Episode 8

இருவரும் கடைக்கு சென்று உடைகள் வாங்கிவிட்டு இரண்டு மணிக்கு மேல் வீடு வந்தனர். தாரகை வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட, ஆதினி அப்பாவுக்குப் போன் செய்து பேசினாள். அவர்கள் அறையை சுற்றிப் பார்த்தவள் சட்டென்று ஏதோ ஒரு சிந்தனை துளிர்க்க, மையல் மன நிலையோடு அந்த வேலையை செய்தாள்.

“தாத்தா! எனக்கு ஒரு சின்ன வேலை.. வெளியே போய்ட்டு வரேன்” என்ற ஆதினி ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு டவுனுக்குப் போய் வந்தாள்.

இரவு உணவு தயாராக இருக்க, தாத்தாவுக்குப் பரிமாறி அவளும் உண்டு முடித்து ஹாலில் அவளின் ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் தேவையானவற்றைப் பரப்பி வைத்து குறிப்புகள் எடுத்தாள். அரிச்சந்திரன் வந்து விட்டான். அவன் உள்ளே வர, இவள் எழ,

“நீ உன் வொர்க் பாரு, நான் எடுத்து வச்சிக்கிறேன்” என்றபடி குளித்து உடைமாற்ற அறைக்குள் போனான். குளித்து விட்டு ஷார்ட்ஸ், டீஷர்ட்டோடு சாப்பிட வந்தான்.

இவன் உண்ணவும், ஆதினி அவளின் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்தாள். வெளியே கேட் பூட்டி விட்டு வந்து சோஃபாவில் கால் நீட்டி படுத்துக் கொண்டாள். அரிச்சந்திரன் சாப்பிட, ஆதினியின் பார்வை அவனிடமே! அரியுடன் இருக்கும் போது அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.

இப்போதும் ‘என் திருமணம் அம்மா இருந்து நடந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?’ என்ற எண்ணம். இவனிடம் எனக்கு சண்டையும் வந்திருக்காதே என்று தோன்றியது, ஆனால் அப்போது மட்டும் ஹாஸ்டல் போகவில்லை என்றால் இன்னும் இன்னும் இவனோடு மல்லுக்கட்டியிருப்போம் என்று நினைத்தாள்.

கணவன் தன்னை புரிந்து கொண்டான் என்ற பெருமிதவுணர்வு பெருங்காதலை கொடுத்தது. ஆதினி அப்போது இழப்பில் இருந்து மீள தனக்குள் போராடிக் கொண்டிருந்தாள். எப்படியோ நல்லவிதமாக நுழைவுத் தேர்வில் மதிப்பெண் எடுத்து, விரும்பிய பாடம் கிடைத்துவிட எல்லாரிடமும் பாராட்டு.

இருந்தும் மனத்தில் வெறுமை, வெற்றிடம்!

காலை, மாலை இருவேளையும் கல்லூரிக்கு ரவிக்குமார் மகளை அழைத்துச் சென்றார். அரிச்சந்திரன் வீட்டில் இருக்கும் நேரம் ஆதினியிடம் பேசுவான், ஆதினியும் இயல்பாக பேசுவாள்.

தினமும் எழுந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்து போய் வர, ஆதினிக்கு சோர்வாக இருந்தது. அரிச்சந்திரன் அவளை நன்றாகவே கவனித்து கொண்டான், இருந்தும் அந்த நேரம் ஆதினிக்கு தனிமை தேவையானதாக இருந்தது.

அப்பாவிடம், “டெய்லி இப்படி போய்ட்டு வரது டய்ர்ட் ஆகுது, நான் ஹாஸ்டல் போகவாப்பா?” என்று கல்லூரியில் இருந்து வீடு வரும்போது ஆதினி கேட்க,

ரவிக்குமார் எப்போதும் மகள் என்ன கேட்டாலும் “சரிடா” என்றே சொல்லுவார். திருமணம் மட்டுமே அவர் முடிவு, அது கூட அவளுக்கு அரியைப் பிடிக்குமா என்று கேட்டு செய்தார்.

“ஆதிம்மா! இப்ப தானே கல்யாணம் ஆகியிருக்கு, நீ ஹாஸ்டல் போயிட்டா மாப்பிள்ளை தனியா இருப்பார் இல்ல, அப்பா உன்னை டெய்லி கொண்டு விடுறேன் தானே? பஸ்லயா போற டயர்ட் ஆக?” என்று மறுக்க,

ஆதினியோ, “ஹாஸ்டல்னா எட்டு மணிக்கு எழுந்திரிச்சா போதும், இப்போ பாரு நான் தெனமும் அஞ்சு மணிக்கு எந்திரிக்கிறேன். சாயந்திரம் போனா தூக்கமா வருது. நீ ஒன்னும் பெர்மிஷன் கொடுக்க வேண்டாம். நான் ஹாஸ்டல் போக போறேன்” என்றாள்.

