என்னவோ அப்பா பேசப்போய் அவரை மாமா எதாவது சொல்லிவிட்டால் என்ற தயக்கம் இருந்தது. அதே நேரம் அப்பாவை யாரும் எதுவும் பேசிவிடக் கூடாது என்ற மகனாக நினைத்தான்.

“நீ பேசப் போறியா? எங்கண்ணா எதாவது சொல்லிட்டா நீ எதிர்த்துப் பேசுவ ப்ரசாத். வேண்டாம், நான் அம்மாவை விட்டு பேச சொல்றேன்” யமுனா சொல்ல

“இல்லைம்மா, நான் முதல்ல பேசுறேன். கல்கிக்குப் ப்ராமிஸ் பண்ணிருக்கேன். அவங்கப்பாவை சம்மதிக்க வச்சு சந்தோஷமா எங்க கல்யாணம் நடக்கும்னு… ஸோ நான் தான் பேசுவேன்” என்றான் முடிவாக.

மாலை வேளையில் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் உதயமூர்த்தி. அவர் அருகே சென்று அமர்ந்தவன்

“இப்போ ஹெல்த் ஓகேவா மாமா?” என்றான்.

“நல்லாயிருக்கேன்ப்பா” என்று அவர் சொல்ல

“உங்க கூட தனியா பேசணும் மாமா” என்றதும் யோசித்தவர்

“எங்க ரூமுக்கு வாங்க தம்பி” என்று சொல்லி அவர் அறைக்கு அழைத்துப் போனார். இவர்கள் போவதையே எல்லாரும் பார்த்து இருக்க, கல்கியைப் பார்த்தவன் கண்கள் மூடித் திறந்து நான் பார்த்துக்கிறேன் என்று ஆறுதல் சொன்னான்.

சிரஞ்சீவி திணறவெல்லாம் இல்லை பட்டென கேட்டுவிட்டான்.

“எனக்குக் கல்கியைக் கல்யாணம் செஞ்சு தரிங்களா மாமா” என்று.

✅ End of Episode 38
How did you feel about this episode?
❤️ 5 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 1 week ago

Very nice. 

❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 week ago

💞💞💞💞💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 week ago

கோபத்திலும் காதலை 

காணும் காதலன்....
காதலை காக்க
கோபம் கொள்ளும் காதலி....
Sathya Velusamy Reader 1 week ago

கல்கி 🔥🔥🔥

SP sir இப்படி பாடுங்க......மாமா உன் பொண்ணை கொடு.....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top