அவரோ, “நான் பெர்மிஷன் கொடுக்க வேண்டாம், மாப்பிள்ளையைக் கேட்டு செய்யணும் டா. உன் இஷ்டம் கிடையாது” கொஞ்சம் அழுத்தமாக சொன்னார் ரவிக்குமார்.

அப்பாவின் மறுப்பு! இதெல்லாம் ஆதினிக்குப் புதிது. கேட்டால் கிடைக்கும் என்ற நிலை மாறி கொந்தளிக்க வைத்தது. அப்பாவிடம் பேசாதவள் அரிச்சந்திரனிடம் அன்றிரவே,

“நான் ஹாஸ்டல் போறேன்” என்றாள் முடிவாக.

“ஏன் ஆதினி?”

கேள்விகள் பிடிக்கவில்லை.

“எனக்கு பிடிக்கல.. இங்க இருக்க பிடிக்கல.. எனக்கு தனியா இருக்கணும்” குரல் உயர்த்திக் கத்தினாள். கண்கள் கலங்கி போனது. அரிக்கு ஆதினியைப் புரிந்து கொள்ள முடிந்தது, சில சமயம் அவள் அப்பாவிடம் பேசாமல் இருக்க, இவன் கேட்டால்,

“என் அம்மா போய்ட்டாங்க, இவங்களும் என்னை தொரத்தி விட்டாங்க..” என்று கோபமாகப் பேசுவாள். இங்கு எல்லாரும் அன்பு காட்டினாலும் அவள் அம்மாவை, அவர் வாழ்ந்த வீட்டினை நினைத்து ஏங்கினாள்.

இப்படி ஒரு சூழலில் படிக்கவும் முடியாது, இவளால் இயல்பாகவும் இருக்க முடியாது என்று உணர்ந்து,
“சரிம்மா, ஹாஸ்டல் போலாம். நீ ப்ரோசீஜர் பார்த்து சொல்லு..” என்றவன்

“இல்லை, நாளைக்கு நானே அழைச்சிட்டு போறேன். ஓகே?” என்று ஆதினி முகம் பார்க்க, அவள் தலையசைத்தாள்.

சிலருக்கு மாற்றங்களை ஏற்க நேரம் தேவைப்படும், அதனை அரி புரிந்து செயல்பட்டான். ஆதினிக்கு அப்பாவை போல் மறுக்காமல் இவன் ஒத்துக்கொண்டதே பேராறுதலாக இருந்தது.

ரவிக்குமார் இது தெரிந்து ஒத்துக்கொள்ளவில்லை. மகள் மீது பாசம் இருந்தாலும் அவள் கணவனுடன் இருக்க வேண்டும் என்றே விரும்பினார். அரிச்சந்திரன் தவறாக நினைப்பானோ என்று நினைத்தார்.

“ஆதிம்மா! நீ ஹாஸ்டல் போய்ட்டா அப்பா தெனைக்கும் உன்னை எப்படிடா பார்க்கிறது?” என்று சோகமாகக் கேட்க,

“பஸ்லயா வர போற? பைக்தானே அப்படி பாசமிருந்தா வந்து டெய்லி பாருப்பா. என்னை கட்டிக்கொடுத்தா கடமை முடிஞ்சது நினைச்ச இல்ல.. என் வீட்டுக்காரர் என்னை ஹாஸ்டல் சேர்த்துட்டார். உன் பெர்மிஷன் எல்லாம் தேவையில்லை” என்றுவிட்டாள்.

அரிச்சந்திரன் அப்போதும் அவன் இயல்பாக தினமும் அழைத்து நலம் கேட்க, ஆதினிக்குச் சிறிது நாட்கள் அமைதி தேவைப்பட,

“ஹாஸ்டல் அனுப்பிட்டு, சும்மா சாப்பிட்டியா? என்ன பண்றனு கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க” என்று கத்திவிட, அரிச்சந்திரனுக்குக் கோபம். அதிலிருந்து முக்கியமான விஷயம் இல்லை என்றால் அழைப்பதில்லை.

ஆதினி கல்லூரியில் படிப்பு, நண்பர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாய் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அரிச்சந்திரனை பிடித்துத் திருமணம் செய்தாலும், அந்த நேரம் இருந்த சூழல் அவளை அன்பினை காட்ட விடவில்லை. மெல்ல மெல்ல நிதர்சனம் புரிந்து இயல்புக்குத் திரும்பி விட்டாள்.

இவளாகவே விடுமுறையில் வீடு வந்த போது,
“இனிமே ஹாஸ்டல் போகல, அப்போ கோவம் கத்திட்டேன். சாரி” என்று அவன் முன் நிற்க, அரிச்சந்திரனுக்கு அவள் இயல்பானதில் மகிழ்ச்சியே. இருந்தும் கூட, ஆதினியின் அவசரம் பிடிக்கவில்லை.

“படிச்சு முடிக்கிற வரைக்கும் ஹாஸ்டல்லயே இரு ஆதினி, லீவுக்கு வீட்டுக்கு வா. அதான் உன் படிப்புக்கு நல்லது, அண்ட் இங்க இருந்தா ஃபேமிலி லைஃப் பேலன்ஸ் பண்றது கஷ்டம்” என்றான் பொறுமையாக.

“அப்போ பிடிக்கலனு சொன்னதுக்குகாக சொல்றீங்களா? இப்போ பிடிச்சிருக்கு. அப்போ எனக்கு எதுவுமே பிடிக்கலை. நான் இனிமே போகல” என்றாள் முடிவுடன்.

அரிச்சந்திரனுக்குக் கோபம் வந்து விட்டது.
“அது என்ன எல்லாம் உன் இஷ்டமா? நினைச்சு நினைச்சுப் பேசுவியா நீ?” என்று கத்திவிட்டான்.

அதன் பின்னே ஆதினி ஹாஸ்டல் வந்து விட்டாலும், அரிச்சந்திரனையே மனம் சுற்றியது, விரும்பித் தேடியது. தான் மீண்டும் வீடு வருகிறேன் என்றதும் சந்தோஷப்படுவான் என்று நினைத்திருக்க, அரியின் கோபம் எதிர்ப்பார்க்கவில்லை.

ஆதினியின் கர்வம் அடிவாங்கியது! இதையெல்லாம் யோசித்தபடி அவள் படுத்திருந்தாள்.

‘என்னை பிடிச்சு ஏன் அவாய்ட் பண்றான்?’ என்ற வினா அவளிடம்.

அரி சாப்பிட்டதும், ஆதினி படுத்திருப்பதுக் கண்டு,
“தூக்கம் வந்தா உள்ள போய்த் தூங்கு” என்றான்.

“இல்லை, உங்களோட பேசணும்” என்றதும் தாத்தாவை ஒரு முறை சென்று பார்த்தவன்,

“வா, வெளியே உட்கார்ந்துப்போம்” என்று சொல்லி அவன் தூணில் சாய்ந்துகொண்டான்.

ஆதினி எதிர்ப்புற தூணில் சாய போக,
“நீ என்ன எதிர்க்கட்சியா? நம்ம எப்பவும் ஒரே கட்சி! பிரச்சனைதான் எதிர்க்கட்சி. வா பேசலாம்” என்றபடி ஆதினியின் கையைப் பற்ற, ஆதினிக்கு அவன் உள்ளங்கை கதகதப்பு பிரியத்தைக் கடத்தியது.

அவளும் இறுக்கமாக அவன் கையைப் பற்றியபடி, அவன் பக்கம் வந்து உட்கார்ந்தாள்.

அரிச்சந்திரனை கண்ணெடுக்காது பார்த்தாள். ஆதினிக்குள் காதல் சுழல்!! இனி இவனோடு தான் இருக்க வேண்டும் என்ற பேராவல். அதனை சொல்லக் கூட தோன்றாமல், சொல்லில் வடிக்காமல் பார்வையே பாஷையாக பேசினாள்.

என்ன அப்போதும் தன்னை யோசித்தவள், தலைவனை யோசிக்கவில்லை.

‘இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே’

கதைப் பற்றிய கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க ப்ரண்ட்ஸ். உடனே updates’க்கு, contact page ல இருக்கும் வாட்ஸப் பேஜில் இணையுங்கள். நாளைக்கு இந்த கதை பதிவு வராது.

✅ End of Episode 8
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 4 days ago

Nice 

Mrs Beena loganathan Reader 17 hours ago

அவளின் ஆட்டத்திற்கு

அவன் ஆட வேண்டுமோ
அவளின் பிடித்தம்
அவனையும் பிடிக்கணுமோ..
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top